PUBLISHED ON : செப் 02, 2016

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
செல்போன் - சில யோசனைகள்!
* அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் எப்போது வெளியே சென்றாலும் செல்போனை எடுத்துச் செல்வது நல்லது. 'லிப்டில்' பிரச்னை என்றாலோ, மேல் மாடியில், 'லிப்ட்' கதவை யாராவது சரியாக மூடவில்லை என்றாலோ உடனடியாக தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.
* செல்போனில் பாட்டரி சார்ஜ் செய்கையில், இன்டிகேட்டர் ஸ்கிரீனில் நான்கு அல்லது ஐந்து கோடுகள் காண்பிக்கும். இரண்டு கோடுகள் வந்த உடனேயே சார்ஜ் செய்துவிட்டால், 'கரண்ட் கட்' ஆகும் நேரங்களில், 'மொபைல் ஆக்டீவ்' ஆக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். தேவையற்ற டென்ஷனையும் தவிர்க்கலாம்.
* குடும்பத்தினர் ஒவ்வொருவரும் மற்றவர்களின் செல்போன் IMEI எண்ணை பதிவு செய்து தங்கள் செல்போனில் வைத்துக் கொண்டால், போன் தொலைந்து போகும் பட்சத்தில் புகார் செய்ய வசதியாக இருக்கும்.
* செல்போனில் பதிவு செய்திருக்கும் எண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிடவும். தவறுதலாக அழித்து விட்டாலோ, போன் தொலைந்து விட்டாலோ மீண்டும் போனில் ஏற்றிக் கொள்ளலாம்.
* செல்போனில் பேசியபடி நடப்பதாலும், வாகனம் ஓட்டுவதாலும் தான் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்த இரண்டு செயல்களையும் தவிர்க்கவும்.
* செல்போனில் தேவையற்ற கட்டணம் பிடித்தால் கஸ்டமர் கேருக்கு போன் செய்து, 'டராய்' (TRAI)அமைப்புக்கு புகார் செய்வேன்' என்று சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். Telephone regulatory authority of india என்பதன் சுருக்கம்தான் ட்ராய்.
* செல்போனை, 'டிவி', 'ப்ரிட்ஜ்', 'கம்ப்யூட்டர்' போன்ற மின்சாதனப் பொருட்களின் அருகில் வைக்கக்கூடாது. 'பேட்டரி வீக்' ஆகிவிடும்.
* செல்போன்களில் நாம் உபயோகிக்காத ஆப்ஷன்களை ஆப் செய்து வைப்பதன் மூலம் பேட்டரியின் சக்தியை சேமிக்கலாம்.
* தோழிகளுடன் செல்போனில் பேசும்போது ஹெட்செட்டை மாட்டிக் கொண்டால், வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டே அரட்டை அடிக்கலாம்.
* செல்போனில், 'சார்ஜ்' குறைந்து ஒரு கோடு இருக்கும்போது பேசக் கூடாது. அப்போது அதில் ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும். அந்த சமயத்தில், 'போன்' பேசுவதை தவிர்க்கவும்.
மூடு மந்திரம்!
எதையும், யாரிடமும் 'மூடு' பார்த்துத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. சரி! இந்த, 'மூடு' பற்றி என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? 'மூடு' என்பதை மனநிலை என்று மொழி பெயர்க்கலாம். நல்ல மனநிலையைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. சில சமயங்களில் கவலை, கோபம், வருத்தம், சோம்பல் போன்ற தீய மனநிலைகள், நாள் கணக்கில் நீடிப்பது உண்டு. அதை எப்படி நீடிக்கவிடாமல் செய்வது?
எளிய வழிகள் இதோ...
* தீய மனநிலையை நல்லதாக மாற்ற மூச்சுவாங்க வைக்கிற உடற்பயிற்சிகள் உகந்தவை. அப்போது, அதிக அளவில் ஆக்சிஜன் உடலுக்குள் பாயும். இதயம் படபடவென்று அடித்துக் கொண்டு உடல் முழுவதும் ரத்தம் வேகமாகப் பரவும். இருபது நிமிடங்களாவது வேகநடை, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், மெல்ல ஓடுதல், கயிறு தாண்டுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
* உடலுக்கு வைட்டமின்கள் வலுவூட்டுவதைப் போல வண்ணங்கள் மனதுக்கு வலுவூட்டும். மனதில் கோபமும் எரிச்சலும் உள்ளபோது, சிவப்பு நிறப் பொருட்களைப் பார்க்காமல் தவிர்க்கலாம். மனச் சோர்வின்போது கருப்பு, கருநீலம் ஆகிய நிறங்கள் அதை அதிகமாக்கும். பிரகாசமும், விறுவிறுப்பும் கொண்ட நிறங்கள், மனதிலும் அப்பண்புகளை உண்டாக்கும். மென்மையான நீலவகை நிறங்கள் கவலையையும், மன இறுக்கத்தையும் தணிக்கும். நீல வானத்தையும், நீலக்கடலையும் பார்த்துக் கொண்டிருந்தால், சில நிமிஷங்களுக்குள்ளாவே மனதில் அமைதி பரவும்.
* ஒத்த இயல்பு- இசை மருத்துவம் என்ற உத்தி மனதைச் சீர்நிலைக்குக் கொண்டு வரும். மனம் சோகத்திலிருக்கும்போது, 'உலகமே மாயம், வாழ்வே மாயம் ' போன்ற சோக ரகப் பாடல்களை நாடாப் பதிவுக் கருவியில் போட்டுக் கேட்கலாம். அதற்கு வசதியில்லாதபோது நாமே பாடலாம். இதைத் தொடர்ந்து உற்சாகமூட்டும் நான்கு பாடல்களைக் கேட்க அல்லது பாட வேண்டும்.
* உணவுக்கும், உள்ளத்துக்கும் இடையில் நெருக்கமான உறவு உண்டு. குளூக்கோஸ், அரிசி, கிழங்குகள், கோதுமை போன்ற கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள் மனதில் அமைதியை உண்டாக்கும். அவை மூளையில் செரட்டோனின் என்ற நரம்பு உணர்வுக் கடத்திகளின் உற்பத்தியை அதிகமாக்குகின்றன.
* அது மனதிலும், உடலிலும் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தி, அமைதியை உண்டாக்கும். புரதங்கள் மன ஆற்றலையும், செயலுறு திறனையும் நீடிக்கச் செய்யும். பருப்புகள், மீன், கோழி இறைச்சி போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. சாக்லேட், காபி, தேநீர், கோலா, போன்றவற்றை அதிகமாக உட்கொண்டால் அவற்றிலுள்ள கபீன் மனநிலையைப் பாதித்து கவலையையும், எரிச்சலையும் அதிகமாக்கும்.
* மங்கலான ஒளி, மனதில் சோர்வை உண்டாக்கும். மழைக் காலங்களில் பலர் இதை அனுபவிக்கிறார்கள். நோயாளிகள் மழைக் காலங்களில் கூடுதலாக வாடுவர். நல்ல வெளிச்சமான, அதிக விளக்குகள் உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தைக் செலவழிப்பது உள்ளத்துக்கு உவகையூட்டும்.
* ஆழ்ந்து தூங்கினாலே மனச்சோர்வு, கவலை, இறுக்கம் போன்றவை தணியும். தூங்கும்போது வரும் கனவுகள் அதற்கு உதவும். அவை மனதில் இறுக்கத்தை உண்டாக்கிய நிகழ்வுகளின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்யும். பல சமயங்களில் நமது பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கூடக் கனவுகள் வழங்கும். தூங்கியெழுந்த பின், மனம் லேசாகிப் புத்துணர்ச்சி பெற்றிருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.
