PUBLISHED ON : ஜூலை 06, 2012

விளையாட்டில் இந்தியா சாதிப்பது என்பது உலக சாதனைகளில் ஒன்று எனலாம். அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட்டில் ஏதோ சில நேரம் வெற்றி. தேசிய விளையாட்டில் அரிதான வெற்றி. இதுபோல குழு விளையாட்டில் சாதிப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை.
ஆனால், பல தனி மனிதர்கள் தங்கள் திறனால் இந்தியாவை உலகின் உச்சிக்கு கொண்டு போய் உள்ளனர். அவர்களில் மிக மிக குறிப்பிடத்தக்கவர் நம்மவர்... நாம் வாழும் காலத்தவர் திரு.விஸ்வநாதன் ஆனந்த். அனைத்து இந்தியர்களுக்கும் கவுரவம் தந்து மகிழ வைத்துவிட்டார் ஆனந்த்.
5-வது முறையாக...
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஐந்தாவது முறையாக கைப்பற்றி அசத்தினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.
நடந்த பரபரப்பான 'டை-பிரேக்கரில்' இஸ்ரேலின் ஜெல் பாண்டை வீழ்த்தி, மீண்டும் மகுடம் சூடினார். ரஷ்யாவின் மாஸ்கோவில் உலக செஸ் சாம்பியன் ஷிப் தொடர் நடந்தது.
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 42, இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பாண்டு 43 இருவரும் மோதினர். மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின் 7வது மற்றும் 8வது சுற்றில் மட்டும், இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றனர். மற்ற 10 சுற்றுகள் 'டிரா' ஆனது. மூன்று வாரங்களாக நடந்த 12 சுற்று முடிவில் இரு வீரர்களும் தலா 6 புள்ளி பெற்றனர். இதையடுத்து வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய, போட்டி டை பிரேக்கருக்கு நடந்தது. இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் தரப்பட்டன.
முதல் டிரா: முதல் போட்டியில் கறுப்பு காய்களுடன் ஆனந்த் விளையாடினார். இப்போட்டி 32வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது.
ஆனந்த் முனனிலை: பின் இரண்டாவது போட்டியில் வெள்ளை காய்களுடன் போட்டியை துவக்கிய ஆனந்த், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து 77வது நகர்த்தலின் போது, ஜெல்பாண்டு தனது தோல்வியை ஒப்புக்கொள்ள ஆனந்த் 1.5-0.5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
மீண்டும் சமன்: மூன்றாவது போட்டியில், ஜெல்பாண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், குறிப்பிட்ட நேரத்துக்குள் போட்டி முடியாத நிலையில், 41வது நகர்த்தலில் போட்டி மீண்டும் 'டிரா' ஆனது. ஆனந்த் தொடர்ந்து முன்னிலையில் (2.0-1.0) இருந்தார்.
அசத்தல் வெற்றி: கடைசியாக துவங்கிய நான்காவது போட்டியை ஆனந்த் 'டிரா' செய்தாலே போதும் என்ற நிலையில் வெள்ளை காய்களுடன் ஆனந்த் போட்டியை துவக்கினார். இப்போட்டியும் 56வது நகர்த்தலுக்குப் பின், 'டிரா' ஆக, 2.5 புள்ளிகள் பெற்ற ஆனந்த், மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் 8 கோடி ரூபாயை பரிசாக தட்டிச் சென்றார். 2வது இடம் பெற்ற ஜெல்பாண்டு 6 கோடி ரூபாய் பரிசு பெற்றார்.
செஸ் அரங்கில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஆனந்த், ஐந்தாவது முறையாக (2000,07,08,10,12) பட்டம் வென்றது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்துயிர் பெற்ற 'செஸ்'!
செஸ் விளையாட்டின் சிறப்பை இந்தியா மீண்டும் கண்டுபிடித்து புத்துயிர் கொடுத்தது மிகுந்த பெருமையாக இருப்பதாக ஆனந்த் கூறினார். இவர் கூறுகையில், 'எனது இளமைக் காலத்தில் செஸ் விளையாட்டுக்கு இந்தியாவில் அவ்வளவாக வரவேற்பு இல்லை. செஸ் தொடர்பான விஷயங்கள் சென்னையில் மட்டுமே அதிகம் நடந்தது எனது அதிர்ஷ்டம். சோவியத் கலாசார மையம் சென்னையில் இருந்ததும் உதவியாக அமைந்தது. இந்தியா மீண்டும் செஸ் விளையாட்டின் சிறப்பை கண்டுபிடித்ததில் பெருமை அடைகிறேன். இதில் நானும் முக்கிய பங்கு வகித்தேன் என்பதை நினைக்கும் போது இன்னும் பெருமையாக உள்ளது' என்றார்.
பாராட்டு விழா!
இந்தியாவின் ஆனந்த், ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதனை கவுரவிக்கும் விதமாக ஆனந்துக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது மாளிகையில் தேநீர் விருந்து அளித்தார்.
அப்போது ஆனந்த் கூறியது, 'ரஷ்யாவுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரம்ப காலத்தில் சென்னையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் செஸ் விளையாடியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பின் ரஷ்யாவில் நடந்த நிறைய செஸ் தொடர்களில் பங்கேற்றுள்ளேன். தற்போது செஸ் விளையாட்டில் கம்ப்யூட்டர்களின் பங்கு அதிகம். ஆனாலும் செஸ் குறித்த நல்ல ஞானம் பெற்றவர்கள் தான், மற்றவர்களை காட்டிலும் கம்ப்யூட்டர்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். கம்ப்யூட்டர் மட்டுமே முழுமை பெறாது. மனிதர்களின் தொடர்பும் முக்கியமானது.
'டை-பிரேக்கர்' முறையில் வெற்றியாளருக்கு கோப்பை வழங்கியது சிறந்த முடிவே. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தேநீர் விருந்தில் பங்கேற்றதை மிகப்பெரும் கவுரவமாக கருதுகிறேன். உலக சாம்பியன் தொடர் குறித்து முழுமையாக அறிந்து வைத்திருந்தார். மிகவும் இனிமையாக பழகினார்,'' என்று ஆனந்த் கூறினார்.
முதல்வரின் ஊக்குவிப்பு!
இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்க்கும் நோக்குடன், கடந்த 1992ம் ஆண்டு தமிழ்நாட்டில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். மேலும், சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதுடன், அவர்கள் உயர்ந்த சாதனை புரியும் வகையில், பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கான ஊக்கத்தொகையும், இரு மடங்காக்கப்பட்டது.
தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த, விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையை பாராட்டி, தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் வழங்கினார். விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 7 வயது முதல் 17 வயதுள்ள மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த தலைமுறை செஸ் வீரர்களை உருவாக்கும். மேலும், ஆசிரியர்களும் செஸ் போட்டியில் பயிற்சி பெற வேண்டும். செஸ் போட்டியானது உயர்ந்த நிலைக்கு செல்ல தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்!' என்றார்.
ஹாட்ஸ் ஆப் விஸ்!
