PUBLISHED ON : ஜூலை 19, 2019

ஆரோக்கிய துாதர்கள்!
இஞ்சி!
இஞ்சியை மென்றால், தொண்டை பிரச்னை தீரும். தலைவலி போவதோடு, குமட்டலும் விலகும். சுவாச மண்டலத்தில் தேங்கும் நீரை, இஞ்சி எடுத்து விடுவதால், உடல் நலம் மேம்படும். உடலில் ஏற்படும் பாதிப்புகளை தீர்க்க, இஞ்சியே கை கண்ட மருந்து.
எலுமிச்சை!
உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் எலுமிச்சையில் அடங்கியுள்ளன. உடல் பருமன், தொண்டைப் புண், முகப்பரு போன்ற பிரச்னைகளை தீர்க்கும். இதில், 'ஆன்டி ஆக்சிடன்ட்' நிறைந்துள்ளதால், உடல் செல்களை புதுப்பித்து, இளமையை மீட்டு தரும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், பொட்டாஷியம், எலுமிச்சையில் உள்ளது. 'வைட்டமின் - சி' சத்து உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்; தேவையற்ற கொழுப்பை கரைக்கும். எலுமிச்சை பழச்சாறை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
வாழைப்பழம்!
அனைத்து வித புரதச் சத்துக்களும் வாழைப்பழத்தில் உள்ளன. பொட்டாஷியம் சத்து நிறைந்துள்ளதால், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தசை நார்கள் சுருங்கவும், விரியவும் உதவும்; எலும்புகளின் வலுவைக் கூட்டும்.
வாழைப்பழம் சாப்பிட்டால், உடனடியாக சக்தி கிடைக்கும்.'வைட்டமின் - பி' சத்து அதிகம் இருப்பதால், ஜீரண சக்தியை மேம்படுத்தும்.
பிஸ்தா!
கலோரி குறைந்தது, பிஸ்தா விதை; எந்த வயதினரும், தாராளமாக சாப்பிடலாம். இதில், தாமிரம், கந்தகம், பொட்டாஷியம், மக்னீஷியம், வைட்டமின் - பி, என, சத்துகள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவதால், மூளைக்குத் தேவையான கொழுப்பு அமிலம் அதிகம் சுரக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உடல் எடை அதிகரிக்காது. 'ஆன்டி ஆக்சிடன்ட்' நிறைந்துள்ளதால், இதய நோய்களை தடுக்கும்.
பூண்டு!
கந்தகச்சத்து நிறைந்தது பூண்டு; குளிர்காலத்தில், உடலுக்கு இதம் கொடுக்கும். வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்தது. மழைக்காலத்தில் தொற்று நோய்களை எதிர்கொள்ள, உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
நெய்!
இந்திய உணவு வகைகளிலும், மருத்துவத்திலும், பல நுாற்றாண்டுகளாக நெய் பயன்படுத்தப் படுகிறது. நோய்களை குணப்படுத்தும் தன்மை அதிகம். முறையாக சாப்பிட்டால், உடலுக்கும், மனத்துக்கும் நன்மை ஏற்படும்.
கொழுப்பு கெட்டியாக இருந்தாலும், சுலபமாக ஜீரணமாகும். உண்ணும் உணவுக்கேற்ப, இரைப்பையில் அமிலங்களை சுரக்க வைப்பதில், நெய்க்கு முக்கிய பங்கு உண்டு.
மற்ற உணவுகளில் உள்ள வைட்டமின் சத்துக்களை, உடல் சுலபமாக உள்வாங்கும் வகையில் உதவும். வயிற்றுப் புண், மலச்சிக்கல், கண் குறைபாடுகளை தீர்க்கும்.
தானியங்கள்!
தானிய உணவுகளில், நார்ச்சத்து அதிகம். அரிசியில் தவிடு நீக்கப்பட்டால், நார்ச்சத்தோ வேறு புரதங்களோ இருக்காது. முழுதானியங்களில், இந்த சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். உடலை பாதுகாத்து, நலம் பேணும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
