PUBLISHED ON : ஏப் 10, 2026 01:15 AM

தி.மு.க., கூட்டணியில் உள்ள, மனிதநேய மக்கள் கட்சியின் நாகை தொகுதி
வேட்பாளர் ஜவாஹிருல்லா பேட்டி: திராவிட மாடல் ஆட்சியை குறை கூறுவதற்கு
அ.தி.மு.க. , பொதுச்செயலர் பழனிசாமியிடம் ஒன்றுமில்லை. மருத்துவமனையில்
ஜெயலலிதா இருந்தபோது, 'இட்லி சாப்பிட்டார், ஆப்பிள் சாப்பிட்டார்' என,
பழனிசாமி கூறினார். ஆனால், ஜெ.,வை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை.
இரும்பு சிறையில், ஜெ.,வை பூட்டி வைத்தவர் பழனிசாமி. ஆனால், கருணாநிதி
மருத்துவமனையில் இருந்தபோது, அனைத்து தலைவர்களையும் பார்க்க அனுமதித்தனர்;
அனைத்தும் வெளிப்படையாக நடந்தது.
ஜெ., மருத்துவமனையில் இருந்தப்ப, பல
அமைச்சர்கள் மாதிரிதான் பழனிசாமியும் இருந்தாரு... ஜெ.,வை பார்க்க அனுமதிக்காதது எல்லாம், சசிகலா தரப்பு செய்தது... அரசியலுக்காக வீண் பழி
சுமத்தலாமா?
நீலகிரி தொகுதி தி.மு.க., - எம்.பி., ராஜா பேச்சு: இந்த தேர்தல் தமிழகத்துக்கும், டில்லிக்குமான தேர்தலாகும். 'அரசியல் சட்டத்தை மாற்றுவோம், இந்த தேசத்தை ஹிந்து தேசமாக மாற்றுவோம். ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே பழக்க வழக்கம். நாங்கள் சொல்லும் மொழியைத்தான், நீங்கள் கற்க வேண்டும்' என, பா.ஜ.,வினர் கூறுகின்றனர். எனவே, இந்த தேர்தல் இந்த ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்ற போகிற தேர்தல். அதற்காக, தி.மு.க., வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவர் சொல்ற மாதிரி எங்கயும் பா.ஜ.,வினர் பேசிய மாதிரி தெரியலையே... இல்லாத விஷயங்களை இவரா கற்பனை பண்ணிக்கிட்டு, பா.ஜ.,வினர் மீது பழி போடுறாரே!
மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சரும், அவிநாசி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான முருகன் பேட்டி: முதல்வர் ஸ்டாலினுக்கு, தன் துறையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. பொம்மை முதல்வராக உள்ளார்; அவரது மருமகன் தான் ஆட்சி செய்கிறார். ஸ்டாலினுக்கு பின் அவரது மகன் உதயநிதி, உதயநிதிக்கு பின் அவரது மகன் இன்பநிதி என ஒரே குடும்பம், தமிழகத்தை கொள்ளை அடிக்கிறது. அந்த குடும்பத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
முதல்வர் குடும்பம் தவிர, தி.மு.க., அமைச்சர்கள் எல்லாம் அப்பழுக்கற்றவர்கள்னு சொல்ல வர்றாரா?
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி:
என் ஆலங்குடி தொகுதியில், இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ள, துணை சுகாதார நிலையங்கள் போன்ற வசதிகள் அனைத்தையும், வரும் ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவேன். 2030ம் ஆண்டுக்குள், ஆலங்குடி தொகுதியை, குடிசைகள் இல்லாத சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்.
கடந்த அஞ்சு வருஷத்தில், குடிசைகள் இல்லாத தொகுதியாக மாற்றாம இருந்துட்டு, 'அடுத்த அஞ்சு வருஷம்'னு இவர் வாய்தா வாங்குவதை, இவரது தொகுதி மக்கள் ஏத்துக்குவாங்களா?

