PUBLISHED ON : மார் 05, 2022

களைப்பு நீங்க!
உழைப்பவருக்கு களைப்பு ஏற்படுவது இயல்பு; உழைப்பின்றி பொழுது போக்குகிறவர்களுக்கு, களைப்பு ஏற்பட்டால் விபரீதம் என உணர வேண்டும். அடிக்கடி களைப்பு ஏற்பட்டால் உரிய காரணத்தை தேட வேண்டும்.
களைப்பு பற்றி ஆராய்ந்துள்ள, மருத்துவ அறிஞர் ஜேன் பிராடி பல உண்மைகளைக் கண்டறிந்து விளக்கம் அளித்துள்ளார்.
அதன் விபரம்...
* கடுமையாக உழைக்கும்போது, கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகள் அதிக அளவில் ரத்தத்தில் கலக்கிறது. இதனால், ரத்தம் மாசுபட்டு களைப்பு ஏற்படுகிறது
* ஜலதோஷம், நீரிழிவு, புற்றுநோய் அறிகுறி இருந்தாலும், உடல் விரைவில் களைத்துவிடும்
* உணர்ச்சி வசப்படுதல், மனத்தளர்ச்சி, எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனால் ஏற்படும் ஏமாற்றம் போன்றவற்றாலும் களைப்பு ஏற்படும்
* உணவை அவசரமாக உண்பது, சரிவர உண்ணாமல் தவிர்ப்பது போன்றவற்றாலும் களைப்பு ஏற்படும்
* உடலில் சர்க்கரை சத்தின் அளவு குறைவாக இருந்தால் களைப்பு ஏற்படும்
* கடும் உடற்பயிற்சி, குறைந்த உறக்கம் போன்றவையும் களைப்பு ஏற்பட காரணமாகும்.
களைப்பு பற்றி மற்றொரு ஆச்சரியமான தகவல் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
குறைப்பிரசவத்தில், அதாவது எட்டு மாதங்களில் பிறந்தவர்கள் எளிதில் களைப்படைந்து விடுகின்றனர் என்பதுதான் அது.
அடிக்கடி களைப்பு, தொண்டைக் கமறல், கண் எரிச்சல், லேசான நடுக்கம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் சொட்டுதல் போன்றவை ஏற்பட்டால் ஜலதோஷத்தின் அறிகுறிகள். ஜலதோஷம் பாதித்த ஒருவரை, எளிதாக பிற நோய்கள் தாக்கக்கூடும். எனவே, மிக கவனமாக இருக்கவும்.
தொல்லை தரும் ஜலதோஷத்தை தடுக்கும் வழிமுறைகளைப் பார்ப்போம்...
ஜலதோஷம் வராமல் தடுக்கும் மிகச்சரியான மருந்து, ஒருவகை அமிலம் தான்; அதன் பெயர் அஸ்கார்பிக். இது, நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு, 80 மில்லி கிராம் தேவை. குழந்தை ஈன்ற தாய் என்றால் சற்று அதிகமாக, 100 மில்லிகிராம் தேவைப்படும்.
இந்த அமிலச்சத்து அளவு குறைந்தால், மிக எளிதில் நோய் தொற்றிக்கொள்ளும்.
களைப்பு ஏற்படும்போது, எலுமிச்சம் பழச்சாறு அருந்தலாம். அதில், இந்த அமில சத்து அதிகம் உள்ளது. அமிலத்தின் மற்றொரு வடிவம் தான், 'வைட்டமின் - சி' சத்து. இது, இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளில் அதிகம் உள்ளது. நெல்லிக்காய் போன்றவற்றை தேவைக்கேற்ப உண்டு, களைப்பை களைவோம்.
தொல்லை அழைப்பு!
அலைபேசிக்கு வரும் தேவையற்ற மற்றும் தொல்லை தரும் அழைப்புகளை கட்டுப்படுத்த, 'மொபைல் அப்ளிகேஷன்' பல இருக்கின்றன. இருப்பினும் பிரச்னை முற்றிலும் ஒழிந்த பாடில்லை. இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில், கூகுள் நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது.
இதற்காக, 'கூகுள் போன்' என்ற அப்ளிகேஷனை, ஏப்ரல், 2018ல் உருவாக்கி பரிசோதனை செய்து வருகிறது, கூகுள் நிறுவனம்.
இதில், அலைபேசிக்கு வரும் அழைப்புகளை, பில்டர் செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, காலர் ஐடி மற்றும் ஸ்பேம் பாதுகாப்பு என்று பெயர். இதன் மூலம் தேவையற்ற அழைப்புகளை பிரித்து தவிர்த்துவிடலாம்.
தேவையற்ற அழைப்புகளை, நேரடியாக வாய்ஸ் மெயிலுக்கு அனுப்பி விடுகிறது இந்த அப்ளிகேஷன். காலர் ஐடி மற்றும் ஸ்பாம் பாதுகாப்பு சேவை செயல்படும்போது, தொடர்பு பட்டியலில் இல்லாத எண்ணில் இருந்து வரும் அழைப்பை தவிர்க்கிறது.
இது குறித்து எச்சரிக்கை தகவலையும் தருகிறது. தேவையற்ற அழைப்புகளை தடுக்க, அலைபேசியில், 'ஸ்பாம் கால்' என்பதை ஆன் செய்திருந்தால் போதும். தேவைக்கு ஏற்ப இதை மாற்றிக் கொள்ளலாம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
