'குட்கா' வழக்கில் த.வெ.க., நிர்வாகியை விடுவித்த போலீசார்!
'குட்கா' வழக்கில் த.வெ.க., நிர்வாகியை விடுவித்த போலீசார்!
PUBLISHED ON : ஆக 03, 2026 12:30 AM

“இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கறா ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
“எங்க வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“திருப்பூர்ல நிறைய தனியார் பஸ்கள் இயங்கறது... இதை கண்காணிக்க வேண்டிய, வட்டார போக்குவரத்துக் கழகமான ஆர்.டி.ஓ., அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு சாதகமாவே நடந்துக்கறா ஓய்...
“பல பஸ்கள்ல, அரசு நிர்ணயிச்சதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கறா... இது சம்பந்தமா பயணியர் புகார் குடுத்தா, ஆர்.டி.ஓ., அலுவலக சிறப்பு தணிக்கை குழுவினர், அந்த பஸ்சை பிடிச்சு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கறா ஓய்...
“பஸ் உரிமையாளர்கள், அந்த பஸ்சை ஓரங்கட்டிட்டு, வேற பஸ்சை இயக்கி கூடுதல் கட்டணம் வசூலிக்கறா... கூடுதல் கட்டணம் மூலமா, ஒரு பஸ்சுக்கு தினமும் சராசரியா, 2,000 வீதம், மாசம், 60,000 ரூபாய் சம்பாதிக்கறா ஓய்...
“இதுல அபராதம், 10,000 ரூபாய் போனாலும், மீதம் 50,000 ரூபாய் அவாளுக்கு கிடைக்கறது... ஆர்.டி.ஓ., அதிகாரிகளுக்கும் பங்கு போயிடறது ஓய்...” என்றார் குப்பண்ணா.
“சொந்த கட்சிக்காரரை கண்டுக்கலைங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“தர்மபுரி மாவட்டத்தில், 'அரசு செவிலியர் கல்லுாரி அமைக்கணும்'னு, சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜுக்கு, அந்தத் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., சவுமியா, சமீபத்துல கடிதம் எழுதியிருந்தாங்க... மறுநாளே அமைச்சரின் உதவியாளர், 'தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், பி.எஸ்.சி., நர்சிங் கல்லுாரி விரைவில் தொடங்கப்படும்'னு பதில் கடிதம் அனுப்பிட்டாருங்க...
“இதுக்கு முன்னாடி, இதே கோரிக்கையை வலியுறுத்தி, அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரான ராஜ்குமாரும், அருண்ராஜிடம் நேர்ல மனு குடுத்திருக்காரு... அதுக்கு, 10 நாட்கள் கழிச்சு, சமூக வலைதளத்தில் அருண்ராஜ் போட்ட பதிவில், 'ராஜ்குமார் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'னு சொல்லியிருந்தாருங்க...
“எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு உடனே பதில் தந்த அருண்ராஜ், தன் கட்சி அமைச்சர் மனு கொடுத்து, 10 நாட்கள் கழிச்சு, 'பரிசீலிக்கப்படும்'னு பொத்தாம் பொதுவா பதில் தந்ததுல, ராஜ்குமார் வருத்தத்துல இருக்காருங்க...” என்றார் அந்தோணிசாமி.
“தி.மு.க., ஆட்சி மாதிரியே நடக்குது பா...” என்றார் அன்வர்பாய்.
“என்ன விவகாரம் ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.
“ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் த.வெ.க., நிர்வாகி ஒருத்தர் நடத்துற கடையில், 'குட்கா' புகையிலை பொருட்களை விற்பனை பண்றாங்க... சமீபத்துல, துாத்துக்குடியில் இருந்து ஆட்டோவில் கடத்தி வந்த குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செஞ்சு, ரெண்டு பேரை கைது செஞ்சாங்க பா...
“அவற்றை, த.வெ.க., நிர்வாகியிடம் விக்கிறதுக்காக கடத்திட்டு வந்ததா, ரெண்டு பேரும் வாக்குமூலம் தந்திருக்காங்க... வழக்குல, த.வெ.க., நிர்வாகியை முதல் குற்றவாளியா சேர்த்து, எஸ்.பி.,க்கும் போலீசார் தகவல் குடுத்தாங்க பா...
“ஆனா, மறுநாளே த.வெ.க., நிர்வாகி பெயரை நீக்கிட்டு, எப்.ஐ.ஆர்., போட்டிருக்காங்க... 'தி.மு.க., ஆட்சியில தான், குற்ற வழக்குகள்ல சிக்கிய கட்சியினரை காப்பாத்துவாங்க... த.வெ.க., அரசுலயும் இப்படி நடக்குதே'ன்னு நேர்மையான போலீசார் புலம்புறாங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.
“லோகநாதன், இப்படி உட்காரும்...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
