PUBLISHED ON : ஜூன் 10, 2023

தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார் முனுசாமி.
''நானும் உங்களுக்கு உதவி செய்ய வரட்டுமா அப்பா...'' என்றான் மகன் பாபு. மகிழ்ச்சியுடன் வரவேற்றார். சுறுசுறுப்புடன் வேலை செய்தான்.
அப்போது, பப்பாளிச் செடி ஒன்று வளர்க்க விரும்புவதாக கூறினான் பாபு.
தோட்டக் கலையில் இருந்த ஆர்வம் கண்டு, புன்னகைத்தபடியே சம்மதம் தெரிவித்தார்.
அன்று ஒரு பப்பாளிச் செடியை நட்டான். அதற்கு தண்ணீர் ஊற்றி, கண்ணும் கருத்துமாக வளர்த்தான். அது, பூத்து காய்க்க துவங்கியது; காய்கள் பெரிதாக இருந்தன.
ஒன்று மஞ்சள் நிறமாக மாறியிருந்தது. அதில், பாதி அளவை அணில் மற்றும் பறவைகள் குடைந்து தின்றிருந்தன.
அதை கண்டதும் வருத்தத்துடன் அப்பாவிடம் தகவல் கூறினான் பாபு.
மறுநாள் மீதியிருந்த அந்த பழமும் விழுந்து சிதறியது; அதை எறும்புகளும், சிட்டுக் குருவிகளும் தின்றன. சிறிது நேரத்தில் விழுந்திருந்த இடமே தெரியாத அளவு தின்று தீர்த்துவிட்டன.
''முதன் முதலாக பழுத்த பழம் உண்ண கிடைக்காமல் போய் விட்டதே...''
அழாத குறையாக அப்பாவிடம் கூறினான் பாபு.
''உன் கவலை புரிகிறது... ஒரு உண்மையை புரிந்து கொள்ள முயற்சி செய்; விலங்கு, பறவைகள் கூடவே, பழம், செடி, கொடி, மரங்களும் வளர்கின்றன... அற்புதமானது இயற்கை...
''அங்கு விளையும் காய்கனிகளை நாம் மட்டுமே புசித்தால், அந்த உயிரினங்கள் உணவுக்கு என்ன செய்யும்... ஒரேயொரு பப்பாளி பழம், அணில், பறவைகள், எறும்பு என, எத்தனை உயிரினங்களுக்கு உணவாகியுள்ளது. இதை எண்ணிப் பார்...
''இதன் மூலம், இயற்கை சொல்ல வரும் செய்தியை புரிந்து கொள்... இயற்கையில் கிடைப்பதை மற்ற உயிரினங்களுடன் பகிர்ந்து உண்ண வேண்டும்...'' என்றார் முனுசாமி.
அப்பாவின் அறிவுரை கேட்டதும், ''இயற்கை உணர்த்தும், உண்மை தெளிவாக புரிந்தது...'' என மகிழ்ந்தான் பாபு.
தொடர்ந்து, பப்பாளியில் ஏராளமாக பழங்கள் கிடைத்தன. அவற்றை அக்கம் பக்கத்தவருடன் பகிர்ந்து சாப்பிட்டான் பாபு. மறக்காமல் சில பழங்களை அணில், பறவைகள் என உயிரினங்களுக்காக மரத்தில் விட்டு வைத்தான்.
குழந்தைகளே... பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை அன்றாட வழக்கமாக்குங்கள்!
- என்.கிருஷ்ண மூர்த்தி
