PUBLISHED ON : ஜூலை 24, 2026 12:06 AM

பெஞ்சில் அமர்ந்ததுமே, ''பதவி விலகும் முடிவுக்கு வந்துட்டாருப்பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.
''வடசென்னை மாவட்ட தி.மு.க., செயலரா இருக்கிறவர், ஆர்.டி.சேகர்... 2021 - 26ல், பெரம்பூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருந்தவர், இப்ப நடந்த தேர்தல்ல, முதல்வர் விஜய்கிட்ட தோத்து போயிட்டாருப்பா...
''தேர்தலுக்கு முன்னாடியே, இவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்துச்சு... இதனால, அவரது மாவட்டச் செயலர் பதவியை பறிச்சிட்டு, 'சீட் கிடையாது'ன்னு மறுக்கவும் தலைமை முடிவு பண்ணுச்சு பா...
''அவருக்கு பதிலா, கொளத்துார் தொகுதியைச் சேர்ந்த, தி.மு.க., பொறியாளர் அணி துணைச் செயலர் நரேந்திரனை மாவட்டச் செயலராக்கவும் முடிவு செஞ்சாங்க... ஆனா, பெரம்பூர்ல விஜய் போட்டியிடப் போறதா அறிவிப்பு வெளியாகவே, 'அவரை நான் தோற்கடிச்சு காட்டுறேன்'னு, உதயநிதியிடம் சபதம் போட்டு, தன் பதவியை சேகர் தக்க வச்சுக்கி ட்டாரு பா...
''இப்ப, தோல்வி அடைஞ்சதும் இல்லாம, சேகருக்கு உடல்நிலையும் சரியில்லையாம்... அதனால, மாவட்டச் செயலர் பதவியில் இருந்து விலகி, மாநில அளவுல ஏதாவது கவுரவ பதவி வாங்கிட்டு நிம்மதியா இருக்கலாம்கிற முடிவுக்கு வந்துட்டாருப்பா...'' என்றார் அன்வர்பாய்.
''எல்லாரும் உஷாராகிட்டாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''யாரை சொல்லுதீரு...'' என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
''லஞ்சத்தை ஒழிக்கிறதுல த.வெ.க., அரசு சுறுசுறுப்பா இருக்கே... பல அரசு அலுவலகங்கள்ல, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனைகளை நடத்துறாங்க...
''சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மற்றும் சுற்று வட்டாரங்கள்ல இருக்கிற அரசு அலுவலகங்களுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வரலாம்னு, சில நாட்களா தகவல் பரவிட்டு இருக்கு... இதனால, இந்த அலுவலகங்கள்ல புரோக்கர்கள் நடமாட்டம் காணாம போயிடுச்சுங்க...
''முன்னாடி எல்லாம் அலுவலக நேரம் முடிஞ்சதும் அதிகாரிகள், ஊழியர்கள் சீட்ல உட்கார்ந்து, 'டீலிங்' பேசி முடிப்பாங்க... இப்ப எல்லாம் அலுவலக நேரம் முடிஞ்சதும், சட்டுபுட்டுன்னு எழுந்து வீட்டுக்கு போயிடுறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''கட்சி ஆபீஸ் மாதிரி இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''த.வெ.க., அரசுல, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒரு அமைச்சர் இருக்காரோல்லியோ... இவரை பார்க்க, தலைமைச் செயலகத்தில் இருக்கும் இவரது அறைக்கு, தினமும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்னு நிறைய பேர் வரா ஓய்...
''இப்படி வர்றவாளை, யாரும் ஒழுங்குபடுத்துறதும் இல்லை... இதனால, இவரது அறைக்கு வெளியில, சந்தைக்கடை மாதிரி ஒரே கூட்டமா இருக்கு ஓய்...
''இவாளை எல்லாம், அமைச்சரின் அரசியல் பி.ஏ., தான் பார்த்து பேசி அனுப்பறார்... அவரை மீறி, அரசு பி.ஏ.,க்கள் எதுவும் பண்ண முடியலை... இதனால, 'இது அமைச்சர் ஆபீசா, கட்சி ஆபீசா'ன்னு, அந்த பக்கம் போறவா எல்லாம் விநோதமா பார்த்துண்டு போறா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.
''வாரும் ராகவேந்திரன்... வன்னியரசு ஊருக்கு போயிட்டாரா வே...'' என, நண்பரிடம் பெரியசாமி அண்ணாச்சி விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.
