PUBLISHED ON : ஜன 15, 2024

ஆதிகால மனிதர்கள் சுடுமண், கல்வெட்டுகள், பின்னாளில் செப்பேடுகளில் தங்கள் எண்ணங்களை எழுதி வைத்தனர். அதன்பின் ஓலைச் சுவடிகளை தகவல் ஆவணமாக்கினர். பெரும்பாலும் பாடல்களாக அடுத்த தலை முறைகளுக்கு தகவலை கடத்திய தமிழர்கள், தங்கள் வாழ்வியலோடு இணைந்த பனைமரங்களின் ஓலையை பக்குவப்படுத்தி ஆணியால் எழுதி, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டினர். இந்த ஓலைச் சுவடிகள் இந்திய அளவில் 35 லட்சம், தமிழகத்தில் 25 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கருதுகின்றனர்.
தஞ்சை சரபோஜி சரஸ்வதி மஹால், தமிழ்ப்பல்கலை, தமிழாராய்ச்சி நிறுவனங்கள், திருப்பனந்தாள், திருவாவடுதுறை மடங்கள் உட்பட பல நிறுவனங்களிடம் 2 முதல்
3 லட்சம் ஓலைச்சுவடிகள் உள்ளன. இதுவரை 15 சதவீத அளவுக்கே தொகுக்கப்பட்டுள்ளன.
ஓலைச்சுவடிகளை பாதுகாக்க சோழர் காலம் முதல் நுாலகங்கள் பல துவக்கப்பட்டன. அவற்றில் தஞ்சை அரண்மனையின் ஒருபகுதியில் செயல்படும் சரஸ்வதி மஹாலும் ஒன்று. பின்னாளில் இது நாயக்கர், மராட்டிய மன்னர்களால் வளர்க்கப்பட்டது. தஞ்சை அரண்மனையின் ஒரு பகுதியில் நுாலகம், அருங்காட்சியகம், கலைக்கூடம், காட்சிக்கூடம் என செயல்படுகிறது.
இந்த சரஸ்வதி மஹாலில் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய தமிழ் நுால்கள் முதல் காகித பயன்பாடுக்கு வரும் காலகட்டம் வரையான ஓலைச் சுவடிகள் உள்ளன. இந்த மஹால் ஆசிய அளவில் முதல், உலகளவில் 2வது இடத்தில் உள்ளது.
இங்கு மட்டுமே பலலட்சம் பக்கங்களைக் கொண்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச்
சுவடிகள் உள்ளன. தமிழ், தெலுங்கு, மராத்தி, வட மொழிகளில், இலக்கியங்கள்,
இலக்கணங்கள், மருத்துவம், ஜோதிடம், வானவியல், கட்டுமானம் என எல்லா
தலைப்புகளிலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் 'டிஜிட்டல்' மயமாக்கி கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி முடிந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட உயரமான 'ரேக்'குகளில் உள்ள ஓலைச்சுவடிகளை வசம்பு, காய்ந்த வேப்பிலை, எலிகளைத் தவிர்க்க பாம்புச் சட்டைகளைக்கூட வைத்து பராமரிப்பராம்.
இந்நுாலகம் காலை 10:00 - மதியம் 1:00 மணி, மதியம் 1:30 - மாலை 5:30 மணி வரை செயல்படும். நுாலகத்தோடு இணைந்துள்ள அருங்காட்சியகம், கலைக்கூடம், காட்சிக் கூடம், தர்பார் மண்டபத்தை காண ரூ.50 கட்டணம் உண்டு.
சரஸ்வதி மஹால் தமிழ்ப்பண்டிதர் மணிமாறன் கூறியதாவது: ஓலைச்சுவடிகள் 200 முதல் 800 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டங்களைச் சேர்ந்தவை. இவற்றை ஆய்வு செய்து இந்நுாலகத்தில் 600க்கும் மேலான புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.
இதில் வியக்க வைக்கும் தகவலாக, தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியையும் இந்த ஓலைச் சுவடிகளால் அறிய முடியும். தமிழின் கீழ்கணக்காக 1 ஐ 18 லட்சத்து 38 ஆயிரத்து 400 ஆக பிரித்தால் அதற்கும் ஒரு பெயரிட்டு அழைத்த விவரம் உள்ளது. அதேபோல மேல் கணக்காக ஆயிரம், லட்சம், கோடிக்குப்பின், ஆங்கிலத்தில் பில்லியன், டிரில்லியன் என்று உள்ளது. தமிழில் அதற்கும் மேலாக கர்ப்பம், அமிழ்தம், வெள்ளம் என்று 1க்கு பின் 21
பூஜ்யங்களைச் சேர்த்தால் வருவதை தமிழ் வார்த்தைகளால் அளந்துள்ளனர்.
தஞ்சை கோயிலின் கருவறையானது, நுாலிழை அளவுகூட பிசிறும் இன்றி
கனகச்சிதமாக சதுரவடிவில் உள்ளது என இன்றைய பொறியாளர்கள் வியக்கின்றனர். அந்த அறையிலுள்ள லிங்கத்தின் நடுஉச்சியும், அதற்கு மேல் அமைந்துள்ள கோபுர விமானத்தின் மையப்பகுதியும் விலகாமல் நேராக அமைந்துள்ளது. இது நீள, அகல அறிவுக்கான உதாரணம்.
காலக் கணிதத்தை பொறுத்த வரை, இங்குள்ள கண்மாயில் கோடையில் பறவைகள் கூடு கட்டுவதை வைத்து வானிலையை தமிழன் கணித்துள்ளது வியப்புக்குரிய விஷயம். மரத்தின் அடிக்கிளையில் கூடுகட்டினால் அந்தாண்டு வறட்சியால் கண்மாய் நிரம்பாது என்றும். மழையால்கண்மாய் நிரம்பும் ஆண்டுகளில், கூடு பாதிக்கும் என்பதற்காக மரத்தின் உச்சியில் கூடுகட்டும் என்பதை வைத்து கணித்து அதற்கேற்ப சாகுபடியை மேற்கொண்ட விஷயங்களை இந்த ஓலைச்சுவடிகளால் அறிய முடிகிறது.
காலக் கண்ணாடியான ஓலைச்சுவடிகள் நமது பொக்கிஷம். இன்றும் தனிமனிதர்களிடம்
உள்ளவற்றை சேகரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் மக்களுக்கு பெரும் பயன்
கிடைக்கும். அதற்கான ஆய்வுகளை அரசும், தமிழ் நிறுவனங்களும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

