PUBLISHED ON : மார் 05, 2022

மார்ச் 8, உலக மகளிர் தினம்
பழமையான பரதநாட்டியக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர் ருக்மணிதேவி அருண்டேல். நாட்டியக் கலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், 'கலா ஷேத்ரா' என்ற கலைப்பள்ளியை நிறுவியவர்.
மதுரையைச் சேர்ந்த நீலகண்ட சாஸ்திரி -
சேஷம்மாள் தம்பதியருக்கு, பிப்.,29, 1904ல் பிறந்தார். பள்ளியில் படித்தபோதே முறையாக இசைக் கற்று வந்தார்; நடனம் ஆடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
புகழ்பெற்ற நடன ஆசிரியர் பந்தநல்லுார் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் நடனம் கற்றுக் கொண்டார். அக்காலத்தில் பெண்கள் நடனம் ஆடுவதை யாரும் ஊக்குவிப்பதில்லை.
ருக்மணி தேவியின் நடன அரங்கேற்றம், 1935ல் நடந்தது. சதிர் என்ற நாட்டியக் கலையை மிகுந்த மதிப்புடன், 'பரத நாட்டியம்' என பெயர் சூட்டி அழைத்தார். அந்தக்கலையை மேம்படுத்த உறுதி பூண்டார்.
ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அந்த நடனக் கலைக்கு உயர்வான மதிப்பு இருப்பதைக் கண்டார். இதையடுத்து, 1936ல் சென்னை பெசன்ட் நகரில், 'கலாஷேத்ரா' கலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. வங்கத்தில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் உருவாக்கிய சாந்திநிகேதன் போல, கலைக்கூடமாக உருவாக்க அயராது பாடுபட்டார்.
காளிதாசர் இயற்றிய, 'குமார சம்பவம்' காவியத்தை நாட்டிய நாடகமாக உருவாக்கி அரங்கேற்றினார். பள்ளு இலக்கியமான, குற்றால குறவஞ்சியை நாட்டிய நாடகமாக்கி, ஆனந்த அருவி பாயும் குற்றாலத்திலேயே அரங்கேற்றினார் ருக்மணிதேவி.
சென்னை கலாஷேத்ராவில், ஓவியப்பள்ளி ஒன்றையும் துவங்கினார். கலைக்காக, ராஜ்யசபாவில் நியமனம் பெற்ற, முதல் பெண் எம்.பி., என்ற புகழையும் பெற்றார். விலங்கு வதைக்கு எதிராக ராஜ்யசபாவில் வாதாடினார். அவரது தீவிர முயற்சியால், விலங்கு வதைக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டது.
விலங்கு பாதுகாப்புக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அவரது சேவையைப் பாராட்டி, ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள லண்டன் ராயல் சொசைட்டி, விக்டோரியா அரசி பெயரில் வெள்ளிப் பதக்கம் வழங்கி கவுரவித்தது.
ருக்மணிதேவியின் அரிய சேவைகளை பாராட்டி, பத்மபூஷன் விருதும், சங்கீத நாடக அகாடமி விருதும் வழங்கி கவுரவித்துள்ளது இந்திய அரசு.
கவிஞர் பாரதி எழுதிய பாஞ்சாலிசபதம், உட்பட, 26 நாட்டிய நாடகங்களை தயாரித்து அரங்கேற்றம் செய்துள்ளார். பரதக் கலையை உலகம் அறிய செய்த ருக்மணிதேவி, 1986ல் மறைந்தார்.
அவர் நினைவை போற்றும் விதமாக அஞ்சல்தலை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
