PUBLISHED ON : ஜூலை 13, 2026 12:31 AM

தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் சபாநாயகர் அப்பாவு பேட்டி:
'கரூர் பிரசார கூட்டத்திற்கு மதியம் 12:30 மணிக்கு விஜய் வருவார்' என, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் கூறியது, முதல்வர் விஜய்க்கு நினைவிருக்கறதா? ஆனால், ஏழு மணி நேரம் தாமதமாக வந்து, 41 பேர் இறப்பிற்கு யார் காரணம் என்பதை, உங்கள் மனசாட்சியிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களை போல பழிவாங்கும் எண்ணம் இருந்தால், அன்றைய முதல்வர் ஸ்டாலின் உங்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பார். ஆனால் ஸ்டாலின், அரசியலில் எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடிப்பவர்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடிச்சு பலியானவங்களின் குடும்பத்தினருக்கு கூட நேர்ல போய் ஆறுதல் சொல்லாத அன்றைய முதல்வர் ஸ்டாலின், நள்ளிரவே கரூருக்கு ஓடோடி போனது ஏன்?
இளைஞர் காங்., தமிழக தலைவர் சூர்யபிரகாஷ் பேட்டி:
மக்களிடம் யாருக்கு நற்பெயர் உள்ளதோ, அவர்களுக்கே உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப் படும். தமிழகத்தில் இளைஞர் காங்கிரசுக்கு, 3.80 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இம்முறை உள்ளாட்சி தேர்தலில், இளைஞர்களுக்கு தான் அதிக வாய்ப்பு அளிக்க உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில், த.வெ.க.,விடம் எங்கள் கட்சிக்கு 50 சதவீதத்துக்கு மேல் வாய்ப்பு கேட்க உள்ளோம்.
உங்க கட்சிக்கு, 50 சத வீதம் இடங்களை தந்துட்டால், வி.சி.க., - கம்யூ.,க்களுக்கு எல்லாம் தந்தது போக, ஆளுங்கட்சியான த.வெ.க.,வை, உங்களை விட குறைவான இடங்கள்ல போட்டியிட சொல்றீங்களா?
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி:
நாங்கள் தி.மு.க., கூட்டணியில் தேர்தலை சந்தித்தோம். இப்போது, த.வெ.க., கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். முதல்வர் விஜய் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால், 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவார். அதனால், இந்த ஆட்சியை கலைக்க பகல் கனவு காண வேண்டாம். அடுத்த, 10 ஆண்டுகளுக்கு விஜய் அரசை அசைக்க முடியாது.
அடுத்த, 10 ஆண்டுகளுக்கு விஜய் அரசு நீடிக்கும்... ஆனா, அவர் கூட்டணியில் நீங்க நீடிப்பீங்களா?
பெரம்பலுார் தி.மு.க., -- எம்.பி., அருண் நேரு பேச்சு:
மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவது, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அதிகாரிகள் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு திட்டங்களை செ யல்படுத்துவதில் ஏதேனும் இடர்ப்பாடுகள் இருப்பின், என் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகளை நான் விரைந்து மேற்கொள்வேன்.
உங்க அப்பா நேரு, முன்னாள் அமைச்சராகிட்டாரு... 2029 லோக்சபா தேர்தலுக்கு பின் நீங்களும், 'மாஜி' எம்.பி.,யாகிடக் கூடாதுன்னு, மக்கள் பணிகள் மீது அக்கறை காட்டுறீங்களோ?
