PUBLISHED ON : ஜூன் 05, 2015

முன்னொரு காலத்தில் ஆளவந்தான் என்ற நாட்டை இளஞ்சோழன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவரின் நெருங்கிய நண்பனான சேதுராஜன் அங்கு அமைச்சராக இருந்தார்.
ஒருநாள்-
புகழ்பெற்ற சோதிடர் ஒருவர் அந்நாட்டிற்கு வருகை தந்தார். அரசர் இளஞ்சோழன் அவரைச் சிறப்பாக வரவேற்றார்.
''அரசர் பெருமானே! நான் ஜாதகம் கணித்துச் சொல்வதில் வல்லவன். எதிர்காலத்தில் இன்னது நடக்கும் என்று நான் சொன்னால் அது நடந்தே தீரும். என் வாக்கு என்றும் பொய்யாகாது,'' என்று பெருமையாக கூறினார் அந்தச் சோதிடர்.
'இவர் சொல்வது உண்மையா? சோதித்துப் பார்ப்போமே' என்று நினைத்தார் அரசர்.
''சோதிடரே! அமைச்சர் சேதுராஜனின் ஜாதகம் இது. என் உயிருக்கு உயிரான நண்பர் இவர். இவரது வாழ்நாள் எவ்வளவு என்று கணித்துச் சொல்லுங்கள்,'' என்று கேட்டான்.
அந்த ஜாதகத்தைப் பார்த்த சோதிடர், ஏதேதோ கணக்கு போட்டார்.
''ஆ! இப்படியா நடக்கப் போகிறது. தடுக்க வழி இல்லையே,'' என்று வருத்தத்துடன் முணுமுணுத்தார்.
''சோதிடரே! எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்,'' என்றார் அரசர்.
''அரசே! சோதிடர் எதையும் மறைக்கக் கூடாது. உண்மையைத்தான் சொல்ல வேண்டும். அமைச்சரின் வாழ்நாள் இன்னும் இருபது நாட்கள் தான். அவரைக் காப்பாற்ற வழி ஏதும் இல்லை,'' என்று வருத்தத்துடன் சொன்னார்.
அங்கிருந்த யாருமே அவர் சொன்னதை நம்பவில்லை.
அவர் குறிப்பிட்ட இருபதாம் நாள் வந்தது.
என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. நல்ல உடல் நலத்தோடு இருந்த அமைச்சர் திடீரென்று இறந்து விட்டான்.
'சோதிடர்தான் தன் மந்திரத் திறமையால் அமைச்சரைக் கொன்று இருக்க வேண்டும். உயிர் நண்பனைக் கொன்ற அவரை பதிலுக்கு கொல்ல வேண்டும். அதற்கு என்ன செய்வது' என்று சிந்தித்தார் அரசர்.
நல்ல வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.
'சோதிடரிடம் அவர் வாழ்நாள் எவ்வளவு என்று கேட்போம். பல ஆண்டுகள் வாழ்வேன் என்றுதான் சொல்வார். உடனே, அவரைக் கொன்று விடுவோம். திகைத்து நிற்கும் அவையினரைப் பார்த்து, தான் சாகப் போவது இவருக்கேத் தெரியவில்லை. பல ஆண்டுகள் வாழப்போவதாகப் பொய் சொன்னார். அதனால்தான் இவரைக் கொன்றேன். இவர் சோதிடம் பொய் என்பேன். எல்லாரும் என் கருத்தை ஏற்றுக் கொள்வர்' என்று நினைத்தான்.
மறுநாள் அரசவை கூடியது. அங்கு வந்த சோதிடரை வரவேற்றான் அரசர்.
''சோதிடரே! எல்லோர் வாழ்நாளையும் கணித்துச் சொல்கிறீர். துல்லியமாக நடக்கிறது. உங்கள் திறமைக்கு என் பாராட்டுக்கள்.
''உங்கள் வாழ்நாளைக் கணித்து உள்ளீரா? எவ்வளவு காலம் வாழ்வீர்கள்?'' என்று இனிமையாகக் கேட்டான்.
அறிவு நிரம்பிய அந்தச் சோதிடர், 'எல்லாரும் தங்கள் வாழ்நாளைத்தான் என்னிடம் கேட்பர். ஆனால், இந்த அரசனோ என் வாழ்நாள் எவ்வளவு என்று கேட்கிறான். இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. கவனமாக நடந்து கொள்ள வேண்டும்' என்று நினைத்தார்.
''அரசே! என் வாழ்நாளை நான் கணித்துப் பார்க்கவில்லை. இன்றிரவு கணக்கு போட்டுப் பார்க்கிறேன். என் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று நாளை சொல்கிறேன்,'' என்றார்.
''சரி! அப்படியே செய்யுங்கள்,'' என்றார் அரசர்.
மறுநாள் அரசவைக்கு வந்தார் அவர். ''நான் இவ்வளவு காலம் வாழ்வேன்!'' என்று தெளிவாகச் சொன்னார்.
அரசரால் அவரைக் கொல்ல முடியவில்லை. அது மட்டும் அல்ல. அவரைப் பாதுகாக்கும் பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டியது ஆயிற்று.
அப்படியானால், சோதிடர் தன் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று சொல்லி இருப்பார்?
விடை:
''அரசரே என் வாழ்நாளும், உங்கள் வாழ்நாளும் பின்னிப் பிணைந்து உள்ளது. நான் இறந்த பத்தாம் நாள் நீங்கள் இறந்து விடுவீர்கள்,'' என்றார் சோதிடர். சோதிடர் உயிருடன் இருந்தால் தான் தான் உயிருடன் இருக்க முடியும் என்பதை அறிந்தார் அரசர். அவரைப் பாதுகாக்கும் பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டியதாக ஆயிற்று.
