PUBLISHED ON : ஜூன் 18, 2026 01:04 AM

ஆம்புலன்ஸ் ஓட்டுவதுடன், இறந்தவர்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும், 'சொர்க்க ரதம்' என்ற பெயரிலான வாகனத்தை ஓட்டும் திண்டுக்கல் மாவட்டம், அய்யம் பாளையத்தைச் சேர்ந்த, 20 வயதாகும் நிதினா:
இளங்கலை வரலாறு மூன்றாமாண்டு படிக்கிறேன். இது, அப்பாவின் தொழில் தான். பள்ளி விடுமுறை நாட்களில், அவருடன் என்னையும் அழைத்து செல்வார். அவர் செய்யும் வேலைகளை பார்த்தபடியே இருப்பேன். அதனால், அவர் செய்யும் அனைத்து வேலைகளும் எனக்கு அத்துப்படி.
ஒரு நாள், அப்பா ஊரில் இல்லை. அன்று இரவு 11:00 மணிக்கு, 'ஒருவர் இறந்து விட்டார். ஐஸ் பெட்டி வேண்டும்' என்று ஒரு குடும்பத்தினர், எங்கள் வீட்டிற்கு வந்து கேட்டனர். அப்பா இல்லாததால், அம்மா, 'பெட்டி இல்லை' என்று கூறினார். அவர்களின் அவசரத்தை புரிந்து, 'நான் ஐஸ் பெட்டி எடுத்து வருகிறேன்' என்றேன்; அப்போது என் வயது, 16.
ஆட்டோவில் ஐஸ் பெட்டியை எடுத்து சென்று, அங்கேயே இருந்து எல்லா வேலைகளையும் தனி ஆளாக செய் து முடித்தேன். அன்று ஊரே என்னை ஒரு மாதிரியாக பார்த்தது; ஆனால், அப்பா பெருமையாக பார்த்தார்.
ஆரம்பத்தில் துக்க வீடுகளுக்கு நான் தனியாக சென்றபோது, 'என்ன பொட்டப்புள்ள வந்துருக்கு...' என, மேலும் கீழும் பார்த்தனர். பல விமர்சனங்களை எதிர்கொண்டேன். உறவினர்கள், நண்பர்கள் எங்களிடம் பேசாமல் இருந்தனர்; அது குறித்து அப்பா கவலைப்பட்டது கிடையாது.
அடுத்து, இரண்டு ஆம்புலன்ஸ்கள், ஐந்து ஐஸ் பாக்ஸ்கள், இரண்டு ரதங்கள் என்று தொழிலை கொஞ்சம் விரிவுபடுத்தினோம். கஷ்டப்படுவோருக்கு இலவசமாக இறுதிச் சடங்கு செய்வோம்.
நாங்கள் இலவசம் என்று கூறினாலும், எங்களிடம் வேலை பார்ப்போர், எங்களுக்கு தெரியாமல் மக்களிடம் பணம் வசூலித்தது தெரிந்தது. 'நம்பிக்கையான ஒருவர் வேண்டும்' என்று அப்பா கூறினார். அப்போது தான் நான், 'டிரைவிங் லைசென்ஸ்' வாங்கி இருந்தேன். அதனால், 'நானே பார்த்துக் கொள்கிறேன்' என்றேன். ஆனால், அம்மாவுக்கு உடன்பாடு இல்லை; சண்டை போட்டு சம்மதிக்க வைத்தேன்.
ஊரில் ஒரே நேரத்தில் இரண்டு இழப்புகள் வந்தால், நானும், அப்பாவும் வேலைகளை பிரித்து கொள்வோம். சடலத்தை துாக்குவதில், எனக்கு எந்த அசிங்கமும் இல்லை. இறந்தவருக்கு நான் கொடுக்கும் கடைசி மரியாதையாக அதை பார்க்கிறேன்.
பெண்கள் சுடுகாட்டுக்கு செல்லக் கூடாது என்று சொல்லும் சமூகத்தில் தான், இறப்பு சடங்குகள் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்கிறேன். இதை நான் புரட்சியாக பார்க்கவில்லை. நம் சமூகத்தில் ஜாதி ரீதியாக பல கட்டுப்பாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கின்றன; அதை எல்லாம் உடைக்க வேண்டும் என்று தான் செய்கிறேன்.
தொடர்புக்கு:
76049 30448
