PUBLISHED ON : ஜூலை 22, 2026 12:00 AM

“ஆன்லைன் மூலம் இடமாறுதல் தரணும்னு சொல்றா ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
“எந்தத் துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“தமிழக அரசுல ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில திட்ட இயக்குநர்களா இருந்த, 61 பேருக்கு சமீபத்துல, 'டிரான்ஸ்பர்' போட்டா... சிலரை திருப்திபடுத்தவும், சிலரை பழிவாங்கவும் இந்த இடமாறுதலை உயர் அதிகாரிகள் பயன்படுத்திட்டதா பலரும் புலம்பறா ஓய்...
“இது சம்பந்தமா துறையின் செயலர், கமிஷனரிடம் அவா முறையிட்டும் பலன் இல்லை... இதனால, 'கல்வித் துறை போல, 'ஆன்லைன்' மூலம் பணி மாறுதல் விண்ணப்பங்களை வாங்கி, டிரான்ஸ்பர் போட்டா, இந்த மாதிரி குளறுபடிகள் நடக்காது'ன்னு திட்ட இயக்குநர்கள் சொல்றா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“செல்வாக்கு குறையாம இருக்காருங்க...” என்றார் அந்தோணிசாமி.
“யாரு வே அது...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“தி.மு.க., ஆட்சியில், நகராட்சி நிர்வாகத் துறை மூலம், கோவையில் செம்மொழி பூங்கா அமைச்சாங்களே... தேர்தலுக்கு முன்னாடி திறப்பு விழா நடத்தணும்னு, அவசர அவசரமா பணிகளை முடிச்சதும் இல்லாம, 40 கோடி ரூபாய்க்கு ஊழலும் பண்ணிட்டதா, ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் அப்பவே குற்றஞ்சாட்டினாங்க... இதுல, 'துறையின் முக்கிய புள்ளிக்கும், இரண்டு அதிகாரிகளுக்கும் பங்கிருக்கு'ன்னும் சொன்னாங்க...
“துறையின் முக்கிய புள்ளிக்கு, ஒப்பந்த நிறுவனம் வீடு எல்லாம் கட்டி குடுத்திருக்காம்... அதே நேரம், இந்த ஊழலுக்கு சூத்திரதாரியா இருந்த ஒரு அதிகாரி, இப்பவும் இதே துறையில முக்கிய பதவியில் இருக்காருங்க...
“அவருக்கு, ஆளுங்கட்சி மேலிடத்தின் நெருங்கிய நண்பருடன் நல்ல நட்பு இருக்காம்... 'அவரை முக்கிய பதவியில இருந்து மாத்தாம, 40 கோடி ரூபாய் ஊழல் மீது நடவடிக்கை எடுக்க முடியாது'ன்னு சக அதிகாரிகள் பேசிக்கிறாங்க...” என்றார் அந்தோணிசாமி.
“வாங்க மதுசூதன் ரெட்டி... உங்க நண்பர் விஷ்ணு ரெட்டி வரலையா...” என நண்பரிடம் கேட்ட அன்வர்பாயே, “நகராட்சி நிர்வாகத் துறை சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குது பா...” என்றபடியே தொடர்ந்தார்...
“இந்தத் துறை, இப்ப முதல்வர் விஜய் கட்டுப்பாட்டுல தான் இருக்கு... சமீபத்தில், இந்தத் துறையில் நடந்த இடமாறுதல்ல, ஏகப்பட்ட குளறுபடிகள் செஞ்சிருக்காங்க பா...
“அதாவது, சென்னை மாநகராட்சியில் இருந்த, 18 முதுநிலை வருவாய் அலுவலர்களுக்கு, உதவி கமிஷனர் பதவி உயர்வு வழங்குனாங்க... இதுல, 'சீனியாரிட்டி'யில் முதலிடத்துல இருந்த துரைராஜ் என்பவரை, ஓசூர் மாநகராட்சிக்கும், இரண்டாம் இடத்துல இருந்த திருநாவுக்கரசை, சென்னை மாநகராட்சிக்கும், மூன்றாம் இடத்துல இருந்த கிருபாகரனை, மதுரை மாநகராட்சிக்கும் மாத்தியிருக்காங்க...
“அடுத்த சில நாட்கள்லயே, மூன்றாவது இடத்தில் இருந்த கிருபாகரனை, மதுரையில் இருந்து சென்னை மாநகராட்சிக்கும், இரண்டாம் இடத்தில் இருந்த திருநாவுக்கரசை, மதுரை மாநகராட்சிக்கும் மாத்தி மற்றொரு உத்தரவை போட்டிருக்காங்க பா...
“அதேபோல, ஆறாவது, எட்டாவது இடங்கள்ல இருந்த ஜூனியர் அதிகாரிகள் சிலரை, சென்னை மாநகராட்சியிலயே நியமிச்சிருக்காங்க... அதே நேரம், சென்னை மாநகராட்சியில, 32 வருஷங்களா இருந்தவங்களை வேற ஊர்களுக்கு பந்தாடிட்டதால, அவங்க எல்லாம் புலம்பிட்டு இருக்காங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
