PUBLISHED ON : செப் 03, 2022

வலிய மீன்!
தென் அமெரிக்க கண்டப் பகுதி ஆறுகளில் வசிக்கும் ஒரு வகை மீன், பிரன்ஹா. இது, 60 செ.மீ., நீளம் வரை வளர்கிறது. கூர்மையான கொக்கி போல், வலுவான பற்களைக் கொண்டிருக்கும். தாடை எலும்பு மிக வலிமையாக காணப்படும்.
இவற்றின் துணையால் மிகப் பெரிய விலங்கையும், சில நிமிடங்களில் கடித்து குதறி விடும் இந்த வகை மீன்கள். குதறிய விலங்கின் இறைச்சியை போட்டிப் போட்டு உண்ணும். மேலும், கூட்டமாக சேர்ந்து வேட்டையாடும் குணம் உடையது.
ஒரு கூட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் இருக்கும். இரையாகும் விலங்கை கண்டதும் தகவல் அனுப்பி, மற்ற மீன்களை திரட்டி வேட்டையாடி உண்ணும்.
பிறந்ததும் பறக்கும்!
கால்நடைகள் பிறந்த உடனேயே எழுந்து நிற்கும்; சில நிமிடங்களிலே நடக்கும். அதுபோல, முட்டையிலிருந்து வெளியே வந்த சில நிமிடங்களிலே பறக்க ஆரம்பித்து விடுகிறது ஒரு வகை பறவை. இதன் பெயர் மாலியோ.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் காணப்படுகிறது. இதன் முட்டை மிகப்பெரியது. அதிக சத்துக்கள் உள்ளதால், அந்த பகுதி மக்கள், தேடிப்பிடித்து உணவாக்கிவிடுகின்றனர். இதனால் அழிந்து வருகிறது இந்த பறவை இனம்.
இதைக் காப்பாற்ற, உலக உயிரின பாதுகாப்பு அமைப்புகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த வகை பறவை முட்டையை சாப்பிடும் மக்களை சந்தித்து பிரசாரமும் மேற்கொள்ளப்படுகிறது.
ஒராங்குட்டான்!
தாயன்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. உயிரினங்கள் எல்லாம் பெற்ற குட்டியை மிக நேசிக்கின்றன. அக்கறையாக அன்பை பொழிகின்றன.
சில விலங்குகளின் தாய்மை மிகவும் வித்தியாசமானது. அதில் ஒன்று ஒராங்குட்டான் குரங்கு வகை-. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் தனித்துவத்துடன் சுதந்திரமாக வாழும்.
குட்டிகள் பிறந்ததும் முதல் இரண்டு ஆண்டுகள், தாய் முதுகில் சுமந்து மிக பாதுகாப்பாக வளர்க்கும். இந்தக் காலத்தில் எந்த வகை உணவை உண்பது, அது எங்கு கிடைக்கும், பாதுகாப்பாக வசிக்க ஏற்ற இடங்களை எல்லாம் கற்றுக் கொடுக்கிறது.
குழந்தைகளே... உயிரினங்களின் மேலான பண்புகளை அறிந்து பின்பற்றுவோம்!
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
