
புதுக்கோட்டை மாவட்டம், நாகமலை, சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2009ல், 6ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியை ஆலிஸ். கணித பாடம் நடத்துவார்; மிகவும் அன்பானவர். என் கண்களுக்கு தேவதை போல காட்சி தருவார்.
ஒரு நாள், இடைவேளை நேரத்தில், அணில் ஒன்று வகுப்பறைக்குள் நுழைந்து விட்டது. கத்தி, கூச்சல் போட்டு குதித்தனர் மாணவியர். மிரண்டு ஓடிய அணில் மிதிபட்டு இறந்தது.
அடுத்து, வகுப்புக்கு வந்த ஆசிரியை, அணில் உடலைக் கண்டார்; கோபம் பொங்க, மாணவியரை வரிசையில் நிறுத்தி அடித்தார்; வகுப்பே நிசப்தமானது.
கண்ணீர் அஞ்சலி செலுத்தியபடி, 'உலகில் வாழ உங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அது போல அனைத்து உயிரினங்களுக்கும் உரிமை உள்ளது. சற்றே அமைதியாக இருந்திருந்தால், தானாக வெளியேறியிருக்கும் அந்த அணில். வாய் இல்லா ஜீவனைக் கொன்று விட்டீரே...' என கடிந்தார். அது மனதில் பதிந்தது.
இப்போது, என் வயது, 22; மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில், முதுகலை கணிதம் படிக்கிறேன். அன்று ஆசிரியை கூறியதை மனதில் கொண்டு விலங்குகளை மதிக்கிறேன்; கோடை காலத்தில் பறவைகளுக்கு நீர் வைத்து உதவுகிறேன்.
- செ.மதுமிதா, மதுரை.

