புது மதுபானங்கள் அனுமதிக்கு, 'கட்டிங்' வசூலிக்கும் அதிகாரி!
புது மதுபானங்கள் அனுமதிக்கு, 'கட்டிங்' வசூலிக்கும் அதிகாரி!
PUBLISHED ON : ஜூலை 20, 2026 12:48 AM

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “ஸ்டாலின் திறக்க வேண்டியதை மத்திய அமைச்சர் திறந்திருக்காரு பா...” என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“எதை சொல்றீங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“சென்னை, கொளத்துார் சட்டசபை தொகுதியில், பெரம்பூர் தபால் அலுவலகம் இருக்கு... இங்க, பாஸ்போர்ட் சேவை அலுவலகம் திறக்க, வடசென்னை தி.மு.க., - எம்.பி.,யான கலாநிதி ஏற்பாடு செஞ்சாரு பா...
“அப்ப, முதல்வரா இருந்த ஸ்டாலினிடம் திறப்பு விழாவுக்கு தேதி வாங்கி, கல்வெட்டு எல்லாம் தயார் பண்ணிட்டாரு... விழாவுக்கான வரைவு அழைப்பிதழ் தயார் பண்ணி, முதல்வர் அலுவலக அதிகாரிகள் ஒப்புதலுக்கு அனுப்பி வச்சாரு பா...
“ஆனா, 'வடசென்னை பகுதிக்கு பொறுப்பு அமைச்சரா இருந்த சேகர்பாபு ஒப்புதல் பெறாம நிகழ்ச்சியை நடத்தக்கூடாது'ன்னு சொன்ன அதிகாரிகள், அந்த நிகழ்ச்சிக்கு தடை போட்டுட்டாங்க... இப்ப, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன், இந்த பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வச்சிருக்காரு பா...” என்றார் அன்வர்பாய்.
“எங்களுக்கான வேலைகளை முறைப்படுத்துங்கோன்னு கேக்கறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், குடிசை வாழ் மக்களுக்காக நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியிருக்கால்லியோ... சென்னையில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகள்ல மட்டும், 55,000 வீடுகளை கட்டியிருக்கா ஓய்...
“ஏழைகள் நிறைய வசிக்கும் பகுதிங்கறதால, அவா வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, வாரியத்தில் சமுதாய வளர்ச்சி பிரிவை உருவாக்கினா... இப்பிரிவில், 26 பேர் வேலை பார்க்கறா ஓய்...
“இங்க வசிக்கற மக்களுக்கு சான்றிதழ்கள், உதவித்தொகை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சேவைகளை, இதர துறைகளுடன் சேர்ந்து செய்யறது தான் இவாளது வேலை... ஆனா, 20க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் செய்ற இந்த சேவைகளை, சமுதாய வளர்ச்சி பிரிவு ஊழியர்கள் பண்ணியதா கணக்கு காட்டறா ஓய்...
“அதே நேரம், பொறியியல் துறை அலுவலர்கள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம், சமுதாய பிரிவு ஊழியர்கள் தலையில கட்டிடறா... இதனால, 'எங்களுக்கான வேலைகள் என்னென்னு தெளிவா வரையறுக்கணும்'னு அவாள்லாம் புலம்பறா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“புது சரக்குக்கு பணம் கேட்காரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“டாஸ்மாக் தகவலாங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“ஆமா... மதுபானங்கள் விற்பனை செய்யும், 'டாஸ்மாக்' நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருக்குல்லா... டாஸ்மாக் கடைகள்ல புது, 'பிராண்ட்' மதுபானங்களை அறிமுகப்படுத்த, அதிகாரிகள் முடிவு பண்ணியிருக்காவ வே...
“இதுக்காக, மதுபானங்கள் தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகளை அடிக்கடி சந்திக்க வர்றாவ... ஆனா, இங்க இருக்கிற ஒரு அதிகாரி, 'புது பிராண்ட்களை அனுமதிக்கணும்னா பணம் வெட்டணும்'னு கேட்டு வசூல் பண்ணுதாரு... இது தொடர்பா, டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் போயிருக்கு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“சிவகுமார், நாளைக்கு பார்க்கலாம் பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் இடத்தை காலி செய்தனர்.
