PUBLISHED ON : ஏப் 27, 2026 12:05 AM

நாகை மாவட்டம், நன்னிலத்தைச் சேர்ந்த குமரன்: என் குடும்ப நிதி நிர்வாகத்தின் ஆணி வேரே, என் மனைவி ஆனந்தி தான். 'நான் கல்லுாரிக்கு சென்று படிக்கவில்லை' என்று தன்னடக்கத்துடன் என் மனைவி சொல்வார்.
ஆனாலும், சமயோஜிதமாக செயல்படுவதில் கில்லாடி என நிரூபித்து காட்டியவர். அரசு ஊழியராக நான் சிறப்பான சம்பளம் வாங்கிய போது, அப்போது, எனக்கு சொந்த வீடு கிடையாது; சேமிப்பும் இல்லை.
வரவுக்கும், செலவுக்கும், சரியாக போய் விட்டது என்று சொல்லும் நிலைமையில் தான் இருந்தேன்.
திருமணம் முடிந்ததும், சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையை விதைத்ததே மனைவி தான்.
ரொக்கமாக எதுவும் கையிருப்பு இல்லாத நிலையில், சீதனமாக கொடுத்த நகைகளை அடகு வைத்து, திட்டமிட்டு, 900 சதுர அடியில் வெற்றிகரமாக வீட்டை கட்டி முடித்து, புது வீட்டில், என்னை அமர வைத்தது என் மனைவி தான்.
வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை, என் ஊதியத்தில் அடைத்து முடிக்க, என் மனைவி மேற்கொண்ட நிதி நிர்வாக நடவடிக்கைகள் மெச்சத் தகுந்தவை.
இதனுடன், வழக்கமான கடமைகளிலும், அவர் குறை வைக்கவில்லை... இரண்டு மகன்களையும், உயர் கல்வி வரை படிக்க வைப்பதற்கு தேவையான திட்டமிடலையும் அவர் தான், 'பக்கா'வாக செய்து முடித்தார்.
பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், நிம்மதியாக வாழ்கிறோம்... காரணம், வருமானம் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருப்பது தான்.
எனக்கு கிடைத்த, 'செட்டில்மென்ட்' தொகையை, உரியவாறு முதலீடு செய்து, தொடர்ச்சியாக மாதந்தோறும் வருமானம் வரும் வகையில் நடவடிக்கைகள் எடுத்ததும் என் மனைவியே.
அலுவலக பணியில், மாவட்ட ஆட்சியர் முதல், அனைத்து உயர் அலுவலர்களிடமும், 'திறமைசாலி' என, பெயர் எடுத்திருந்தாலும், வீட்டு நிர்வாகத்திலும், நிதி நிர்வாகத்திலும் நான் பெரிதாக எ துவும் செய்யவில்லை.
எல்லாமே என் மனைவி தான். பணத்தை நிர்வாகிக்க தெரிந்த மனைவி அமைந்தது, எனது பாக்கியமே.
என் மனைவியின் பண நிர்வாகத்தையே, என் மகன்களும் பின்பற்றி, தற்போது குடும்பத்துக்கு பக்கபலமாக இருக்கின்றனர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
சம்பாதிக்கும் பணத்தை, பெருக்கிக் கொள்ளும் திறன் இருந்தால், நிச்சயம் வளமாக வாழலாம் என்பது என் மனைவி வாயிலாக நான் கண்ட உண்மை!
