PUBLISHED ON : அக் 02, 2021

மதுரை, முல்லைநகர், தனபால் மேல்நிலைப் பள்ளியில், 1996ல், 7ம் வகுப்பு படித்த போது, படிப்பில் சராசரியாக இருந்தேன். சக மாணவர்கள் தவறு செய்தால் சுட்டிக்காட்டி உணர்த்துவேன்.
ஒருமுறை, இரு மாணவர்களிடையே மோதல் மூண்டது; இடைமறித்து தடுத்தேன். இருவரும் இணைந்து, என்னை தாக்க வந்தனர். துாரத்தில் நின்ற ஆசிரியர் வையாபுரி இதைக் கண்டதும் ஓடி வந்து தடுத்து, என்னை காப்பாற்றினார்.
அன்று மாலை என்னை அழைத்து, 'தவறுகளை சுட்டிக் காட்டுவது பிடிக்காமல், உன்னை சூழ்ச்சி செய்து தாக்க முடிவெடுத்தனர். அதில் மாட்டிக் கொண்டாய்; தவறு செய்பவர்களை முதலில் ஆய்வு செய்; முக பாவங்களைக் கொண்டே சண்டை, போலியா... உண்மையா என கண்டறிய வேண்டும்...' என்று அறிவுரைத்தார் ஆசிரியர்.
இப்போது, என் வயது, 36; பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறேன்; மாணவர்களிடையே மோதல் வந்தால், அந்த ஆசிரியர் காட்டிய வழியிலே நல்வழிப்படுத்துகிறேன். அவரது அறிவுரையே என்னை வழி நடத்துகிறது.
- பா.நுாருல்லாஹ், மதுரை.
தொடர்புக்கு: 99449 77741
