PUBLISHED ON : செப் 03, 2022

செப்.,8 ஓணம் பண்டிகை!
மன்னர் ஆட்சியின் சிறப்பை கொண்டாடும் திருநாள் தான், ஓணம் பண்டிகை. மலையாள தேசத்தை ஆட்சி செய்தவன் மன்னன் மகாபலி. இவனது ஆட்சியில் வளங்களுடன் வாழ்ந்தனர் மக்கள். இதன் அடிப்படையில் கூறப்படும் புராணக் கதையை மையமாகக் கொண்டுதான் ஓணம் கொண்டாடப்படுகிறது.
அந்த கதையை பார்ப்போம்...
இரண்யன் என்ற அசுரனின் மகன் பிரகலாதன். தீவிர திருமால் பக்தன். பிரகலாதனின் மகன் விரோசனன். இவன் மனைவி தேவாம்பாள். இவர்கள் மகனே மகாபலி. பெற்றோர் இட்ட பெயர் இந்திரசேனன். தாத்தா பிரகலாதனின் நற்குணங்கள் நிரம்ப பெற்றிருந்தாலும், கொள்ளுத்தாத்தா இரண்யனுக்குரிய ஆணவம் மேலோங்கி இருந்தது.
யார் எதைக் கேட்டாலும், கொடுக்கும் நற்குணம் உள்ளவன் மகாபலி. அதற்கு ஏற்ப, நாட்டில் செல்வமும் குவிந்து கிடந்தது. மன்னன் மகாபலியை திருமாலுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவன் ஆணவத்தை அழித்தால் தான் புகழுடன் விளங்குவான் என எண்ணினார் திருமால்.
மகாபலியின் மனைவி பெயர் விந்தியாவளி. இவர்களுக்கு, 100 பிள்ளைகள் பிறந்தனர். அதில் பாணாசுரன், நமசு என்ற பிள்ளைகளே செல்வாக்கு பெற்றிருந்தனர். பெற்றோர் மீது அளவற்ற அன்பும் கொண்டிருந்தனர்.
ஒருமுறை, மன்னன் மகாபலியை காண, வாமனர் என்ற அந்தணர் உருவில் வந்தார் திருமால். அவர் மிகவும் குள்ளமாக காட்சி அளித்தார்.
உருவத்தை பார்த்து யாரையும் கேலி செய்யக் கூடாது. அது கடவுளையே கேலி செய்வதற்கு சமம் என்பதை உணர்த்தவே வாமனர் பெயரில் குள்ள வடிவம் எடுத்திருந்த திருமால், 'மன்னா... நான் கேட்பதை தானமாக தருவீரா...' என கேட்டார்.
தருவதாக வாக்களித்தான் மன்னன் மகாபலி.
மூன்றடி நிலம் மட்டும் கேட்டார் திருமால்.
'அதைவிட பெரிய இடமாகத் தருகிறேன்...' என்றான் மகாபலி.
உடனே விஸ்வரூபம் எடுத்தார், வாமனர் உருவில் இருந்த திருமால்.
தானம் தருவதாக வாக்களித்த பின், மீறுவது முறையல்ல என்பதை உணர்ந்தான். விண்ணையும், மண்ணையும் அளந்து நின்ற பின், 'மூன்றாம் அடிக்கு என்ன செய்யட்டும்...' என்று கேட்டார் திருமால்.
மனைவியுடன் தலை வணங்கிய மகாபலியை, அப்படியே பாதாள லோகத்துக்கு அனுப்பினார்.
இன்றும், அங்கு அவர்கள் வாழ்வதாக நம்பிக்கை நிலவுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தன்று, நாட்டு மக்களைக் காண மகாபலி வருவதாக நம்புகின்றனர், கேரள மக்கள். அவனை வரவேற்று, மகிழ்வுடன் விருந்து கொடுப்பதையே, ஓணம் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
தி. செல்லப்பா
