
திருவாரூர் மாவட்டம், வடுவூர், உயர்நிலைப் பள்ளியில், 1969ல், ஆசிரியராக பணியாற்றி வந்தேன். அன்று, 9ம் வகுப்புக்கு ஆங்கில பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். திடீர் என தலைமையாசிரியர் சாரங்கபாணி நாயுடு, வகுப்பிற்குள் புகுந்தார்.
என்னை ஓரங்கட்டி, ஆங்கில பாடத்தை அருமையாக கற்பிக்க துவங்கினார். வகுப்பு நேரம் முடிந்து, மணி ஒலித்தும் மாணவர்கள் விடவில்லை. ஆர்வமுடன் அவரிடம் கேள்வி கேட்டனர். அன்று தான், ஆங்கில பாடம் கற்பிக்கும் முறையை புரிந்து கொண்டேன்; அதுபோல் பயிற்சி செய்தேன்.
ஒரு நாள், 'இன்டூ' என்ற ஆங்கில சொல்லை, 'இன் டூ' என, பிரித்து எழுதி விட்டான் ஒரு மாணவன். அடி, வெளுத்து விட்டார். அப்படி எழுதுவது தவறு என, தெரிந்து கொண்டேன்; கற்றதும், பெற்றதும் ஏராளம். அவரிடம் படித்தவர்கள் நல்ல பதவியில் இருக்கின்றனர்.
தற்போது என் வயது, 72; ஓய்வு பெற்று விட்ட நிலையிலும், அந்த தலைமையாசிரியரை நினைவில் இருந்து அகற்ற முடியவில்லை.
- எஸ்.கண்ணன், சென்னை.
தொடர்புக்கு: 94441 37719

