PUBLISHED ON : மே 19, 2026 12:03 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
மத்திய நீர்வள அமைச்சகத்தின் அறிக்கையின்படி, தமிழகத்தில், 50,197 நீர்நிலைகள் பயன்பாடற்ற நிலையில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கோடை காலத்தை, நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாக தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும். பருவமழை காலத்திற்கு முன், பயன்பாட்டில் இல்லாத இந்த 50,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் ஆழப்படுத்தி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இந்த நீர்நிலைகளை மீட்டெடுத்தாலே, தண்ணீருக்காக பக்கத்து மாநிலங்களை நாம் சார்ந்திருக்க வேண்டியதில்லை!
த.வெ.க., நிர்வாகியும், ஜோதிடருமான ரத்தன் பண்டிட் பேட்டி: வரும் 2029ல் பிரதமராகும் யோகம் ராகுலுக்கு இல்லை; விஜய்க்கு தான் இருக்கிறது. பிரதமர் மோடிக்கு இருக்கும் யோகத்தில், கால்வாசிதான் ராகுலுக்கு இருக்கிறது. வரும் லோக்சபா தேர்தலுக்கு பின், நிச்சயம் மூன்றாவது அணி உருவாகும். விஜய்க்கு, அப்போது யோகத்தின் உச்சத்தில் இருக்கும் வாய்ப்பு உள்ளது.
இவர் சொல்ற மாதிரி விஜய் பிரதமராகி டில்லிக்கு போயிட்டா, தமிழக முதல்வர் பதவியை இவருக்கு கொடுத்துடுவாங்களோ?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில், 43 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதாவது, எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில், 19,000 அரசு மருத்துவர்கள் மட்டுமே உள்ள நிலையில், இத்தகைய சாதனை படைக்க முடிகிறதென்றால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பணியிடங்களை இரு மடங்காக அதிகரித்தால், இந்த சாதனை பல மடங்காக அதிகரிக்கும் என்பதை, புதிய அரசு புரிந்து கொள்ளும் என நம்புகிறோம்.
சுகாதார துறைக்கு அமைச்சராக வந்திருப்பவர், முன்னாள் அரசு அதிகாரி அருண்ராஜ் என்பதால், இந்த கருத்தை நிச்சயம் பரிசீலனை செய்வார்னு நம்பலாம்!
தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன் அறிக்கை:
தி.மு.க., தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. உதயநிதியை துணை முதல்வராக அவசரப்பட்டு அறிவித்திருக்க வேண்டாம். பல மூத்த அமைச்சர்கள் ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் மரியாதையற்ற அணுகுமுறையில் நடந்து கொண்டதும் ஒரு காரணம். நீண்டகால தி.மு.க., விசுவாசிகள் புறக்கணிக்கப்பட்டதாலும், அ.தி.மு.க., பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதும் ஒரு காரணம்.
இதுவே, தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றிருந்தால், 'உதயநிதியால் தான் வெற்றி'ன்னு அமர்க்களம் பண்ணியிருப்பாங்க!
