PUBLISHED ON : ஜூலை 07, 2026 12:00 AM

பெஞ்சில் அமர்ந்ததுமே, “எம்.எல்.ஏ.,வின் வாஸ்து நம்பிக்கையை கேளுங்க வே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த தொகுதியில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“விருதுநகர் மாவட்டம், சாத்துார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கடற்கரை ராஜ்... பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனை எதிர்த்து ஜெயிச்சாரு வே...
“இவரது எம்.எல்.ஏ., அலுவலகம், வெள்ளக்கரை ரோட்டுல இருக்கு... ஆனா, அதுல வாஸ்து குறைபாடு இருக்குன்னு சொல்லி, அதை அவர் பயன்படுத்துறதே இல்ல... இதே ரோட்டுல ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்க எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்திருக்காரு... இதனால, அரசு கட்டிய எம்.எல்.ஏ., அலு வலகம் பூட்டியே கிடக்கு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி .
“ஒப்பந்த ஊழியர்கள் நியமனத்துக்கே பணம் வசூலிக்கறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“திருப்பூர், 15 வேலம்பாளையம் என்ற பகுதியில் மாநகராட்சி மருத்துவமனை இருக்கு... இங்க வேலை பார்க்கற ஒப்பந்த ஊழியர்கள், சமீபத்துல வேலை நிறுத்தத்துல இறங்கினா ஓய்...
“அப்ப, 'செக்யூரிட்டி வேலைக்கு 25,000 ரூபாய், மற்ற வேலைகளுக்கு 20,000 ரூபாய்னு சில அதிகாரிகளுக்கு கப்பம் கட்டிட்டு தான் வந்தோம்... ஆனா, இப்ப சரியா சம்பளம் தர மாட்டேங்கிறாங்க... நாங்க குடுத்த பணத்தையாவது திரும்ப தாங்கன்னா அதையும் தர மாட்டேங்கிறாங்க'ன்னு ஊழியர்கள் புலம்பினா ஓய்...
“இது ஒரு பக்கம் இருக்க, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், முதல்வர் காப்பீடு திட்டத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளை ஒருங்கிணைக்க, ஆறு வார்டுகளுக்கு ஒருங்கிணைப்பு மேலாளர்களை நியமிச்சிருக்கா... இவாளிடம் நிர்வாக அதிகாரி , தன் உதவியாளர் மூலமா தலா, 30,000 ரூபாய் வசூல் பண்ணியிருக்கார் ஓய்...
“இது, மருத்துவ கல்லுாரி முதல்வர் காதுக்கு போக, 'லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் பண்ணிடுவேன்'னு சத்தம் போட்டிருக்கார்... இதனால, பணத்தை வாங்கியவா, 'திருப்பி குடுத்துடறோம்'னு சொல்ல, மேலாளர்கள் தரப்போ, 'பணத்தை திருப்பி தந்துட்டு எங்களை வேலையை விட்டு அனுப்பிடாதேள்'னு புலம்பிட்டு இருக்கு ஓய்...” என்றார் குப்பண்ணா.
“வேல்முருகன், குமாரராஜா இதையும் கேட்டுட்டு கிளம்புங்க...” என்ற அந்தோணிசாமியே, கடைசி தகவலை பேச ஆரம்பித்தார்...
“தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமாரும், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசும், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவங்க... இதுல, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பை தென்னரசுக்கும், திருப்பத்துார் மாவட்ட பொறுப்பை ரஞ்சித்குமாருக்கும் முதல்வர் விஜய் வழங்கியிருக்காருங்க...
“அமைச்சர் ரஞ்சித்குமார், தனக்கு ஒதுக்கப்பட்ட திருப்பத்துார் மாவட்ட அரசு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிறதை விட, காஞ்சிபுரம் மாவட்ட நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிறதுல தான் ஆர்வம் காட்டுறாரு... இது, அமைச்சர் தென்னரசுக்கு பிடிக்கலைங்க...
“புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான, 'விபி ஜி ராம் ஜி' திட்ட துவக்க விழா சமீபத்துல உத்திரமேரூர்ல நடந்துச்சு... இதுக்கு அமைச்சர் ரஞ்சித்குமார் போயிருக்காருங்க...
“அங்க, உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் கட்சியினர் யாருமே வரல... அவங்களை எல்லாம் அமைச்சர் தென்னரசு தடுத்துட்டாராம்... இதனால, அரசு நிகழ்ச்சிகளுக்கு எந்த அமைச்சரை அழைக்கிறதுன்னு தெரியாம அதிகாரிகள் மண்டையை பிய்ச்சிட்டு இருக்காங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.
பேச்சு முடிய பெரியவர்கள்கிளம்பினர்.
