PUBLISHED ON : செப் 19, 2026 01:03 AM

முன்னாள் அமைச்சரும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான பெரியசாமி பேச்சு:
முதல்வர் விஜய்க்கு அரசியல் அகர வரிசை தெரியாது. ரசிகர் மன்ற உறுப்பினர்களை வைத்து கட்சி ஆரம்பித்தார்; தேர்தலை சந்தித்தார். 'ரீல்ஸ்' போட்டனர்; ஆட்சிக்கு வந்துள்ளனர். அப்படி இருந்தும், 34 சதவீத மக்களே அவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். மீதி 66 சதவீத மக்கள், த.வெ.க.,வை ஏற்றுக் கொள்ளவில்லை. உங்க வாதத்துக்கே வருவோம்... 2021 சட்டசபை தேர்தலில், ஆட்சிக்கு வந்த உங்க கட்சி வாங்கிய மொத்த ஓட்டுகள், 38 சதவீதம்... அப்படின்னா, 62 சதவீத மக்கள் உங்களை ஏத்துக்கலை தானே!
வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேச்சு:
அன்றைய முதல்வர் ஸ்டாலின், விஜயை ஒரு அரசியல் தலைவராகவே கருதவில்லை. பா.ஜ.,வையும், அ.தி.மு.க.,வையும் விமர்சிப்பதிலேயே தி.மு.க.,வினர் குறியாக இருந்தனர். அந்த சமயத்தில் நான், 'ஆர்.எஸ்.எஸ்., பெற்றெடுத்த பிள்ளைகள் விஜயும், சீமானும்' என விமர்சித்தேன். அதை வைத்து, 'அன்று அப்படி சொல்லிவிட்டு, இப்போது எப்படி த.வெ.க., கூட்டணியில் சேர்ந்தார்?' என, சிலர் கேட்கின்றனர்.
'அன்று பா.ஜ.,வையும், அ.தி.மு.க.,வையும் கடுமையாக விமர்சித்த தி.மு.க., இன்று அவங்களை விமர்சிப்பதில்லையே ஏன்'னு நீங்களும் திருப்பிக் கேளுங்க!
முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் பேட்டி: ஒரு காலத்தில் தங்க இடமில்லாமல், மாற்றுத் துணி இல்லாமல், அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சென்னையில் வாழ்ந்தேன். ஆனால், இன்று நன்றாக வாழ்கிறேன். கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக, என் குடும்பத்தை கவுரவமாக வாழ வைத்திருக்கிறேன். வீடு, பங்களா இவற்றை யாரும் நாளைக்கு பேசப் போவதில்லை. வறுமையில் சிக்காத வாழ்க்கையை கடைசி காலத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
சொல்வது நுாற்றுக்கு நுாறு உண்மை... ஆனா, பரம ஏழைகளா சென்னைக்கு வந்து கோடீஸ்வரர்களான பலரும், தங்களது கடந்த காலத்தை மறைக்கத் தானே பார்க்கிறாங்க!
காங்கிரசைச் சேர்ந்த, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி: தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, ஒரு தேர்ந்த அரசியல்வாதி தான்; மேடையில் மட்டும் ஏன் இப்படி பேசுகிறார் என தெரியவில்லை. மேடையில் பேசும்போது சிலருக்கு பயம் வரும்; அது அவருக்கு இருக்கிறது. மேடையில் நெறி சார்ந்து பேச வேண்டும். நாராச நடையில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஆனா, அப்படி பேசியவர் மீது, தி.மு.க., தலைமை ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கா...? அவரது பேச்சை தலைமையே ஊக்குவிப்பது தெளிவா தெரியுது!
