PUBLISHED ON : ஏப் 11, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
ஸ்பூனில் அல்ல டம்ளரில் குடிக்கலாம்!
நாமெல்லாம் தண்ணீரை எப்படி குடிப்போம்... அள்ளி... அள்ளி... குடிப்போம். ஏன் அண்டா.... அண்டாவாய்... குடிப்போம்.
அவுன்சு.. அவுன்சாய்... டானிக்போல் டீஸ்பூனில் தண்ணீர் குடிக்கும் மக்கள் வாழும் பகுதியும் இப்பூமியில்தான் இருக்கிறது.
நமக்கு ஆண்டவன் மழை மூலம் தண்ணீர் தருகிறார். மெட்ரோ வாட்டர் இருக்கிறது. மினரல் வாட்டர் இருக்கிறது. கிணறுகள் இல்லாது போனாலும் போர் போட்டு குடைந்தால், பீறிட்டு பொங்கும் தண்ணீர் செல்வத்துக்கு அப்படி யொன்றும் பெரும் பஞ்சம் இல்லை. தண்ணீர் பஞ்ச காலங்களில் கூட எப்படியோ சமாளித்து கடந்து வந்து விடுகிறோம்.
இதோ படிக்கப் போகும் விஷயத்தை ஞாபகத்தில் கொண்டு தண்ணீரை சரியாய் பயன்படுத்துவோம். நமக்கு கிடைத்து இருக்கும் இயற்கையின் அருளாம் தண்ணீரை நினைத்து கொஞ்சம் நன்றி வேண்டும்.
நீரின்றி அமையாது உலகு. இயற்கை இந்த நீரை கண்ணில் கூட காட்டாத பகுதிகள் உலகில் நிறையவே இருக்கின்றன. தண்ணீருக்காக தினசரி பல கிலோ மீட்டர்கள் நடந்தே ஆக வேண்டிய கட்டாயம்- கொடுமை அனுபவிக்கிறது மக்கள் தொகையில் கணிசமான பகுதி. இது ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் இன்று நேற்றல்ல, காலம் காலமாக இருக்கிறது.
கென்யா, எத்தியோப்பியா, சூடான், துனிஷா எல்லாம் ஊரறிந்த பெயர்கள். வெனிசூலா, கியூபாவில் எல்லாம் கூட தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுவதாக யுனெஸ்கோ சொல்கிறது.
அடுத்த பெரும் யுத்தங்களை எண்ணெய் தீர்மானிக்குமென்று பல யூகங்கள் நிலவு கின்றன. உண்மையில் தண்ணீரால்தான் தகராறு வரப்போகிறது என்றும் பல யூகங்கள் உண்டு.
இவ்வாறான தண்ணீர் பஞ்ச பகுதிகளில் 'இன்று தண்ணீர் குடித்தேன்' என்று ஒருவருக்கு ஒருவர் சொல்லி கொள்ளும் அவலத்தைப் பற்றி தண்ணீர் பிரச்னை இல்லாது நம்மால் புரிந்து கொள்ள இயலாது.
அது போன்ற பகுதி களில் தம்மால் முடிந்ததை அரசாங்கங் களும், பொது நல அமைப்பு களும் செய்து கொண்டுதான் இருக்கின்றன.
என்ன செய்தாலும் நாளுக்கு நாலு ஸ்பூன் டானிக் மாதிரி அளந்து குடி என்பதெல்லாம் யாருக்கு கட்டுப்படியாகும்?
இங்கே பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை போன்றவற்றை கொடுப்பர். அங்கே அதிசயமாய் தண்ணீர் தாராளமாக கிடைத்தால் மேற்படி தேசத்து ராஜாக்கள் அதைத்தான் பிரித்து கொடுத்து புண்ணியம் கட்டி கொள்வர்.
உற்பத்தி செய்து பிரச்னை தீர்க்கும் விஷயம் அல்லவே தண்ணீர்! இது போன்ற சூழலில், கென்யாவில் ஒரு அதிசயம் நிகழ்ந்து இருக்கிறது.
தண்ணீருக்கு ததிங்கிணத்தோம் போடும் தலையாய தேசம். கென்யாவில்தான் அது நிகழ்ந்தது. என்னென்னவோ செய்து பார்த்தும் பல்லாண்டு காலமாக தேசத்தின் குடிநீர் பிரச்னையை தீர்க்க வழி தேடி விழி பிதுங்கி நின்ற நாடுதான்.
வெடித்த மண் பாளங்களை தவிர வேறெதும் பார்த்திராத மக்களுக்கு, அந்த செய்தி நம்ப முடியாத பேரதிசயமாக போய் விட்டது. கென்யாவின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் (டர்க்கானா என்ற ஆதி இனக் குழுவினர் சுமார் ஒரு கோடி பேர் வாழும் பிராந்தியம்) போன வருடம் எண்ணெய் கிடைக்கிறதா என்று குடைந்து பார்த்து ஒரு பெரிய எண்ணெய் கிணற்றை கண்டுபிடித்தனர்.
எண்ணெய் இருக்கிறது என்று சொல்லி விட்டால் முதலீட்டாளர்கள் சும்மா இருப்பார்களா?
உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு, உடனடி அந்தஸ்துயர்வு, அடிப்படை வாழ்க்கை தரத்தை அப்படியே செண்ட்ரலைஸ்டு ஏசி செய்யப்பட்ட செகண்ட் ப்ளோரில் வைக்கிறேனா இல்லையா பார் என்று வரிந்து கட்டி கொண்டு வந்தனர்.
நாளது தேதியில் எண்ணெய் எடுப்பு வேலைகள் தீவிரமாகவே நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது ஆண்டவன் அங்கே இன்னொரு கிணறு தோண்ட சொல்லி இருக்கிறான்.
இந்த கிணற்றில் எண்ணெய் கிடையாது. ஆனால், கென்ய மக்களுக்கு எது எண்ணெயை காட்டிலும் உன்னதமோ அது இருந்தது. அது என்ன தெரியுமா?
தண்ணீர்-தண்ணீர்-தண்ணீர் தான். பிராந்தியத்தில் சுமார் இருநூறு பில்லியன் க்யூபிக் மீட்டர், தண்ணீர் ஸ்டாக் இருக்கிறது என்று யுனெஸ்கோ சொல்லிவிட்டது.
கென்யாவின் தண்ணீர் என்பது அரசு சொத்து. தனியார் ஒன்றும் செய்ய முடியாது. போன வருடம் எண்ணெய் இருப்பு தெரிந்த போது முந்தி கொள்ள பார்த்த முதலீட்டாளர் களின் எண்ணிக்கையை விட இன்று தண்ணீர் இருப்பு தெரிந்த பின் படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகமே.
என்றென்றும் அன்புடன், அங்குராசு
