PUBLISHED ON : ஏப் 12, 2026 02:08 AM

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி அறிக்கை: அ.தி.மு.க.,
பொதுச்செயலர் பழனிசாமி, தேர்தல் ஜுரத்தில், என்ன பேசுகிறோம் என தெரியாமல்,
முதல்வரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்கிறார். எதிர்க்கட்சி தலைவர் என்பதை
மறந்து பேசுகிறார். அவரது பேச்சுக்கு தமிழக மக்கள், தேர்தலில் சரியான
பாடம் புகட்டுவர். பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறிய
பழனிசாமி, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து உள்ளார். அவரது சொல் ஒன்று; செயல்
வேறு என, முரண்பாடாகவே உள்ளது. தி.மு.க.,வும், 2014 லோக்சபா தேர்தலில்
காங்., கட்சியுடன் உறவை முறிச்சுக்கிட்டு, 2016 சட்டசபை தேர்தலில்
மறுபடியும் கூட்டணி வச்சுக்கலையா?
இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு: வரும் 14ம் தேதி, அம்பேத்கரின் 136வது பிறந்த நாள். தமிழக அரசு, அவரது பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, அம்பேத்கர் பிறந்த நாள் விழாக்களுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் நெருக்கடிகள் மற்றும் குழப்பங்களை தவிர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்பேத்கர், மகாத்மா காந்தியை போல ஒரு தேசிய தலைவர்... அவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் சில கட்சிகள் அடைப்பது தான், இந்த மாதிரி பிரச்னை களுக்கு காரணம்!
தி.மு.க., ஆதரவாளரான, நடிகர் எஸ்.வி.சேகர் அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முதல்வராக வேண்டும் என, நினைக்கிறார். ஆனால், அவர் எதிர்க்கட்சி தலைவராக மட்டும் தான் ஆக முடியும். தமிழக பா.ஜ., வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம் பெறவில்லை. அவர் பூத் ஏஜன்டாக இருப்பேன் என்கிறார். வேண்டுமானால், அவர் நோட்டீஸ் கூட கொடுக்க போகலாம். தேர்தல் முடிந்த பின், அண்ணாமலை தனி கட்சி துவக்குவார் என்பது என் எண்ணம்.
தேர்தல் ஆருடங்களை கணிப்பதில் வல்லவரா இருப்பாரோ...? தங்களது வெற்றி, தோல்வி குறித்து தெரிஞ்சுக்க, வேட்பாளர்கள் இவரை அணுகலாமே!
தமிழக காங்., - எஸ்.சி., துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை: ஜாதி ஆணவ படுகொலைகள் என்பவை, மற்ற கொலைகளில் இருந்து வேறுபட்டவை. இதில், குடும்பத்தினரே கொலையாளிகளாக உள்ளனர். அதனால், ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் தேவைப்படுகிறது. அது, தண்டனை சட்டமாக மட்டும் இல்லாமல், ஆணவ கொலை தடுப்பு சட்டமாகவும், ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணத்தில் இணைந்த, இணைய விரும்புவோரை பாதுகாக்கும் சட்டமாகவும் இருக்க வேண்டும்.
கடந்த அஞ்சு வருஷமா, ஆட்சியில் இருந்த, கூட்டணி கட்சியான தி.மு.க.,விடம் இந்த சட்டத்தை நிறைவேற்ற இவர் அழுத்தம் தராதது ஏன்?

