PUBLISHED ON : செப் 18, 2026 01:33 AM

“வேட்டி, சேலை உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்துறாங்க...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
“எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிற, 29 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும், 2027ல் வர்ற பொங்கலுக்கு 8.75 லட்சம், 'பெடல்' தறி சேலைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் பண்ணி, பணிகள் நடந்துட்டு இருக்கு...
“அதேநேரம், கடந்த தி.மு.க., ஆட்சியில, கள்ளச்சந்தையில் தரமில்லாத, 'இரண்டாம் நம்பர்' நுால் வாங்கி சேலைகள் உற்பத்தி செய்து வச்சிருந்தவங்க, இந்த வருஷம் அவற்றை அரசிடம் தள்ளி விட்டுறலாம்னு நினைச்சிருந்தாங்க...
“ஆனா, பொங்கலுக்கு தரமான ஜரிகை போட்ட சேலைகள் வழங்க த.வெ.க., அரசு உத்தரவு போட்டுட்டதால, பழைய சேலைகளை அதிகாரிகள் வாங்க மறுக்கிறாங்க... இதனால, புதிய ரக சேலைகள் உற்பத்திக்கு இடையூறா, மாவட்டத்துல ஆங்காங்கே நெசவாளர்கள் போராட்டங்கள் நடத்துறாங்க...
“இந்த போராட்டங்களை, தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ.,வும், மா.கம்யூ., நிர்வாகி ஒருத்தரும் துாண்டி விடுறாங்க... மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு எதிரா, போராட்டங்களை திசை திருப்பவும் முயற்சி நடக்குதுங்க...” என்றார் அந்தோணிசாமி.
“தங்கபாண்டியன், மாரியப்பன் தள்ளி உட்காருங்க வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “கடன் மோசடியை மூடி மறைக்க பார்க்காவ வே...” என்றபடியே தொடர்ந்தார்...
“திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில், அப்பாவி ஏழைகளிடம் வீட்டுப் பத்திரங்களை வாங்கிட்டு ஒரு வக்கீல் கடன் குடுத்திருக்காரு... அப்புறமா, தன் ஆடிட்டர் நண்பருடன் சேர்ந்து, திருப்பூர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தில் மேலாளரா இருந்தவர் உதவியுடன், அந்த பத்திரங்களை அடகு வச்சு, பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிட்டாரு வே...
“கடன் விண்ணப்பங்கள்ல, சம்பந்தமில்லாத ஒரு வீட்டு முன், விண்ணப்பதாரரை நிறுத்தி போட்டோ எடுத்து மோசடி பண்ணியிருக்காவ... ரெண்டு வருஷத்துக்கு பிறகு, இப்ப தான் இந்த மோசடி வெளியில தெரிஞ்சிருக்கு வே...
“ஏமாந்த ஏழைகள் போலீசில புகார் குடுத்திருக்காவ... இதுக்கு இடையில, மோசடியில் ஈடுபட்ட மேலாளர் ஓய்வுல போயிட்டாரு... இப்ப இதை மூடி மறைக்கும் விதமா, 'சமரசமா போயிடலாம்'னு, புகார் குடுத்தவங்களிடம் மோசடி கும்பல் பேச்சு நடத்திட்டு இருக்கு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“அருள்மொழி, மோகன், நடராஜன் எல்லாம் வரா... சுக்கு காபி குடும் நாயரே...” என்ற குப்பண்ணா, “மகனை மாவட்டச் செயலராக்க போறார் ஓய்...” என்றார்.
“தி.மு.க., தகவலா பா...” என பட்டென கேட்டார் அன்வர்பாய்.
“ஆமா... த.வெ.க., அரசை கண்டித்து, தமிழகம் முழுக்க சமீபத்துல தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்துனால்லியோ... திருச்சியில நடந்த ஆர்ப்பாட்டத்துக்கான பேனர்கள்ல, பெரம்பலுார் எம்.பி.,யும், நேருவின் மகனுமான அருண் படத்தையும் பெருசா போட்டிருந்தா...
“எம்.பி., என்ற முறையில், அவர் படத்தை போட்டோம்னு சொன்னாலும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்களான சிவா, கவிஞர் சல்மா படங்களை போடல ஓய்...
“அதாவது, 'கட்சி மறுசீரமைப்பில் திருச்சியை நாலு மாவட்டங்களா பிரிச்சிருக்கா... இதுல, ஒரு மாவட்டத்துக்கு தன் மகன் அருணை செயலராக்க அமைச்சர் நேரு விரும்பறார்... அதனால தான், அவரது படத்தை பெருசா போட்டு முன்னிலைப்படுத்திட்டு இருக்கார்'னு, திருச்சி தி.மு.க.,வினர் பேசிக்கறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.
