PUBLISHED ON : மே 27, 2026 12:00 AM

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி: த.வெ.க.,வுடன் கூட்டணி
சேர்ந்து ஆட்சியில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் கட்சியை, தி.மு.க.,
விமர்சித்துள்ளது. தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளை, அடிமைத்தனத்துடன்,
பண்ணையார் மனப்பான்மையுடன் நடத்தியது. ஜனநாயகத்தில், எந்த கட்சி யாருடன்
சேர வேண்டும் என்பது, அந்த கட்சி தலைவரும், அக்கட்சியின் செயற்குழுவும்
எடுக்க வேண்டிய முடிவு. நம் நாட்டின் பெரிய இயக்கமான காங்கிரசை, தி.மு.க.,
சிறுமைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. காங்., தங்களை விட்டு போனதில் கூட
தி.மு.க.,வுக்கு வருத்தமில்லை... ஆட்சியில் இவங்க தராத பங்கை, த.வெ.க.,
குடுத்துடுச்சே என்பது தான், அவங்களது பெரிய ஆதங்கம்!
சென்னை மயிலாப்பூர் மேற்கு பகுதி அ.தி.மு.க., செயலர் விஜயபாஸ்கர் பேச்சு: சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், தி.மு.க., கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகி, த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்தது. இதை, 'முதுகில் குத்திய செயல், துரோகம்' என, தி.மு.க., விமர்சிக்கிறது. 1999 முதல் 2004 வரை மத்திய பா.ஜ., கூட்டணி அரசில் இருந்து விட்டு, ஆட்சி முடிவில் காங்கிரஸ் கூட்டணிக்கு தி.மு.க., மாறியது மட்டும் முதுகில் குத்திய செயல் இல்லையா; துரோகம் இல்லையா? உங்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
நியாயமான கேள்வி தான்... ஆனா, இதை பா.ஜ.,வினர் அல்லவா கேட்டிருக்கணும்!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் அறிக்கை: காங்கிரஸ், தங்கள் முதுகில் குத்தி விட்டதாக தி.மு.க., கூறுகிறது. இது, காங்கிரசின் பழக்கம். எனவே, முதல்வர் விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தி.மு.க.,வின் முதுகில் குத்திய காங்கிரஸ், முதல்வர் விஜயின் முதுகில் குத்துவதற்கு எந்தவித தயக்கமும் காண்பிக்காது. லோக்சபாவில், காங்கிரசுக்காக, பா.ஜ.,வை கண்மூடித்தனமாக தி.மு.க., எதிர்த்தது. இது தவறு என்பதை, தி.மு.க., இப்போது உணர்ந்திருக்கும்.
ஆமாம்... வர்ற 2029 லோக்சபா தேர்தலில் தாமரையும், உதயசூரியனும் ஒன்றாக களத்தில் நின்றாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை!
தமிழக பா.ஜ., தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் அமைப்பாளர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை: மாற்றம் என்பது வெறும் அரசியல் மாற்றமாக இல்லாமல், அரசின் செயல்முறை மாற்றமாக இருக்க வேண்டும். துறை சார்ந்த அனுபவமிக்க நிர்வாகிகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி, நிர்வாக அமைப்புகளுக்குள் இருந்த துவேஷ மனப்பான்மைகளை களைந்து, மக்கள் நலனை முன்னிறுத்தும் ஆட்சி முறையை உருவாக்க முயற்சி எடுக்கும் முதல்வர் விஜய்க்கு பாராட்டுகள்.
எதிர்க்கட்சி என்றால், எல்லாவற்றையும் கண்டிக்காமல், இவரை போன்ற ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் தரணும்!
