முதல்வர் பாராட்டால் உச்சிகுளிர்ந்த போலீஸ் கமிஷனர்!
முதல்வர் பாராட்டால் உச்சிகுளிர்ந்த போலீஸ் கமிஷனர்!
PUBLISHED ON : ஆக 08, 2026 12:40 AM

“முறையான நிர்வாகிகள் இல்லாம தள்ளாடிட்டு இருக்குது பா...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
“எந்தத் துறையில ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.
“பொதுப்பணித் துறையின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் தான், 16 வருஷங்களா தமிழக அரசின் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவரா இருக்காரு...
“தலைவருக்கு நிர்வாக ரீதியா, தொழில்நுட்ப தகவல்களை திரட்டி வழங்க, 2013ல், இந்த அமைப்புக்கு, ஓய்வு பெற்ற தலைமை பொறியாளரை, துணைத் தலைவரா நியமிச்சாங்க பா...
“இந்த துணைத் தலைவர் பதவி இப்ப காலியா இருக்கு... கர்நாடகாவுல எல்லாம் இந்த மாதிரி நதிநீர் விவகாரங்களை கையாள, பணியில் இருக்கும் தலைமை பொறியாளர்களைத் தான் நியமிக்கிறாங்க...
“ஆனா, 'தமிழகத்துல தான், ஓய்வு பெற்றவங்களை தலைவர், துணைத் தலைவரா போட்டு, நதிநீர் விவகாரங்கள்ல கோட்டை விட்டுடுறாங்க'ன்னு, துறை வட்டாரங்கள்ல முணுமுணுக்கிறாங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“என்கிட்டயும் ஒரு அதிகாரி தகவல் இருக்கு ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், போன 31ம் தேதி, 'ரிட்டயர்' ஆகிட்டாரோல்லியோ... புது இயக்குநர் நியமிக்காத நிலையில், தேர்வுத் துறை கூடுதல் இயக்குநர் லதாவிடம், கூடுதல் பொறுப்பா, இந்தப் பதவியை ஒப்படைச்சிருக்கா ஓய்...
“சட்டசபையில சீக்கிரமே, பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்க இருக்கு... அதனால, 'சீக்கிரமே இயக்குநரை நியமிக்கணும்'னு, ஆசிரியர் சங்கத்தினர் கேக்கறா ஓய்...
“அது மட்டுமில்லாம, 'இந்தத் துறையில் ரெண்டு இணை இயக்குநர், 30க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அதிகாரிகள், 2,000க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியா கிடக்கறது... இவற்றை எல்லாம் நிரப்பினா தான், நிர்வாகம் சிறப்பா நடக்கும்'னும் அவாள்லாம் சொல்றா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“முதல்வரின் பாராட்டால, உச்சிகுளிர்ந்து போயிட்டாருல்லா...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.
“தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியை சமீபத்துல கைது பண்ணி, விடுதலை செஞ்சாங்கல்லா... சென்னை, நீலாங்கரை வீட்டுக்கு அவரை கைது செய்ய போலீசார் போனப்ப, அங்க தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு, போராட்டம் நடத்தினாவ வே...
“போலீசார் போட்டிருந்த இரும்புத் தடுப்புகளை எல்லாம் துாக்கி எறிஞ்சாவ... இதைப் பார்த்து, அங்கிருந்த போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ரொம்பவே, 'டென்ஷன்' ஆகிட்டாரு வே...
“இரும்புத் தடுப்பு மீது ஏறி குதிச்ச ஒரு நிர்வாகி முதுகுல, ரெண்டு கைகளாலும் தொப்புன்னு ஒரு போடு போட்டாரு... இது, மொத்த போலீசாருக்கும் பச்சைக்கொடி காட்டியது மாதிரி ஆயிட்டு வே...
“உடனே, போலீசார் லத்திகளை சுழற்றி, தி.மு.க.,வினரை உண்டு, இல்லன்னு பண்ணிட்டாவ... எல்லாரும் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓடிட்டாவ வே...
“இது எல்லாம், முதல்வர் விஜய் கவனத்துக்கு போயிருக்கு... சட்டசபையில நடந்த பட்ஜெட் கூட்டத்துக்கு விஜய் வந்தப்ப, அவருக்கு கமிஷனர் அமல்ராஜ் சல்யூட் அடிச்சிருக்காரு வே...
“அப்ப, அவர்கிட்ட முதல்வர் வந்து, பாராட்டியிருக்காரு... இதை, தன் போலீஸ் நண்பர்கள்கிட்ட அமல்ராஜ் சொல்லி சந்தோஷப்பட்டுட்டு இருக்காரு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
