
காலையில் சூரிய உதயத்தை யார் பார்க்கவில்லையோ அவருக்கு அன்றைய நாள் வீணே என்பது மகான்களின் வாக்கு. சூரிய வணக்கம் செய்பவர் வெற்றி பெறுகிறார் என்பதற்கு ராமனின் கதையே உதாரணம்.
இலங்கை போர்க்களத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் கடும் யுத்தம் நிகழ்ந்தது. ராவணன் தன் உறவுகளையெல்லாம் இழந்த பிறகும் கூட புத்தி வராமல் ராமனுடன் மோதினான். ஆனால் ஒரு ஆயுதம் கூட கையில் இல்லாமல் போயிற்று.
ஆயுதமில்லாத ஒருவனுடன் போரிட விரும்பாத ராமன், “நீ நாளை தக்க ஆயுதங்களுடன் உன் பலத்தை பெருக்கிக் கொண்டு வா,” என்றான். இந்தச் சொல்லைக் கேட்டு ராவணன் கூனிக் குறுகிப் போனான். அப்போதாவது அவன் சீதையை ஒப்படைத்திருக்கலாம். அவன் பெற்ற வரங்களால் தன்னை யாரும், அழிக்க முடியாது என்ற நம்பிக்கையோடு சென்றான்.
அவனது மனைவி மண்டோதரி எவ்வளவோ புத்திமதி சொல்லி பார்த்தாள். அவன் கேட்கவில்லை. மறுநாள் யுத்த களத்திற்கு மிஞ்சியிருந்த வீரர்களுடன் வந்தான். ராமனும் அவனுடன் எவ்வளவோ போரிட்டு பார்த்தார். அவனை அழிக்கும் வழி தெரியவில்லை. அப்போது அகத்திய முனிவர் அங்கு வந்தார். ராமனிடம், “ராமா! நீ எந்த தெய்வத்தை வணங்கினாலும் குல தெய்வ வழிபாடு இல்லாவிட்டால் பயனேதும் இல்லை. நீ சூரிய குலத்தில் பிறந்தவன். சூரியனே உன் குல தெய்வம். அவரால் தான் உனக்கு வெற்றியைத் தர முடியும். நான் சூரியனைக் குறித்த 'ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் மந்திரத்தை உனக்கு உபதேசிக்கிறேன். அதை உபதேசித்து
சூரியனை வணங்கி போரை நடத்து. வெற்றி உன் பக்கமே!” என்றார்.
ராமரும் அவ்வாறே அந்த மந்திரத்தை ஜெபித்தபடியே ராவணனுடன் மோதினார். ராவணனின் மார்புக்குள் அமிர்த கலசம் இருந்தது. அது அவனைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. அதை உடைத்தால் தான் அவன் அழிவான் என்ற ரகசியம், ராமனுக்கு தெரியாது. ராவணனின் தம்பி விபீஷணன் நியாயத்துக்கு கட்டுப்பட்டவன். ராவணன் செய்த அநியாயத்திற்கு, அவன் துணை போகாமல் ராமனுடன் சேர்ந்திருந்தான். அவனுக்கு அமிர்த கலச ரகசியம் தெரியும். ஆதித்ய ஹ்ருதய உபதேசம் கிடைத்த பிறகு தான், அவன் ராமனிடம், தன் அண்ணனின் மார்பில் அமிர்த கலசம் இருக்கும் விபரத்தை தெரிவித்தான். ராமனும் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசித்தபடியே ராவணனின் மார்பை நோக்கி அம்பை செலுத்தினார். ராமபாணம் ராவணனின் மார்பில் பாய்ந்து குடம் உடைந்தது. ராவணன் கீழே விழுந்து உயிர்விட்டான். இப்படி மிகச்சிக்கலான சூழ்நிலையிலும் உதவுவது சூரிய வழிபாடு.
அகத்தியர் 'ஆதித்ய ஹ்ருதய உபதேசம்' செய்வதற்கு முன்பே கூட சூரிய புத்திரன் ஒருவனின் சகவாசம் ராமருக்கு கிடைத்தது. அவன் தான் சுக்ரீவன். இவன் சூரியனின் மகன். இவன் பிறந்த வரலாறு சுவாரஸ்யமானது.
ரட் ஷவிரதன் என்ற வானர வீரன் ஒருமுறை இமயமலைக்கு சென்றான். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள், முனிவர்கள் உள்ளிட்ட ஆண்கள் யாரும் நுழையக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறி நுழைபவர்கள் பெண்ணாக மாறுவார்கள் என்பது சாபம். இதை
அறியாமல் அங்கே ரட் ஷவிரதன் நுழைந்து பெண்ணாக மாறி விட்டான். அவன்(ள்) அழுது கொண்டிருந்த வேளையில், சூரியன் அங்கே வந்தான். எல்லாம் தெய்வ சங்கல்பப்படியே நடக்கிறது என்ற அவன், “நீ ஒரு குழந்தையை என் மூலமாக பெற வேண்டும். அந்தக் குழந்தை எதிர்காலத்தில் திருமாலின் அவதாரமான ராமனுக்கு உதவி செய்து, அரக்கர் குலம் அழிய காரணமாவான். மிகுந்த புகழ் பெறுவான்,” எனக்கூறினான்.
அவர்களுக்கு பிறந்த குழந்தையே சுக்ரீவன். இவ்வாறு ராமனின் வாழ்வில் சூரியனின் பங்கு மகத்தானதாக அமைந்தது. இன்று ராமனையோ, சுக்ரீவனையோ, அகத்தியரையோ நம் கண்களால் பார்க்க இயலவில்லை. ஆனால் சூரியன் கண்கண்ட தெய்வமாக, நம் முன் வலம் வந்து கொண்டிருக்கிறான். நாம் உயிர் வாழ காரணமான சூரியனை தினமும் வணங்கி, வெற்றி மேல் வெற்றி குவிப்போம்.
தி.செ