தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அமைச்சர் அழைப்பை புறக்கணித்த தி.மு.க.,வினர்!

அமைச்சர் அழைப்பை புறக்கணித்த தி.மு.க.,வினர்!

அமைச்சர் அழைப்பை புறக்கணித்த தி.மு.க.,வினர்!


PUBLISHED ON : பிப் 08, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமோசாவை கடித்தபடியே, ''ஏனோ தானோன்னு செயல்படுறாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''எந்த திட்டத்துல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள்ல, சிறை துறை சார்பில், 'கூண்டுக்குள் வானம்' என்ற திட்டத்தை செயல்படுத்துறாங்க... அதாவது, புத்தகங்களை தானம் வாங்கி, சிறை நுாலகங்கள்ல கைதிகளை படிக்க வைக்கிறது தான் இந்த திட்டத்தின் நோக்கம்...

''இதுக்காக, அங்கங்க நடக்கிற புத்தக கண்காட்சி யில் சிறை துறையினர் ஸ்டால் போட்டு, புத்தகங்களை நன்கொடையா வாங்கி, சிறை நுாலகங்கள்ல வைப்பாங்க... சமீபகாலமா நடக்கிற புத்தக கண்காட்சிகள்ல சும்மா பேருக்கு தான் ஸ்டால் போடுறாங்க...

''இது சம்பந்தமா எந்த முன்னறிவிப்போ, விளம்பரமோ பண்றது இல்ல... இதனால, அதிகமா புத்தகங்கள் வர்றதும் இல்ல... 'இந்த திட்டத்துல, சிறை துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுனா நல்லாயிருக்கும்'னு புத்தக ஆர்வலர்கள் சொல்றாங்க...''என்றார், அந்தோணிசாமி.

''அடக்கியே வாசிக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 கவுன்சிலர்கள் இருக்கா... மாநகராட்சி தி.மு.க., வசம் இருந்தாலும், அ.தி.மு.க.,வுக்கு 16 கவுன்சிலர்கள் இருக்கா ஓய்...

''சொத்து வரி விதிப்பு குளறுபடிகளால மட்டும், கடந்த 13 வருஷத்துல மாநகராட்சிக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கு... இதை பத்தி எல்லாம், மாநகராட்சி கூட்டங்கள்ல அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பேசறதே இல்ல ஓய்...

''எந்த மக்கள் பிரச்னைக்கும் ஓங்கி குரல் குடுக்கவும் மாட்டேங்கறா... அவாளை வழிநடத்தவும் சரியான தலைவர் இல்ல... சில கவுன்சிலர்கள், தி.மு.க.,வினருடன் ஒட்டி உறவாடி, காரியங்களை சாதிச்சுக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''அமைச்சர் கூப்பிட்டும் போகல வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''யாருப்பா அவங்க...'' என கேட்டார் அன்வர்பாய்.

''மதுரை தி.மு.க.,வுல அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், நகர செயலர் தளபதின்னு தனித்தனி கோஷ்டிகள் இருக்கு... முதல்வர், துணை முதல்வர் விழாக்கள், கட்சி கூட்டங்கள்ல இவங்க ஒற்றுமையா கலந்துக்கிட்டாலும், உள்ளூர்ல எதிரும், புதிருமா தான் இருக்காவ வே...

''சமீபத்துல, மதுரை வந்த முதல்வரின் மருமகன் சபரீசன், அமைச்சர் தியாகராஜனை பார்க்க அவரது வீட்டுக்கு போயிருக்கார்... அதுக்கு முன்னாடியே அமைச்சர், நகர செயலர் தளபதிக்கு போன் போட்டு, சபரீசனை வரவேற்க கட்சி நிர்வாகிகளை தன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி அழைப்பு குடுத்தாரு வே...

''தளபதியும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரை, அமைச்சர் வீட்டுக்கு போகும்படி சொல்லியிருக்காரு... அப்படியிருந்தும், விரல் விட்டு எண்ணக்கூடிய நிர்வாகிகளே அமைச்சர் வீட்டுக்கு போயிருக்காவ வே...

''முக்கிய நிர்வாகிகள் யாரும் அந்த பக்கம் எட்டியே பார்க்கல... காரணம் கேட்டதுக்கு, 'தியாகராஜன், மதுரைக்கு வந்தா அவரது தொகுதி நிர்வாகிகளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தர்றாரு... நகர நிர்வாகிகளை கண்டுக்கிறதே இல்ல... அதனால தான், யாரும் அங்க போகல'ன்னு சொல்லியிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

பேச்சு முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us