PUBLISHED ON : மார் 18, 2011

அனைவருக்கும் எனது அன்பு.
இட்டாரிக்கா!
நாம் தினமும் காலையில் டிபன் சாப்பிடுகிறோம். நமது முக்கிய டிபன் ஐட்டங்களாக இட்டாரிக்கா மற்றும் தோசையை சொல்லாம். இவற்றிற்கு சட்னி, சாம்பார், ஆகியவை சிறப்பான சேர்க்கைகள். இட்டாரிக்கா என்பது சிறியதாக, வெண்மை நிறத்தில் இருக்கும்.
தமிழர்களின் தனி அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது இந்த இட்டாரிக்கா! என்ன இட்டாரிக்கா-ன்னு ஒரு விஷயத்தை கேள்வியே பட்டதில்லையே, இதுல டிபனுங்குற தமிழர்களின் அடையாளங்களின் ஒண்ணுங்குறே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
இட்லியோட பழைய பெயர்தான் இந்த 'இட்டாரிக்கா' என்பது. அரிசி கலக்காத உளுந்த மாவை புளிக்க வைக்காம எடுத்து, உப்பு மட்டும் சேர்த்து தோசைக்கல்லிலோ பாத்திரத்திலோ ஊற்றி நெய் சேர்த்து சுட்டு சாப்பிட்டவங்க நம்ம ஆட்கள்.
அரிசி மாவை புளிக்க வைச்சு, பலகாரங்கள் தயாரித்து சாப்பிடறதுதான் இந்தோனேசியர்கள் பழக்கம். கெட்லின்ற உணவு அவர்களுக்கு பிடித்தமான உணவு. அவங்க, இங்கே பெண் தேடி வந்த சமயம், நம்மகிட்ட இருந்த உளுந்த மாவையும், அரிசி மாவையும் கலந்து புளிக்க வைச்சு உணவு தயாரித்து சாப்பிட்டாங்க.
இந்தோனேசியர்கள் உருவாக்கிய முறையில், அரிசி மாவையும், உளுந்து மாவையும் கலந்து புளிக்க வைச்சு, அதை ஆவியில், வேக வைச்சு, அதுக்கு 'இட்லி'ன்னு பேர் கொடுத்து புரட்சி செய்துட்டாங்க நம்ம மக்கள்.
வீட்ல, ஹோட்டல் இனிமே, 'இட்டாரிக்கா சாப்பிட கொடுங்கன்னு' கேட்டு 'லந்து' பண்ணுங்கப்பா! அப்புறம் இந்த இட்டாரிக்கா டு இட்லி ஸ்டோரியை எடுத்து விடுறீங்களா!
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'காலிப்ளவர் சீஸ் மசாலா பூரி'
செய்முறைக்கு தேவையான பொருட்கள்:
இது நான்கு பேருக்கு சாப்பிட போதுமான அட்டவணை:
கோதுமை மாவு - 200 கிராம், துருவிய காலி ப்ளவர் - 200 கிராம், துருவிய பெரிய வெங்காயம் -50 கிராம், துருவிய சின்ன வெங்காயம் - 50 கிராம், பச்சை மிளகாய் - இரண்டு, எலுமிச்சம் பழம் -ஒன்று, தேங்காய் துருவல்-1, மேஜைக்கரண்டி, துருவிய பாலாடை - 2, மேஜைக்கரண்டி, கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி, நெய் - 1 தேக்கரண்டி, சோடா உப்பு - 1 தேக்கரண்டி, சீரகப்பொடி-அரை தேக்கரண்டி, மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி, மஞ்சள் பொடி - சிறிதளவு, கொத்தமல்லி தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவிற்கு
செய்முறை:
கோதுமை மாவுடன் உப்பு, மஞ்சள் தூள், சோடா உப்பு, மிளகாய் தூள், சீரக பொடி, நெய், நீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், காலி பிளவர் சேர்த்து நன்றாக வதக்கவும். நன்கு வதக்கிய பின் , தேங்காய் துருவல், பாலாடை துருவல், மல்லித்தழை, எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த மசாலாவை பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவுடன் சேர்த்து பூரியாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இந்த மசாலா பூரிக்கு புதினா, கொத்தல்லி சட்னி பொருத்தமா இருக்கும்.
வந்தாச்சு ஐந்திற்கு!
கடந்த 2000 முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் சர்வ தேச அளவில் பொருளாதார வலிமையில், இந்தியா ஐந்தாவது இடத்தில் வந்து <உட்கார்ந்துள்ளது.
இந்த அந்தஸ்தில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களிலும் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முறையே மூன்றாவது, நான்காவது இடங்களிலும் உள்ளன. இந்த பொருளாதார வலிமை ஒரு நாட்டின் வருவாய், அன்னிய செலவானி கையிருப்பு, பொருள்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி, மனித வளம் ஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சகம் கடந்த 2000-2009 ஆம் ஆண்டுகளுக்கிடையில் 112 நாடுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வை மேற்கொண்டது. கடந்த 2000-ஆம் ஆண்டில், பொருளாதார வலிமை அடிப்படையில் நம் நாடு 10-வது இடத்தில் இருந்தது. 2009-ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அன்னிய செலவாணி கையிருப்பு ஏற்றுமதி மற்றும் வரி வருவாய், மனிதவள மேம்பாடு ஆகியவை நன்றாக இருந்தால், சர்வதேச சந்தைகளில் அந்நாட்டின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். இதனால், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நிதியை திரட்ட முடியும். சர்வதேச அளவில் வர்த்தக நடவடிக்கைளில் முன்னிலை வகிக்க முடியும். நம் நாடு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அடிப்படையில் ஆசியாவில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது.
பொருளாதார வளர்ச்சி வேகத்தில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் நம் இந்தியா உள்ளது! வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி! ஆகா, ஆகா, அங்கும், இங்கும் எங்கும் என நம் இந்தியாவிற்கு நேராக வளர்ச்சி என்று எழுதப்படுவது எவ்வளவு ஆனந்தம். நம் அன்பு அப்துல்கலாம் அவர்களின் இலக்கை அடைவோம்!
இயற்கையான வாக்ஸிங்!
உடலில் தேவையில்லாத முடிகளை நீக்க கெமிக்கல் வாக்ஸிங் என்பது ஒரு வழி. அதுமட்டுமே வழியல்ல. இயற்கையான பொருட்களை வைத்தே வாக்ஸிங் செய்யலாம்.
நாம் பாட்டியும், அம்மாவும் கூட பயன்படுத்திய பொருட்கள்தான் இவை. பெண்களே வீட்டிலிலேயே உங்கள் பிரச்னையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
கஸ்தூரி மஞ்சள் வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தாலே முடி வளர்வதை தடுக்கலாம்.வேப்பிலை வெந்நீரில் போட்டு குளித்து வந்தாலும் முடி வளர்ச்சி கட்டுக்குள் இருக்கும். வேப்பங்குச்சியை எரித்து அதன் சாம்பலை உடம்பில் பூசி குளித்து வந்தாலும் முடி வளர்வது குறைவாக இருக்கும்.
கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், கார்போக அரிசி, கோஷ்டம் வேர், விளாமிச்சை வேர், ரோஜா இதழ், செண்பகமொட்டு இவைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி அரைத்து 250 கிராம் எடுத்து கொள்ள வேண்டும். இத்துடன் 250 கிராம் பயத்தம் பயிரையும் அரைத்து ஒன்றாய் கலந்து குளியல் பொடியாக தயார் செய்து கொள்ளவும்.
குளிப்பதற்கு முன்னர் உடலில் எண்ணெய் தடவி கொண்டு பின்னர் கஸ்தூரி மஞ்சள் மற்றும் பாத் பவுடரை தேய்த்து குளித்து வந்தால் சரும வறட்சி ஏற்படாது. முடி வளர்ச்சியும் கட்டுப்படும்.
அன்புடன்,
அங்குராசு
