/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
அதிமேதாவி அங்குராசு! - அண்ணாந்து பார்ப்போம்!
/
அதிமேதாவி அங்குராசு! - அண்ணாந்து பார்ப்போம்!
PUBLISHED ON : அக் 25, 2013

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
ஆகாயத்தில் அதிசயமாக நாம் பார்ப்பதில் முக்கிய இடம் பிடிப்பது விமானங்கள்தான். சில வேளைகளில் அழியாத நெடுங்கோடாக புகை விட்டு கொண்டு பறக்கும் ஜெட் விமானங்கள் என்றால், சில நேரங்களில் நமக்கு ஓசை கூட கேட்கும் அல்லது கேட்பது போன்ற பிரமை ஏற்படும்.
விமானம் ஏறிப் பயணம் செய்யாதவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு முறையாவது ஏறி செல்ல வேண்டும் என்ற ஆசை எழுவது இயற்கைதான். ஆனால், அதில் அடிக்கடி சென்று பயணப்பட்டவர்களுக்கு கூட சில-பல சந்தேகங்கள் தோன்றி, தோன்றி மறையும்.
ஆசையாகவும், மகிழ்ச்சியாகவும், சில வேளைகளில், அச்சத்துடனும் விமானங்களில் செல்வோரே அதிகம். சில சந்தேகங்கள் விமானங்களில் ஏறி பயணிக்காதவர்களுக்கும் ஏற்படுமே!
விமானம் பறக்கும்போது திடீரென தூக்கி தூக்கி போடுவதும் அப்படியும் இப்படியும் அலை கழிப்பதும், குலுங்குவதும் பயணிப்பவரை குலை நடுங்க செய்துவிடும். அவர்களின் இந்த அச்சம் நியாயமானதா?
இல்லை... விமானத்தை அப்படியே தலை கீழாக தூக்கி போடும்படியோ, விண்ணிலிருந்து வீசி எறியும் வகையிலோ எதுவும் நடந்துவிடாது. காற்றழுத்தம் குறைவான வான் பகுதியில் விமானம் செல்லும்போது குலுங்குவது இயல்பானது. அது உங்களுக்கு அச்சத்தையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால், அதனால் விமானம் கீழே விழுந்து விடாது.
ஜெட் விமானத்தில் எல்லா இன்ஜின்களும் செயல் இழந்துவிட்டால், விமானத்தால் பத்திரமாக தரை இறங்க முடியுமா?
முடியும். மலையிலிருந்து கீழே இறங்கும் போது, உங்களுடைய கார் இன்ஜினை அணைத்துவிட்டால் எத்தனை ஆபத்தோ, அத்தனை ஆபத்து இதில் இருந்தாலும், விமானத்தை தொடர்ந்து இயக்கவும், தரையில் இறக்கவும் முடியும்.
விமானத்திலிருந்து எரிபொருளை கொட்டிவிட முடியும் என்று தெரிகிறது. விமானம் இறங்கும்போது எடை குறைய வேண்டும் என்பதற்காக இதை செய்கிறார்களா?
ஆமாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்ல. விமானம் மேலே எழும் போது இருக்கும் எடையை விட கீழே இறங்கும்போது இருக்கும் எடையானது அதற்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
நெருக்கடியான நேரங்களில் அந்த நெருக்கடியை குறைக்க, எரிபொருள் வெளியே கொட்டப்படுகிறது. இது அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பெரிய விமானங்களில்தான் சாத்தியம். சிறிய ரக விமானங்களில் கூடுதல் எரிபொருள் தீரும்வரை வானில் வட்டமடித்த பிறகே தரையில் இறங்குவர்.
விமானம் பறந்து கொண்டிருக்கும்போது அதை மின்னல் தாக்கினால் என்ன ஆகும்?
ஒரு சேதமும் ஏற்படாது. விமானத்தின் அலுமினியத்தாலான உடல் அதை கடத்தி விடும்.
விமானம் பறக்கும்போது கழிப்பறையில் உள்ளவை கீழே கொட்டி விடுமா?
இல்லை. விமானக் கழிப்பறையில் சேரும் கழிவுகள், விமானத்தின் கடைசிப் பகுதியில் உள்ள கழிவுத் தொட்டிக்கு அவ்வப்போது சென்றுவிடும். அது வெளியே சிந்தாது; சிதறாது.
விமானி அறையிலிருந்து வரும் மணி ஓசைக்கு என்ன அர்த்தம்?
இருவிதமான தேவைகளுக்காக மணி ஒலிக்கப்படும். முதல் வகை, இன்டர்காமில் பேசுங்கள் என்று விமான பணிக் குழுவினரை அழைப்பதற்காக.
இரண்டாவது, விமானம் 10 ஆயிரம் அடி உயரத்தை எட்டிய பிறகு சீட் பெல்டை பயணிகள் தளர்த்தலாம் என்று அறிவிப்பதற் காக, மீண்டும் தரை இறங்குவதற்கு முன்னால் சீட் பெல்டை போடுங்கள் என்று கூறுவதற்காக.
சில வேளைகளில் சீட் பெல்டை யாராவது போடவில்லை என்பதை விமானிகளின் முன்னால் உள்ள விளக்கு எரிந்து எச்சரித்தால், விமானப் பணிக்குழுவினருக்கு அதை தெரிவிப்பதற்காகவும்.
விமானம் பறக்க தொடங்கும்போதும், தரை இறங்கும்போதும், பயணிகள் தங்கள் முன்னால் இருக்கும் சீட் டிரேக்களை மூடி வைக்க வேண்டும். விளக்குகளின் வெளிச்சத்தை குறைக்க வேண்டும், சீட் பெல்டுகளை போட வேண்டும். கண்ணாடிகளை திரைபோட்டு மூடவேண்டும் என்றெல்லாம் சொல்வதேன்?
விமானம் திடீரென தன்னுடைய வேகத்தை இழந்தால் இருக்கையிலிருந்து நீங்கள் முன்னே வீசப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது நீங்கள் நிலைகுலையாமல் இருக்கவும், முன்புற சீட்டின் பின்னால் போய் முட்டிக்கொள்ளாமல் இருக்கவும் சீட் பெல்ட் போட்டு டிரேயை மூடி வைக்குமாறு கூறுவர்.
விளக்கு வெளிச்சத்தை குறைப்பதும் கண்ணாடிகளின் திரையை போடுவதும் விமானத்துக்குள் ஏதாவது பறந்து விழுகிறதா, நெருப்பு பிடித்து எரிகிறதா என்று விமான பணிப்பெண்கள் எளிதாக பார்ப்பதற்காகத்தான்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கை. பயணிகளின் நலனில், அக்கறை கொண்டே மேற்கொள்ளப் படுகிறது.
விமானம் பறக்கும்போது பயணிகள் நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காக விமானத்துக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைக்கப்படும் என்கிறார்களே?
சுத்த அபத்தம். அப்படி எங்கும் செய்வதில்லை.
விமானம் பறக்கும் போது பயணி யாராவது ஏடாகூடமாய் கதவை திறந்துவிட வாய்ப்பு இருக்கிறதா?
விமானம் பறக்கும்போது கதவுகளையோ அவசர வழிகளையோ யாராலும் திறக்க முடியாது. விமானி அறையில் உள்ள கட்டுப் பாட்டு அமைப்பு அதை அனுமதிக்கவே அனுமதிக்காது.
விமானத்தில் கைபேசிகளும், மடிக்கணினிகளும் ஆபத்தானவையா?
அது நேரத்தையும், சூழலையும் பொறுத்தது. கைபேசிகள் கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்யலாம் என்பதும் ஒரு காரணம்.
பல வேளைகளில் சோம்பேறித் தனத்தாலோ, இறங்கி வீட்டுக்கு போகும் அவசரத்திலோ சில பயணிகள் கைபேசிகளை மறந்து விமானத்திலேயே விட்டு செல்கின்றனர்.
இது தற்செயலா, திட்டமிட்டா என்று தெரியாதபோது பதற்றம் ஏற்படுகிறது. எனவேதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. விமானம் உயர கிளம்பும் போதே, தரை இறங்கும் போதோ அதில் ஏற்படும் வேக மாறுதல்களின்போது மடிக் கணினி கையிலிருந்து நழுவி வெகு வேகமாக பறக்க தொடங்கலாம்.
அப்போது அது யார் மீதாவது பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படலாம்.
டேப்லட்டுகள், மின் புத்தகங்கள் போன்றவற்றை விமானிகளே பயன்படுத்துவதால், அவற்றின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த லாமா என்று விமான பயண நிர்வாகிகள் சிந்தித்து வருகின்றனர்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.