PUBLISHED ON : செப் 03, 2022

ஆலம்பாறை கிராமத்தில் வசித்தான் சிறுவன் கதிர்வேல். அன்று காலை வீட்டு வாசலில் அமர்ந்து பாடங்களை படித்து கொண்டிருந்தான். வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார் அவன் அம்மா பார்வதி. அதற்காக மெல்லிய தோகையுடைய துடைப்பத்தை பயன்படுத்தினார்.
வாசல்படியில் வரிசையாக ஊர்ந்து கொண்டிருந்த சிறு எறும்புகளை, அந்த துடைப்பத்தால் பூ போல தள்ளினார் அம்மா.
அதை கவனித்தவன், 'எறும்புகளை, துடைப்பத்தால் தள்ளினாலும், மறுபடியும் வரப் போகுது. அப்படியே அவற்றை அடித்து போட வேண்டியது தானே...' என்றான் கதிர்வேல்.
'எந்த உயிரினத்துக்கும் தீங்கு இழைக்க கூடாது; முடிந்தளவுக்கு காப்பாத்தணும்; எறும்புகளால் நமக்கு எவ்வித தொந்தரவும் கிடையாது; இதை மனதுக்குள் வெச்சுக்கோ...' என்று கூறினார் அம்மா.
மறுநாள் -
வழக்கம் போல், பள்ளிக்கு சென்றான் கதிர்வேல். வகுப்பில், வரலாற்று பாடத்தில் மன்னர் சாலமன் பற்றிய கதையை நடத்திய தமிழாசிரியர், 'வேகமாக பாய்ந்த குதிரையை நிறுத்தினார் மன்னர் சாலமன். பின், தனக்கு பின்னால் அணிவகுத்து வந்த வீரர்களையும் நிறுத்தினார். வீரர்கள் புரியாமல் குழம்பினர். குதிரையில் அமர்ந்தபடி, தரையை உற்று பார்த்து கொண்டிருந்தார் மன்னர் சாலமன். குறுக்கே, எறும்பு கூட்டம் அணி வகுத்தது...' என்று விளக்கினார்.
பின் கதையை நிறுத்தியபடி, 'மன்னர் சாலமன், படையை ஏன் அங்கு நிறுத்தியிருந்தார் என்பது பற்றி யாருக்காவது தெரியுமா...' என்று கேட்டார்.
'தெரியாது ஐயா...'
ஏக குரலில் தெரிவித்தனர் மாணவர்கள்.
'பாதையின் குறுக்கே, வரிசையாக சென்று கொண்டிருக்கும் எறும்பு கூட்டம் கலைய நேரிடும்; குதிரைகளின் காலடியில் மிதிப்பட்டு எறும்புகள் இறக்க கூடும் என்பதால் அப்படி செய்தார். ஊர்ந்த எறும்புகள் கடந்த பின், வீரர்களுடன் புறப்பட்டார்... அவரைப் போல், உயிரினங்களிடம் பிரிவும், அன்பும் காட்ட வேண்டும்...' என்று அறிவுரை கூறினார்.
அம்மா கூறியதை அப்போது எண்ணிப் பார்த்தான் கதிர்வேல்.
குழந்தைகளே... உயிரினங்களை துன்புறுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.
பூ.சுப்ரமணியன்
