/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
10 ஆண்டுகளாக மாற்றப்படாத வி.ஏ.ஓ.,க்கள்!
/
10 ஆண்டுகளாக மாற்றப்படாத வி.ஏ.ஓ.,க்கள்!
PUBLISHED ON : நவ 26, 2025 12:00 AM

பெ ஞ்சில் அமர்ந்த கையுடன், ''என் பதிவுகளுக்கு, 'லைக்' போட மாட்டீயளான்னு கோவப்படுதாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளரா இருக்காரு... சமீபத்துல இவர் தலைமையில், இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்துச்சு வே...
''இதுல பேசிய கவுதம சிகாமணி, 'சோஷியல் மீடியாக்கள்ல நான் போடுற பதிவுகளை எல்லாம் படிக்கிறீங்களா, இல்லையா... நீங்க அதை படிச்சிட்டு, 'லைக்' போடணும்... ஆனா, யாருமே லைக் பண்றது இல்ல... இனியாவது படிச்சிட்டு, லைக் போடுங்க'ன்னு கோவமா சொல்லி இருக்காரு வே...
''கூட்டம் முடிஞ்சதும் ஒரு நிர்வாகி, 'ஆமா, இவர் கார்ல ஏறும்போது ஒரு பதிவு, இறங்கும் போது ஒரு பதிவுன்னு போடுவாரு... எல்லாத்தையும் படிச்சிட்டு லைக் போட முடியுமா... நமக்கு வேலை வெட்டி இல்லன்னு நினைச்சிட்டாரா'ன்னு புலம்பிட்டே போனாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''முதல்வர் தேதிக்காக காத்துட்டு இருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''எதுக்கு ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சென்னை பிராட்வே பஸ் நிலையத்தை, 823 கோடி ரூபாய் செலவுல புதுப்பிச்சிட்டு இருக்காங்க... இதனால, பக்கத்துல இருக்கிற ராயபுரத்துல தற்காலிக பஸ் நிலையம் கட்டியிருக்காங்க...
''இதுக்கான பணிகள் எல்லாம் முடிஞ்சிடுச்சு... ஆனா, இன்னும் திறக்காம வச்சிருக்காங்க... 'ஏன்'னு அந்த ஏரியா மக்கள் கேட்டதுக்கு, 'முதல்வர் அல்லது துணை முதல்வரை வச்சு தான் திறக்கணும்னு மாநகராட்சி அதிகாரிகள் காத்துட்டு இருக்காங்க'ன்னு ஆளுங்கட்சியினர் சொல்லி இருக்காங்க...
''இதுக்கு இடையில, பஸ் நிலையத்துல ஆவின் சார்புல ஒரு, 'பார்லர்' திறந்திருக்காங்க... பஸ் நிலையத்தை திறந்தா தானே வியாபாரம் நடக்கும்... இதனால, 'பஸ் நிலையத்தை எப்ப திறப்பாங்க'ன்னு அவங்களும் காத்திருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
-----''கிட்டத்தட்ட, 10 வருஷமா பெஞ்ச் தேய்ச்சுண்டு இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்ல இருந்து, 2018ம் வருஷம் சென்னை மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட தாலுகாக்களுக்கு உட்பட்ட கிராமங்கள்ல, வி.ஏ.ஓ.,க்கள் இருக்கா... இவா, ஒரு வருவாய் கிராமத்துல அதிகபட்சம் ஒரு வருஷம் தான் பணி புரியலாம் ஓய்...
''ஆனா, நிறைய பேர் அஞ்சு, பத்து வருஷத்துக்கும் மேலா ஒரே கிராமத்துல இருக்கா... இதனால, அவா வச்சது தான் சட்டம்னு ஆயிடுத்து ஓய்...
''அவா கேக்கற, 'கட்டிங்' தராதவாளுக்கு, பட்டா சான்றிதழ்கள்ல பெயர், சர்வே எண், முகவரியை மாத்தி குடுத்து பழி வாங்கிடறா... இதுக்கு இடையில, கவுன்சிலிங் நடத்தி வி.ஏ.ஓ.,க்களுக்கு இடமாறுதல் போடும்படி சென்னை வடக்கு, மத்தி மற்றும் தெற்கு வருவாய் துறை ஆர்.டி.ஓ.,க்களுக்கு கலெக்டர் உத்தரவு போட்டார் ஓய்...
''உடனே, ஒருசில வி.ஏ.ஓ.,க்களை மட்டும் அந்தந்த கோட்டத்துக்குள்ள மாத்தினா... ஆனா, பல தாலுகாக்கள்ல எந்த இடமாறுதலும் நடக்கவே இல்ல... கலெக்டர் போட்ட உத்தரவை ஆர்.டி.ஓ.,க்கள் அலட்சியப்படுத்திட்டதால, வி.ஏ.ஓ.,க்கள் பல வருஷங்களா ஒரே இடத்துல இருந்துண்டு, பண மழையில குளிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

