கவுரவ பதவிக்கு ரூ.30 லட்சம் கேட்ட ஆளுங்கட்சி பிரமுகர்கள்!
கவுரவ பதவிக்கு ரூ.30 லட்சம் கேட்ட ஆளுங்கட்சி பிரமுகர்கள்!
PUBLISHED ON : ஜூலை 23, 2026 12:09 AM

''அனுமதியில்லாம மணல் அள்ளிட்டு போறாவ வே...'' என்ற படியே, பெஞ்சில் இடம் பிடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.
''செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பக்கத்துல இருக்கிற பல ஏரிகள்ல, அனுமதியில்லாம மணலை திருடிட்டு போறாவ... சமீபத்துல இப்படி மணல் அள்ளிய ஒரு லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் தடுத்து, விரட்டி விட்டிருக்காவ வே...
''இதேபோல, அருங்குன்றம் பகுதியில், 20,000 கன மீட்டர் அளவுக்கு மண் எடுக்க, அரசுக்கு சிலர் பணம் கட்டியிருக்காவ... ஆனா, அங்க பல லட்சம் கன மீட்டர் அளவுக்கு மண்ணை அள்ளிட்டாவ வே...
''இதனால, அரசுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கு... 'மணல் மற்றும் மண் கொள்ளையால, அரசுக்கு தான் கெட்ட பெயர் வரும்...
''அதனால, இந்த கொள்ளையை தடுத்து நிறுத்தணும்'னு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் முதல்வருக்கு மனு அனுப்பியிருக்காவ வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
''வாரத்துல முதல் நாள் அரசு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாதுன்னு சொல்றாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரத்துல, புதிய கட்டடங்கள் திறப்பு உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளை, பெரும்பாலும் திங்கட்கிழமை தான் நடத்துறாங்க... இதுல, கலெக்டர் சினேகா மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துக்கிறாங்க பா...
''இதுல எந்த தவறும் இல்லை... ஆனா, கலெக்டர் அலுவலகத்துல, திங்கட்கிழமை நடக்கிற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வர்ற பொதுமக்கள் ஏமாந்து போறாங்க பா...
''மாவட்டத்தின் மூலை முடுக்குல இருந்து எல்லாம் வர்ற மக்கள், கலெக்டரிடம் மனுக்களை குடுத்து தங்களது பிரச்னையை சொன்னா, தீர்வு கிடைக்கும்னு நினைக்கிறாங்க... ஆனா, 'கலெக்டர், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் எல்லாம், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போயிடுறதால, மனுக் களை மட்டும் குடுத்துட்டு போக வேண்டியிருக்கு... அதனால, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை நடத்தக் கூடாது'ன்னு, அவங்க சொல்றாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''துணைத் தலைவர் பதவிக்கு, 30 லட்சம் பேரம் பேசியிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''எந்த கட்சியிலங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.
''இது கட்சி விவகாரம் இல்லை... தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவரா, அத்துறையின் அமைச்சர் தான் இருப்பார்... துணைத் தலைவரா, கல்விக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிப்பா ஓய்...
''ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார் தான், இப்ப துணைத் தலைவரா இருக்கார்..... இவரது பதவிக்காலம் சீக்கிரம் முடியப் போறது ஓய்...
''அதனால, இந்தப் பதவியை பிடிக்க, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரும் முயற்சி பண்றா... இதுல சிலர், ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலரை போய் பார்த்திருக்கா ஓய்...
''அவாளோ, 'அந்த பதவியை கண்டிப்பா வாங்கி தர்றோம்... 30 லட்சம் ரூபாயை வெட்டுங்கோ'ன்னு கேக்கறாளாம்... 'இது கவுரவ பதவி தான்... இதுல, பணம் எல்லாம் சம்பாதிக்க முடியாது... இதுக்கு போய், 30 லட்சம் ரூபாய் கேக்கறது நியாயமா'ன்னு, பலரும் துண்டை காணோம், துணியை காணோம்னு ஓட்டம் எடுத்துண்டா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.
பெஞ்சில் புதியவர்கள் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.
