/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
அதிமேதாவி அங்குராசு - மைசூர் அரண்மனை!
/
அதிமேதாவி அங்குராசு - மைசூர் அரண்மனை!
PUBLISHED ON : ஜன 21, 2023

மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்கள், காலத்தால் அழிக்க முடியாத கலைப் பொக்கிஷங்களை விட்டு சென்றுள்ளனர். மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில், மைசூர் நகரின் மையப்பகுதியில் கலை நுட்பத்துடன் கட்டப்பட்டது ஒரு அரண்மனை. எதிர்பாராத விதமாக தீ விபத்தில், 1897ல் நாசமானது.
பின், மன்னராக பொறுப்பேற்ற மும்மடி கிருஷ்ணராஜ உடையார், புதிய அரண்மனையை உருவாக்க திட்டமிட்டார். அந்த பொறுப்பை, ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த ஹென்றி இர்வினிடம் ஒப்படைத்தார். இவர் சென்னை மாகாணத்தில் கட்டடக்கலை நிபுணராக இருந்தார்.
அரண்மனை அமைக்கும் பணி, 15 ஆண்டுகள் நடைபெற்றது. பணிகள் முடிந்து, 'அம்பா விலாஸ்' என பெயரிட்டு, 1912ல் திறக்கப்பட்டது. இதன் நீளம், 245 அடி; அகலம், 150 அடி. சாம்பல் நிற சலவைக் கற்களால், 150 அடி உயரத்தில் கட்டப்பட்டது. உள்பகுதியில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் உள்ளன.
அரண்மனையை ஒட்டி, 44.2 மீட்டர் உயரத்துக்கு ஐந்து அடுக்கு கோபுரம் உள்ளது. இதன் மேற்பகுதியில், தங்கத்தால் அலங்கார கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரண்மனைக்குள், 'பொம்மை விதானம்' என்ற வாசல் வழியாக நுழையலாம்.
இரண்டாம் தளத்தில், மன்னர் குடும்ப திருமண வைபவ அரங்கு உள்ளது. இங்கிருந்து சாமுண்டிமலை கோவிலை தரிசனம் செய்யும் வகையில் நேர்கோட்டில், தர்பார் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அரண்மனை வளாக துாண் மற்றும் கம்பங்களில் சிற்ப கலைஞர்கள் கைவண்ணத்தில் பலவித படைப்புகள் உள்ளன. கதவு, ஜன்னல், அலங்கார கண்ணாடி, அலமாரிகளில் கலை நுணுக்கம் மிளிர்கிறது.
அரண்மனை வளாகத்தில் ஆங்காங்கே கண்ணாடி சுவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்கள் அழகு சேர்க்கின்றன. ஆட்சி, வரலாறு ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.
இந்தியா சுதந்திரம் பெற்றபின், இந்த அரண்மனை அரசு உடமையாக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கட்டடத்தை சுற்றி, 97 ஆயிரம் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. சனி, ஞாயிறு இரவுகளில், 60 நிமிட நேரம், இந்த விளக்குகள் ஒளிரவிடப்படுகிறது. அந்த வெளிச்சத்தில் அரண்மனை ஜொலிப்பதை காண சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.