PUBLISHED ON : அக் 28, 2023

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் பற்றி உணர்ச்சி பொங்க பேசி, உலகின் கவனத்தை ஈர்த்தவர், கிரெட்டா துன்பெர்க். மன அழுத்த நோய் தந்த வலியை, மன வலிமையால் மாற்றியவர்.
இளம் வயதிலே, இவரை உலகின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்து கவுரவித்துள்ளது, உலகப் புகழ் பெற்ற, 'டைம்' இதழ்!
ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஜன., 3, 2003ல் பிறந்தார்.
தாய் மலேனா எர்ன்மேன்; தந்தை ஸ்வாண்டே துன்பெர்க்; இருவரும் பாடகர்கள். பருவநிலை மாற்றத்தால், உலகில் ஏற்பட்டு வரும் விளைவுகள் குறித்து, 2011ல், 8ம் வயதில் அறிந்தார் கிரெட்டா.
பூமியில், வெப்பம் அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொண்டார். அதை, சரி செய்வது குறித்து, உலக தலைவர்களிடம் கேள்விகள் எழுப்பினார். முறையான பதில் கிடைக்காததால், மனம் சோர்வுற்று அமைதியானார். பேசுவதையும், சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டார். அவருக்கு, 'ஆஸ்பெர்கர்' என்ற நோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த நோய்க்கு காரணம், உலகின் மீதுள்ள அக்கறையே என புரிந்து கொண்டனர் பெற்றோர்.
பின், கிரெட்டா விருப்பத்திற்காக, குடும்பத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அன்றாடம், கரியமில வாயு என்ற கார்பன் புகை வரும் உபகரணங்கள் பயன்படுத்துவதை குறைத்தனர். பருவநிலையை பாதிக்கும் செயல்களையும் தவிர்க்க துவங்கினர்.
கிரெட்டா, 9ம் வகுப்பு படித்தபோது, 'டாக்லாடெட்' என்ற பத்திரிகை நடத்திய பருவநிலை மாற்றம் குறித்த கட்டுரை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். உலகம் சந்தித்து வரும் நெருக்கடி குறித்து, அறிவியல் பூர்வமாக அதில் தெரிவித்திருந்தார். அதற்காக பாராட்டுகள் குவிந்தன.
தொடர்ந்து, 'பருவநிலைக்கான பள்ளி மாணவியின் வேலை நிறுத்தம்' என, ஸ்வீடன் மொழியில் கையால் எழுதி, ஒரு பதாகை தயாரித்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பள்ளி செல்வதை தவிர்த்து, அந்த பதாகையை ஏந்தி, ஸ்வீடன் பார்லிமென்ட் கட்டடம் முன் நின்று எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினார்.
இது காட்டுத்தீயாக பரவியது. உலகம் முழுதும் ஆதரவு பெருகியது. ஐரோப்பிய இளைஞர்கள் பெருந்திரளாக இந்த அமைதி போராட்டத்தில் பங்கேற்றனர். வெப்ப நிலை உயர்வால், பூமிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைக்க வழி செய்ய நாடுகளை வலியுறுத்தினர்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின், 24ம் மாநாட்டில் பேசும் வாய்ப்பு கிரெட்டாவுக்கு கிடைத்தது. அங்கு ஆற்றிய உரை உலகை உலுக்கியது.
பின், அட்லாண்டிக் கடலில் புகையில்லாத படகு ஒன்றில் பயணம் செய்து, அமெரிக்கா, நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா., சபை பருவநிலை செயல்பாடு குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதற்காக, இரண்டு வாரங்கள் படகில் பயணம் செய்தார். பின், பருவநிலை தாக்குதல் என்ற பெயரில், பல லட்சம் ஆதரவாளர்களுடன் நடந்து சென்று, அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தார் கிரெட்டா. இது, அமெரிக்காவில் மிகப்பெரிய போராட்டமாக மாறியது.
பூமி எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய ஆபத்தை நீக்குவதில், கிரெட்டா துன்பெர்க் குரலை உயரத்தியுள்ளார். பருவநிலை பாதிப்புகளில் இருந்து உலகம் மீள்வதற்கான செயல்களில் பங்கெடுப்போம்!
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
