PUBLISHED ON : ஏப் 09, 2026 04:15 AM

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு: முதல்வர் ஸ்டாலின்
தலைமையில், ஐந்து ஆண்டுகளாக நல்லாட்சி நடந்துள்ளது. 'மகளிர் உரிமைத் தொகை,
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என அனைத்தும் உயர்த்தப்படும்' என, தி.மு.க.,
தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு எந்த பொருட்களையும்
வாங்கி தரப் போவதில்லை. அதற்கு பதிலாக, 'பெண்களுக்கு, 8,000 ரூபாய்
மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து
ஆண்டுகளாக நல்லாட்சி தந்தோம்னு சொல்றாங்களே... அதுவே, இவங்க வெற்றிக்கு
வழிவகுக்காதா... பிறகு ஏன் ஏகப்பட்ட சலுகை அறிவிப்புகளை
வெளியிட்டிருக்காங்க?
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: லோக்சபா கூட்டத்தொடர் ஆண்டுக்கு மூன்று முறை கூடுகிறது. அங்கு எனக்கு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனால் , அடித்தட்டு மக்களின் உணர்வுகளை சட்டசபையில் பிரதிபலிக்க, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டேன். ஆனால், எதிர்க்கட்சிகள் சில வதந்திகளை பரப்பியதால், அந்த முடிவை கைவிட்டேன்.
தமிழக சட்டசபையிலும், முதல்வர் புகழ் பாடினால் தான், நீண்ட நேரம் பேச விடுவாங்க என்பது இவருக்கு தெரியாதா?
கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை: பார் லிமெ ன்ட் கூட்டத்தொடரை, வரும் 16, 17 தேதிகளில், பிரதமர் மோடி அரசு கூட்டியிருக்கிறது. தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய இரண்டு முக்கியமான மாநிலங்களில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், இறுதிக்கட்ட பிரசாரம் மிக தீவிரமாக நடக்கிறது. ஏப்., 23ல் ஓட்டுப்பதிவு முடிந்த பின், பார்லிமென்டை கூட்ட முடியாதா? நேர்வழியில் மக்களை சந்தித்து, அவர்களின் ஆதரவை பெற்று, தேர்தலில் வெல்ல முடியாத பா.ஜ., இதுபோல் குறுக்கு வழியில் பிரசாரத்தை முடக்க நினைப்பதும், அதற்காக மதிப்பு மிகுந்த பார்லிமென்டை பயன்படுத்த நினைப்பதும் அவமானகரமானது.
இவங்க பிரசாரம் பண்ணாம இருந்துட்டா, தமிழகத்தில் தி.மு.க., - காங்., கூட்டணி கரை சேராதுன்னு நினைக்கிறாங்களோ?
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'தமிழகத்தில் ஜாதி, மத கலவரங்கள் இல்லை. மணிப்பூர் போல் தொடர் வன்முறைகள் இல்லை' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஜாதியை ஒழித்து விட்டதாக சொல்லும் தி.மு.க., தமிழகத் தில் ஜாதி அரசியலை தவிர, வேறு எதுவுமே செய்யவில்லை.
தமிழகத்தில், வீதிக்கொரு ஜாதி கட்சி இருப்பதே இவரது குற்றச்சாட்டுக்கு ஆதாரம்!

