PUBLISHED ON : செப் 14, 2018

நிலத்தில் விளைந்த கரும்புகளை எல்லாம் பார்வையிட்டு கொண்டிருந்தான் சிங்காரம்; அந்நேரத்தில், அவனது நண்பன் வனேஷ் அங்கு வந்தான்.
''நண்பா... காட்டு யானைகள், இந்த பக்கமாக அடிக்கடி வருகின்றன; அவை கரும்பை கடித்து, சின்னா பின்னமாக்கி விடும். எனவே, நீ இங்கு, இரவு நேரத்தில் காவல் காத்திடு! ஒருவேளை, யானைகள் வருகிற அறிகுறி தெரிந்தால், உடனே நெருப்பை காட்டு; யானைகள் ஓடி விடும்...'' என்று, அறிவுரை கூறினான், வனேஷ்.
''ஆமாம்... ஆமாம்... யானைகள் வந்து விட்டால், கரும்பு பயிர் எல்லாம் நாசமாகி விடும். அதனால், உன் ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறேன்; மிக்க நன்றி...'' என்றான், சிங்காரம்.
'ஓரிரு நாட்களில், கரும்புகளை அறுவடை செய்ய வேண்டும்; அதுவரையிலும், யானைகள் உள்ளே நுழையாதவாறு, கவனித்துக் கொள்ள வேண்டும்' என்று முடிவு செய்தான், சிங்காரம்.
அன்று -
இரவு நேரத்தில், கையில் தடியுடன், கரும்பு தோட்டத்தையே சுற்றி சுற்றி வந்தான், சிங்காரம். கையில், தீப்பந்தம் தயார் நிலையில் இருந்தது. யானைகள் வரும், சிறு அறிகுறி தெரிந்தால் கூட, உடனே கையில் இருக்கும் தீப்பந்தத்தை கொளுத்தி, அசைக்க வேண்டும் என்று நினைத்தான்.
முதல் நாள், காவலில், யானைகள் எதுவும் வரவில்லை. இரண்டாம் நாள் காவல் காக்கிற போதும், யானைகள் எதுவும் வரவில்லை. அந்த, இரண்டு நாட்களும், அவன் கண் விழித்து, காவல் காத்ததால், கரும்பு பயிருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
மூன்றாம் நாள், அறுவடை நடைபெற்றது. அப்போது, அவன் களைப்படைந்திருந்தான். ஆனாலும் கரும்புகளை பாதுகாத்து, அறுவடை செய்ததில் மகிழ்ச்சியடைந்தான்; அவனுக்கு நல்ல லாபம் கிடைத்தது.
'கரும்பு அறுவடையில், இந்த முறை தான் அதிக லாபம் கிடைத்துள்ளது; முன்பு கரும்பை பாதுகாக்காததால் குறைந்த லாபமே கிடைத்தது; அந்த வகையில், பாதுகாப்புக்கு அறிவுரை கூறிய நண்பன் வனேஷிற்கு, நன்றியை தெரிவிக்க வேண்டும்' என எண்ணினான். உடனே, அவனை சந்தித்து, தக்க மரியாதை செய்தான்.
குட்டீஸ்... நல்ல நண்பன் மூலம் கிடைத்த அறிவுரை, எத்தனை பயனுள்ளதாக இருந்தது பார்த்தீங்களா... நல்ல நண்பர்களை துணையாக்கி கொள்ளுங்க!
