PUBLISHED ON : செப் 16, 2026 12:00 AM

பா.ஜ., தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தமிழக பிரிவு தலைவர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை:
திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை, அந்நாட்டு அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி வழங்கி உள்ளார். ஆனால், அதன் ஆன்மா அழகிய தமிழ். ரஷ்ய மண்ணில் தமிழின் பெருமையை தாங்கி நிற்கிறது திருக்குறள். இது, தமிழின் தொன்மைக்கும், திருக்குறளின் உலக பொதுமைக்கும் பிரதமர் மோடி அளித்த மற்றுமொரு மரியாதை.
திருக்குறளின் பெருமைக்கு, 'காப்புரிமை' வாங்கியவங்க மாதிரி பேசும் தி.மு.க.,வினர், இதை எல்லாம் பாராட்ட மாட்டாங்களே!
தி.மு.க., வர்த்தகர் அணி செயலர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேட்டி:
கொழுந்தில் வாசம் வீசுவது மரிக்கொழுந்து; மொட்டிலேயே வாசம் தருவது மல்லிகை; காய்ந்தும் மணம் தருவது மனோரஞ்சிதம். இந்த மூன்று மலர்களும் ஒரு வீட்டிற்கு தேவை. அதுபோல, தி.மு.க.,விற்கு இளைஞர்களும் வேண்டும்; எங்களை போல நடுத்தர வயதினரும், 70 வயதுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்களும் வேண்டும்; அவர்களின் வழிகாட்டுதல் தான், கட்சியை உயர்த்தும்.
உவமானம் எல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா, உங்க கட்சியின் இளைஞரணி செயலரான உதயநிதி இதை ஏத்துக்குவாரான்னு தான் தெரியலை!
தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, கடலுார் மாவட்டம், கிள்ளை ஊராட்சி தலைவர் ரவீந்திரன் அறிக்கை:
முதல்வர் விஜய் பேச்சை கண்டித்து, ஒருங்கிணைந்த கடலுார் மாவட்டத்தில் நடந்த தி.மு.க., ஆர்ப்பாட்ட மேடையில், கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் படம் இருந்தது; மேற்கு மாவட்டச் செயலர் கணேசன் படம் இல்லை. ஏன் என கேட்டால், ஏதாவது குற்ற முத்திரை குத்தி என்னை கட்சியில் இருந்து நீக்குவர். கால் நடுங்கி கணேசனுக்கும் கேட்க திராணி இருக்காது.
நீங்க எதிர்பார்த்த மாதிரியே கட்சியில் இருந்து, 'கல்தா' தந்துட்டாங்க... அடுத்து த.வெ.க., தானா?
தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
முதல்வர் விஜயின் அறை, 6 கோடி ரூபாய் செலவில் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுகிறது. கோட்டையையே 1,200 கோடி ரூபாய் செலவில் பட்டினப்பாக்கத்துக்கு மாற்ற முடிவு; எம்.எல்.ஏ.,க்களுக்கு சொகுசு கார்; கார் பந்தயம் பார்ப்பதற்கு, அரசு செலவில் லண்டன் பயணம். இப்படி ஊதாரித்தனத்தில் மூழ்கி திளைக்கிறது, கோட்டு மாடல் சர்க்கார். இந்த ஆட்சி ஐந்தாண்டுகள் நீடித்தால், தமிழகம் திவாலாகிவிடும்.
தமிழக அரசு, 60 வருஷங்களா வாங்கியிருந்த கடன் தொகை, 5 லட்சம் கோடி ரூபாய்... இதை அஞ்சே வருஷ தி.மு.க., ஆட்சியில, 10 லட்சம் கோடி ரூபாயா ஏற்றிய, 'சாதனை'யை மறந்துட்டு பேசலாமா?
