PUBLISHED ON : ஏப் 11, 2026 12:00 AM

தமிழக பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் பேச்சு:
சாத்தான்குளத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட
ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில், கொடூரமாக செயல்பட்ட ஒன்பது போலீசாருக்கு
நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்ததை நான் உட்பட பலரும் வரவேற்றுள்ளோம்.
இந்நிலையில், ஆலங்குளம் அருகே மருதம்புதுாரில் கள் இறக்கியதாக, மணிகண்டன்
என்பவர் மீது எஸ்.ஐ., இசக்கிமுத்து அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டதில்,
அவரது காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.
தன்னை கடுமையாக தாக்கிய
கும்பலிடம் இருந்து தப்பும் நோக்கில் தான், இசக்கிமுத்து துப்பாக்கியால்
சுட்டதாக சொல்றாங்க... துப்பாக்கியை எடுக்காம, அவருக்கு ஏதாவது
ஆகியிருந்தால், 'போலீசாரையே தாக்கும் அளவுக்கு வன்முறை வெறியாட்டம்
நடக்குது'ன்னு இவரே சொல்லியிருப்பாரு!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக நிதி கேட்டால், மத்திய அரசு தருவதில்லை. மதுரைக்கும், கோவைக்கும் மெட்ரோ ரயில் கேட்டு விண்ணப்பித்தால், அதையும் மறுக்கிறது. மெட்ரோ திட்டத்திற்கும், மஹாராஷ்டிரா மாநில பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னவிசுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால், 'மதுரையில் பா.ஜ., வெற்றி பெற்றால் தான் மெட்ரோ திட்டம் வரும்' என, அவர் பேசுகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பா.ஜ., வெற்றி பெற்று, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வந்தாலும் வேண்டாம்னு இவர் சொல்றாரோ?
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: தேர்தல் கமிஷன், தமிழக தலைமை செயலரையும், காவல் துறை உயர் அதிகாரியையும் பணியிட மாற்றம் செய்திருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல். தமிழக மக்கள் பா.ஜ.,வின் சூழ்ச்சிகளை முற்றிலும் அறிந்து வைத்திருப்பதால், தேர்தல் ஆணையத்தின் வரம்பு மீறிய இத்தகைய நடவடிக்கைக்கு சட்டசபை தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டுவர். இத்தகைய பணியிட மாற்றம் வாயிலாக, அ.தி.மு.க., - பா.ஜ., தோல்வி உறுதியாகிஇருக்கிறது.
'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல, மாற்றப்பட்ட அதிகாரிகளுக்கு இவர் வக்காலத்து வாங்குறது, அவங்க எல்லாம் ஆளும் கூட்டணிக்கு சாதகமா இருந்தாங்கன்னு அர்த்தமாகிடாதா?
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வந்துள்ள கோர்ட் தீர்ப்பு, போலீசார் கொடூர மனப்பான்மையில் இருந்து விடுபடவும், மக்களுக்கு அரணாக, நண்பனாக இருக்கவும் உணர்த்துகிறது. இனியாவது, 'லாக் அப்' மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புகிறேன்.
சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் பாடம் கற்றிருந்தால், திருப்புவனம் அஜித்குமார் 'லாக் அப்' மரணம் நடந்திருக்காதே!

