/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இந்திய - சீன தலைவர்களை மிக அருகில் சந்தித்தேன்!
/
இந்திய - சீன தலைவர்களை மிக அருகில் சந்தித்தேன்!
PUBLISHED ON : மே 02, 2025 12:00 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, கிருஷ்ணன் புதுார் கிராமத்தில் தயாராகும், மாணிக்க மாலைக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஐந்தாவது தலைமுறையாக மாணிக்க மாலை கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள வனிதாஸ்ரீ சரவணன்: நான் பி.டெக்., மற்றும் எம்.பி.ஏ., படித்துள்ளேன்.
பூ கட்டும் கலையை, சிறுவயது முதலே அப்பாவிடம் கற்று, அவருக்கு உதவியாக இருந்து வந்தேன். நேர்த்தியான முறையில், 15 ஆண்டுகளாக மாணிக்க மாலை கட்டி வருகிறேன்.
என் தலைமுறையில் தான், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் கழகம் வாயிலாக பிறருக்கு கற்றுத் தருகிறோம். மாணிக்க மாலையானது பின்னல் முறையில் கட்டப்படுவதால் கொஞ்சம் சிரமம்.
பூ என்று தெரியாத வண்ணம், சம்பா நாரில் அரளிப்பூ, நொச்சி இலையை மடித்து வைத்துக் கட்டுவர்.
சிவப்பு மற்றும் வெள்ளை நிற அரளிப்பூக்கள், பச்சை நிறத்துக்கு நொச்சி இலையை பயன்படுத்துவர். பாரம்பரியம் மாறாமல் நாங்கள் இன்றும் அதேபோல செய்து வருகிறோம்.
இரண்டரை ஜான் அளவிலான மாலையை கட்டி முடிக்க, ஐந்து மணி நேரமாகும். இந்த மாலைகளை நாங்கள் ஆறு தலைமுறைகளாக பத்மநாப சுவாமி கோவிலுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
தாத்தா காலம் வரை திருவிழா காலங்களில் மட்டும் அனுப்பினர். அதன்பின் தினமும் ஆறு ஜோடி மாணிக்க மாலைகளை நாங்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
சித்திரை திருநாளில் பத்மநாப சுவாமி கோவிலில் இந்த மாலையை பார்த்த மகாராஜா, 'இது என்ன மாணிக்கக்கல் பதித்த மாதிரி இருக்கிறதே... இது மாணிக்க மாலையா...' என்று ஆச்சரியப்பட்டு கேட்டதால், இந்த மாலைக்கு மாணிக்க மாலை என்ற பெயர் நிலைத்து விட்டது.
'தமிழ்நாடு கைத்தறி 2019, இந்தியா - சீனா செகண்ட் இன்பார்மல் சமித்' மாமல்லபுரத்தில் நடந்தது. அதில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மாணிக்க மாலையை, 'டிஸ்பிளே' செய்வதற்காக நான் சென்றிருந்தேன்.
பிரதமர் நரேந்திர மோடி, மாணிக்க மாலை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது, அதன் மகிமைகள் குறித்து சீன அதிபரிடம் விளக்கினார். சீன அதிபரும் மிகவும் வியந்து கேட்டார்.
இரு நாட்டு தலைவர்களை நான் மிக அருகில் சந்தித்ததற்கும், எனக்கு இத்தனை பெருமை கிடைத்ததற்கும் நான் இந்த குடும்பத்தில் பிறந்தது ஒரு காரணம்.
அடுத்த தலைமுறைக்கான கைத்திறன் போட்டியில் நான் முதல் பரிசு பெற்றுள்ளேன். அதன்பின் பூம்புகார் மாவட்ட விருதும், பூம்புகார் மாநில விருதும் பெற்றுள்ளேன்.
மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்று பயிற்சி அளித்திருக்கிறோம். இன்னும் பலருக்கு, இந்த மாணிக்க மாலை கட்ட பயிற்சி தர வேண்டும் என்று விரும்புகிறேன்.

