/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இதயத்துக்கு தர வேண்டியது மகிழ்ச்சி மட்டுமே!
/
இதயத்துக்கு தர வேண்டியது மகிழ்ச்சி மட்டுமே!
PUBLISHED ON : பிப் 07, 2024 12:00 AM

பிரபல இதயநல மருத்துவர் வி.சொக்கலிங்கம்:
வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில், 1945ல் பிறந்தேன். தந்தை டாக்டர் வெங்கடாசலம். இரண்டாம் உலகப் போரில், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். தாய் சம்பூரணம் அம்மாள். அதிகம் படிக்கவில்லை என்றாலும், அதிக அறிவாற்றல் கொண்டவர்.
அப்பா டாக்டராக இருந்தாலும் என்னை டாக்டருக்கு படி என்று சொன்னதில்லை; நான் தான் ஆர்வத்துடன் படித்து, இதய மருத்துவரானேன்.
நான் பிறந்த சி.எம்.சி., மருத்துவமனையிலேயே பணியில் சேர்ந்து, ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கிறேன். நிறைய மாணவர்களை உருவாக்கினேன்.
இன்றைக்கும் அந்த மருத்துவமனையின் ஆலோசகராக தொடர்கிறேன்; அது தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி தான் என்னையும், என் இதயத்தையும் இளமையாக இயக்கிக் கொண்டிருக்கிறது.
இயற்கையின் படைப்பில், நம் உடலிலுள்ள எல்லா உறுப்புகளும், 125 ஆண்டுகள் வரை நாம் உயிருடன் வாழ ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இன்றைய மனிதன், அதிலிருந்து, 100 ஆண்டுகளை கழித்துவிட்டு, 25 வயதிலேயே இறக்கிறான் என்றால், அதற்கு அவன் மனநிலை மட்டும் தான் காரணம்.
இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன், தனக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் பெற்று விட்டான். ஆனால், தனக்குள் இருக்கும் அமைதியை இழந்து வாழ்வதால் தான் எல்லா நோய்களுக்கும் உள்ளாகிறான்.
ஆரோக்கியமான இதயம் ஒரு நிமிடத்துக்கு, 72 முறை, ஒரு நாளுக்கு லட்சம் முறை என்று நாம் உயிருடன் இருக்கும் வரை துடித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு வினாடி கூட இதயம் ஓய்வெடுத்து கொள்வதில்லை.
இப்படி ஓய்வின்றி இயங்கி கொண்டிருக்கும் இதயத்துக்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்... அது, மகிழ்ச்சியான மனநிலை மட்டும்.
கடந்த, 55 ஆண்டு களுக்கு முன் என்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், 70, 80 வயதை கடந்தவர்கள். என் பணிக் காலம் கூடக் கூட 50, 60... பின் 40, 30 வயதுடைய நோயாளிகள் வருகின்றனர்.
'பாஸ்ட் டிராவல், பாஸ்ட் புட், பாஸ்ட் கம்யூனிகேஷன்' என்று, எல்லாமே பாஸ்ட் லைப்பாக இருக்கும்போது நிமிடத்துக்கு, 72 முறை துடிக்க வேண்டிய இதயத்தை வேகமாக இயக்குகின்றனர்; அதனால், வாழ்க்கையும் வேகமாக முடிந்து விடுகிறது.
மகிழ்ச்சியை வெளியில் இருந்து எடுக்க வேண்டும் என்று நினைத்தால் ஏமாந்து விடுவீர்கள். மகிழ்ச்சி நமக்குள்ளே தான் இருக்கிறது; அதை உணர வேண்டும்.
இதய பாதிப்பை பொறுத்தவரை, 'கை அளவு உள்ள இதயத்தை காப்பாற்றும் பொறுப்பு அவரவர் கையில் தான் உள்ளது' என்று, என்னிடம் வருவோரிடம் கூறுவேன்.

