
பயன் மிக்க பலா!
மா, பலா, வாழை முக்கனி எனப்படுகிறது. மலையாள மொழியில் பலாவை, 'சக்கை' என்பர். கிரேக்க வரலாற்று ஆசிரியர் டிலோ பிராடஸ் மிகப் பழங்காலத்தில் இதை, 'பெரிய மரங்களில் காய்க்கும் காய்' என குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடான இத்தாலி யாத்திரிகர் மார்கினொல்லோ, 'பலாப்பழம், ஆட்டுக்குட்டி அளவு இருக்கும்' என, 14ம் நுாற்றாண்டில் எழுதியுள்ளார்.
பசுமையான வட்ட வடிவ இலைகள் நிறைந்தது பலா மரம். நம் நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிகம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடலுார், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் அதிகம்.
பலா, மலைப்பாங்கான பகுதிகளில், 18 மீட்டர் வரை வளரும். கொத்துக் கொத்தாய் பூக்கும். காய் பழுத்தால் கவரும் வாசனை வரும். பழம் உருண்டையாய், 30 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும். பண்ருட்டி பகுதியில், 52 கிலோ எடையுள்ள பலா அறுவடை செய்யப்பட்டுள்ளது.
பழத்தின் மேல் தோல் தடிமனாய் முள் நிறைந்தது போலிருக்கும். உள்ளே, இனிப்பான சுளைகள் இருக்கும். தமிழகத்தில் மார்ச் முதல் ஜூன் வரை கிடைக்கும்.
பலாக்காயில் கறி சமைத்து உண்ணலாம். பலா மரம் கதவு, ஜன்னல், அலமாரி செய்யப் பயன்படுகிறது.
நீச்சல் கலை!
நீச்சல் கலை, கி.மு., 880ல் தோன்றியதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆஸ்திரேலிய நாட்டில் தான் இதற்கு விதிகள் உருவாக்கப்பட்டன. இங்கு, 19-ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் நீச்சல் முறைகள் மற்றும் விதிகளை, 47 பேர் கொண்ட குழு உருவாக்கியது.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், 1818ல், லிவர் பூல் கார்பரேஷன் என்ற அமைப்புதான் முதன் முதலாக உப்பு நீரில் நீச்சல் குளம் அமைத்தது. முறையாக நீச்சல் பயிற்சி அளித்த முதல் அமைப்பு ஒய்.எம்.சி.ஏ., தான். கடந்த, 1844ல் இதை துவங்கியது.
அமெரிக்கப் பள்ளிகளில் நீச்சல் ஒரு பாடமாக, 1900ல் சேர்க்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஜானிவெய்ஸ் முல்லர், நீச்சல் போட்டிகளை அறிமுகம் செய்தார். ஒலிம்பிக் விளையாட்டில், 1896ல் சேர்க்கப்பட்டது.
உடற்பயிற்சியால் கிடைக்கும் பலம், யோகா பயிற்சியால் வரும் புத்துணர்வு, தோட்டப் பணியில் கிடைக்கும் சக்தி அனைத்தும் நீச்சல் பயிற்சியில் கிடைக்கிறது. ஒரே நேரத்தில், உடலில் அனைத்து தசைகளையும் இயங்க வைக்கிறது நீச்சல். உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
நீச்சல் மன இறுக்கத்தை தளர்த்தி, அமைதி தரும். கவனத்தை ஒருநிலைப்படுத்தி நினைவாற்றலை வளர்க்கும். பெருங்குடல், நுரையீரல், வயிறு, இதயம், சிறுகுடல், பித்தப்பை, கல்லீரல், சிறுநீரகம் நீச்சல் பயிற்சியால் பலமடையும். தோலில் பளபளப்பு கூடும். முகத்தில் தெளிவு ஏற்படுத்தும்.
நீச்சலின் போது தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். காரணம், நீச்சல் குளத் தண்ணீரில் குளோரின், அமோனியா போன்ற ரசாயனங்கள் கலந்திருக்கும். நீச்சல் குளத்தில் எச்சில் துப்பவோ, மூக்கை சிந்தவோ, வாய் கொப்பளிக்கவோ கூடாது.
நீச்சல் பழகும் போது, முதலுதவி தெரிந்தவர்கள் அருகில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். நீச்சலுக்கு மூன்று மணி நேரத்துக்கு முன், உணவு உண்ணலாம்.
பெரியவர்கள் தினமும், 1 மணி நேரமும், சிறுவர்கள், 30 நிமிடமும் பயிற்சி எடுத்தால் நலமுடன் வாழலாம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

