PUBLISHED ON : அக் 28, 2023

கடைவீதிக்கு வந்தாள் சிறுமி ராஜி. கடையில், மளிகை பொருள் பட்டியலை நீட்டினாள். சாக்லெட், பிஸ்கெட் என தின்பண்டங்கள் முன் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஆர்வத்துடன் பார்த்தபடி நின்றாள்.
பட்டியலில் குறிப்பிட்டிருந்த பொருட்களை எடுத்து அடுக்கியபடி, ''பாப்பா... காசு கொடுத்து விட்டாங்களா...'' என்றார் கடைக்காரர்.
அம்மா தந்திருந்த, 100 ரூபாய் நோட்டை நீட்டினாள் ராஜி.
''பொருட்களின் மதிப்பு, 99 ரூபாய் ஆயிருக்கு...''
பில்லை வாங்கி ஓரமாக அமர்ந்து கூட்டி பார்த்தாள்.
கணக்கு சரியாக இருந்தது.
வாங்கிய பொருட்களை பையில் போட்டபடி, ''மீதம், 1 ரூபாய் எங்கே...'' என்றாள் ராஜி.
கடைக்காரருக்கு பொருளாக தந்து தான் பழக்கம்.
தயாராக வைத்திருந்த சாக்லெட்டை நீட்டினார்.
''வேண்டாம்... பணமா கொடுங்க...''
''அட! இங்க பாருடா... இந்த பொண்ணுக்கு சாக்லெட்டு பிடிக்காதாம்...''
பொருள் வாங்க காத்திருந்தவரிடம் கூறி சிரித்தார் கடைக்காரர்.
''சாக்லெட் பிடிக்காதா...''
கேட்டார் அருகில் நின்றவர்.
''பிடிக்குங்க...''
''அப்ப வாங்கிக்கோயன்...''
''வேண்டாம்... நீங்க வாங்கிக்க சொன்னதா அம்மா நினைக்க மாட்டாங்க... நானே, மீத காசுக்கு வாங்கிட்டதா எண்ணத் தோன்றும். அது தப்பான அபிப்ராயத்தை உருவாக்கி விடும்; மீதம் ரூபாயை கொடுங்க; அம்மாவோடு வரும்போது, சாக்லெட் வாங்கிக்குறேன்...'' என்றாள் ராஜி.
அவள் செயலை வியந்து பாராட்டினார் கடைக்காரர்.
குழந்தைகளே... ஆசை வலையில் விழாது எப்போதும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்!
- விஷ்ணுவரதன்
