PUBLISHED ON : ஆக 15, 2020

பாடும் பறவைகள்!
மனிதன் பேசுவதையும், பாடுவதையும் நகல் செய்யும் பறவைகள் பல உள்ளன. தமிழகத்தில் கிளியும், மைனாவும் இந்த திறனுள்ளவை. இது போன்ற பறவைகளுக்கு, மொழியை புரியும் திறன் உண்டா என, ஆய்ந்து வருகின்றனர் விஞ்ஞானிகள்.
சில சொற்களை மட்டுமே நினைவில் கொள்ளும் பறவைகளும் உண்டு. பல நுாறு சொற்களை பேசும் திறனுள்ளவையும் உண்டு. ஆப்ரிக்க காடுகளில் வாழும், 'புரூட்லி' என்ற கிளி இனத்தில், ஆண் பறவை, 1000 சொற்களை நினைவில் நிறுத்தி பேசும் திறனுள்ளது.
ஐரோப்பா - ஆசியா கண்டங்களை உள்ளடக்கிய ரஷ்ய நாட்டு காடுகளில் வாழும், 'ஜாக்டாஸ் மேக்பீஸ்' என்ற பறவை பேசவும், பாடவும் திறன் பெற்றது.
அமெரிக்க காடுகளில் வசிக்கும், 'பிரவுன் த்ராஷர்' என்ற பறவையின் பல வகை குரல் வியப்பூட்டும். இது, 3000 விதமாக பாடும் திறன் பெற்றது. பறவையியல் ஆய்வாளர்கள் இதை நுணுக்கமாக ஆராய்ந்து வருகின்றனர்.
ஆப்பிரிக்க காடுகளில், மணிப் பறவையின் பாட்டோசை, ஐந்து கிலோ மீட்டர் துாரம் வரை கேட்கும். ஐரோப்பிய தேன்சிட்டும், ஆஸ்திரேலிய காடுகளில் வாழும், 'வயர்' என்ற பறவையும், இனிமையாக பாடும் திறன் கொண்டவை.
திரவத்தங்கம்!
எரிபொருட்களில் முக்கியமானது பெட்ரோலியம். திரவத்தங்கம் என்று அழைக்கப் படுகிறது. படிவப் பாறைகளில் இருந்து கச்சா எண்ணெயாக எடுக்கப்படுகிறது. இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பொருட்களில் ஒன்றுதான் பெட்ரோல்.
நம் நாட்டில், 4000 மில்லியன் டன் பெட்ரோலிய வளம் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. 1 மில்லியன் டன் என்பது, 90.7 கோடி கிலோ எடை ஆகும்.
இந்தியாவில் முதன் முதலாக, அசாம் மாநிலம், டிக்பாய் என்ற இடத்தில், 1867ல், பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம், காம்பே வளைகுடாவில் கலோல் என்ற இடத்திலும், அங்கலேஸ்வர், லுானேஜ் பகுதிகளிலும், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கடற்கரை, பேசீன் பகுதியிலும், பெட்ரோலிய வயல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில், குறைந்த அளவில் தான் எண்ணெய் வளம் உள்ளது. துாத்துக்குடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை நிறுவ உள்ளதாக, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
முள்முடி வேந்தன்!
பயிர்களைக் காக்க, வேலி போடும் வழக்கம், பழங்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்படுகிறது. துவக்கத்தில் முள்செடிகளை நட்டு வளர்ப்பது வழக்கம். பெரிய குடியிருப்புகளை பாதுகாக்க கூட, முள்செடி வேலி தான் இருந்தது. இரும்பு கம்பிகளால் வேலி அமைக்கும் வழக்கம் சமீபத்தில் தான் அறிமுகமானது.
முள்கம்பி வேலி அமைக்கும் முறையை கண்டறிந்தவர், அமெரிக்கா, இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஜோசப் கிளீட்டன். இதற்காக, 1873ல் ஓர் இயந்திரத்தை உருவாக்கினார்.
இது, முள்கம்பி வேலியை மிகவும் மலிவாக தயாரித்தது. அமெரிக்க கால்நடைப் பண்ணைகளுக்கு முள்கம்பி வேலி பெருமளவு தேவைப்பட்டது. துவக்கத்தில் அதை பூர்த்தி செய்தது இவரது தயாரிப்பு. முதல் உலகப்போரில், இதன் தேவை அதிகமானது.
உலகம் முழுக்க, கம்பி வேலி பரந்து விரிந்திருக்கிறது. மதில் எழுப்பும் வேலைப்பளு, செலவை குறைத்து, எளிமையாக உதவுகிறது முள்கம்பி வேலி அமைப்பு.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
