/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நிறைய சரக்கு ஆட்டோக்கள் வாங்கணும்!
/
நிறைய சரக்கு ஆட்டோக்கள் வாங்கணும்!
PUBLISHED ON : டிச 02, 2025 12:00 AM

ஆண்களின் கோட்டையாக கருதப்படும், சரக்கு ஆட்டோ ஓட்டும் தொழிலில் அதிரடியாக களமிறங்கி இருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த பிரியா:
குடும்ப சூழல் காரணமாக, 14 வயதிலேயே எனக்கு திருமணம் செய்து விட்டனர். அதன்பின் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. ஆனால், படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறவில்லை.
கணவரிடம் கேட்டு, தனிப்பயிற்சி கல்லுாரி எனும், 'டுட்டோரியல் காலேஜில்' சேர்ந்து, 10ம் வகுப்பு படித்தேன். குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, படித்து தேர்ச்சி பெற்றேன்.
அதன்பின், செவிலியர் பயிற்சி முடித்து, ஈரோடு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்தேன். என் கணவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு விபத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அதனால், கணவருக்கு உதவியாக நானும், ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன். கணவரிடம் கேட்டு, தனியாக ஒரு ஆட்டோ வாங்கினேன். செவிலியர் வேலையை விட்டு, ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன்.
கணவருக்கும், எனக்கும் சின்ன பிரச்னை ஏற்பட்டு, மனக்கசப்பு வந்து பிரிந்து விட்டோம். 15 ஆண்டுகளாக நான் ஓட்டி வந்த ஆட்டோவை கணவர் எடுத்துக் கொண்டார். வருமானம் இன்றி தவித்த போது, ஆட்டோ ஓட்டுவதை விட, சரக்கு ஆட்டோ ஓட்டினால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என, தோன்றியது.
அதனால், 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, நான்கு ஆண்டுகளுக்கு முன், சரக்கு ஆட்டோ வாங்கினேன். விமர்சனங்கள் எழுந்தாலும், எதையும் கண்டு கொள்ளாமல், தைரியமாக களத்தில் இறங்கினேன்.
மரக்கடை, இரும்புக்கடை என, வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். சரக்கு ஆட்டோவை பொறுத்தவரை, அனைத்து நாட்களும் சம்பாதிக்கலாம் என, கூற முடியாது.
சரக்கு வரும் போது, நேரம், காலம் பார்க்காமல் ஆட்டோ ஓட்டுவேன். எந்நேரமும் வேலை செய்ய தயாராக இருந்ததால், பலரும் தங்கள் கடைக்கு சரக்கு ஏற்றி, இறக்க என்னை அழைத்தனர். மற்ற ஊர்களுக்கும் பயணம் செய்ய ஆரம்பித்தேன். வருமானமும் அதிகமானது. பணத்தை சேமித்து, இன்னொரு சரக்கு ஆட்டோ வாங்கி, ஒரு ஓட்டுநரை நியமித்து சம்பாதிக்கிறேன்.
என் மகளும், மகனும் இன்ஜினியரிங் படிக்கின்றனர். இன்னும் நிறைய சரக்கு ஆட்டோக்களை வாங்கி, தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்பது என் ஆசை.

