தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கோகோவின் தந்திரம் !

கோகோவின் தந்திரம் !

கோகோவின் தந்திரம் !


PUBLISHED ON : ஜன 14, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 14, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நாட்டுத் தெனாலிராமனைப் போலவே புத்தி சாதுர்யத்திலும், பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றலிலும் வல்லவர் கோகா. இவர் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டவர். இவர் கற்பனைப் பாத்திரமல்ல, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தன் கையிலிருந்து ஒரு காசு கூட செலவழிக்காமல் தன் பேச்சு சாமர்த்தியத்தினால், இலவசமாக வயிறு நிரப்புவதில் சமர்த்தன் கோகா.

ஒருநாள் இவன் தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல விரும்பினான். அவரது வீடோ சற்றுத் தொலைவில் உள்ள ஊரில் இருந்தது. வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல் கிளம்பி விட்டான். சற்று நேரம் நடந்தவுடன் களைப்பு ஏற்பட்டது; தாகம் தொண்டையை வரட்டியது. எங்காவது சற்று நேரம் இளைப்பாறிச் செல்லலாம் என்று நினைத்து சுற்றும் முற்றும் பார்த்தான் கோகா. சிறிது தொலைவில் ஒரு ஈச்ச மரம் தெரிந்தது. அங்கு சென்று இளைப்பாறி விட்டுச் செல்ல நினைத்து கோகா அம்மரத்தின் அருகில் வந்தான்.

மர நிழலில் ஒருவன் வகை வகையான உணவுப் பொருட்களை வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கோகாவுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. அந்த ஆளுடன் எப்படியாவது உட்கார்ந்து உணவைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.

''உங்களுக்கு அமைதியும், இன்பமும் பொங்கட்டும்!'' என்று கூறிக் கொண்டே அந்த ஆளின் எதிரில் வந்து அமர்ந்தான். ஆனால், அவனோ ஒரு யந்திரத்தைப் போல், ''உங்களுக்கு அமைதியும், இன்பமும் பொங்கட்டும்!'' என்று உணர்ச்சியற்ற குரலில் பதிலுக்குக் கூறிவிட்டு கோகாவைக் கவனிக்காமல் மும்முரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

இப்படிப்பட்ட ஒருவனை தன் வாழ்நாளில் இப்போதுதான் முதன்முதலாக கோகா சந்திக்கிறான். எனவே, மனதில் ஏற்பட்டுள்ள எரிச்சலை அடக்கிக் கொண்டு சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அந்த ஆள் கோழிக் கறித்துண்டை எடுத்துக் கடிக்க ஆரம்பித்தான். அப்போது கோகா, ''எனக்கும் உங்கள் ஊர்தான். அதோடு உங்கள் கோத்திரம்தான்!'' என்று சொல்லித் தனது நெருக்கத்தைக் காட்டிக் கொண்டான். ''நான் ஊரை விட்டு வந்து வெகு நாட்களாகி விட்டன. என் மகன் மகமது எப்படி இருக்கிறான்?'' என்றான் அவன்.

''ஓ மகமதா! அவன் கெட்டிக்காரன் ஆயிற்றே. படிப்பிலும், விளையாட்டிலும் அவனை அடிக்க ஊரில் ஆளில்லை தெரியுமா?'' என்றான் கோகா.

''என் மகனாயிற்றே வேறு எப்படி இருப்பான்? சரி மகமதின் தாயார் எப்படி இருக்கிறாள்?'' என்றான் எந்த ஆள் சாப்பிடுவதை நிறுத்தாமலேயே.

அதற்கு கோகா, ''மகமதின் தாயா? பெண்ணினத்தின் மாணிக்கமாயிற்றே அவர். அவரைப் பெண் குலத்தின் திலகம் என்றல்லவா புகழ்கின்றனர்!'' என்றான்.

''என்னோட நாய் போல்டி, அதுதான் உடல் எல்லாம் சடையோடு இருக்குமே, அது எப்படி இருக்கிறது?'' என்றான் அவன்.

''அதுபோல ஒரு நாயை இப்போது பார்க்க முடியுமா? என்ன ஒரு அறிவு? என்ன ஒரு நன்றி? அவ்வளவு அன்பு. ஊருக்கே உங்கள் நாய் தான் காவல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மனிதரிடம் கூட அத்தனை நல்ல குணங்களைப் பார்க்க முடியாது!'' என்றான் கோகா.

''அது போகட்டும், எனது ஒட்டகம் மின்னல் எப்படி இருக்கிறது?''

அசட்டுச் சிரிப்போடு, ''மின்னல் என்று பெயர் வைத்தாலும் வைத்தீர்கள், அதன் வேகமும், மின்னல் மாதிரிதான். போதாக்குறைக்கு நல்லா கொழுத்து பெரிய திமிலோடு வளர்ந்திருக்கு!'' என்றான் கோகா.

''என்னோட பழைய வீடு என்ன ஆயிற்று?'' என்றான் அந்த ஆள்.

''பழைய வீடுக்கு என்ன குறைச்சல்? நல்லாதானே இருக்கு!'' என்று கோகா சொன்ன பதிலைக் கேட்டதும் அவன் திருப்தியோடு தலையை ஆட்டிக் கொண்டு மீண்டும் சாப்பாட்டில் கவனமானான். தனக்கே தெரியாத தனது ஊர், உற்றார், உறவினர், ஒட்டகம், நாய் எல்லாரையும் பற்றி மிகவும் உயர்வாகப் பேசியும் அவன் ஒருவாய் என்னோடு சாப்பிடேன் என்று கூப்பிடாத அந்த ஆளின் கஞ்சத்தனம் கோகாவை எரிச்சல்பட வைத்தது.

'எப்படியும் இந்த சாப்பாட்டை ஒரு கை பார்க்காமல் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன்' என்று கங்கணம் கட்டிக் கொண்ட கோகா சிறிது நேரம் யோசித்தான்.

அப்போது எலும்பும், தோலுமாக இருக்கும் நாய் ஒன்று அங்கு வந்து சேர்ந்தது. அதைக் கண்டதும் அந்த ஆள் கடகட வென்று சிரித்து விட்டு, ''இது ஒரு நாயா? எனது போல்டி எப்படி இருக்கும் தெரியுமா ஒரு கன்றுக் குட்டியைப்போல!'' என்று பீற்றிக் கொண்டான்.

''நீங்க சொல்றது உண்மைதான். ஆனால்...'' என்று இழுத்தான் கோகா.

''ஆனால் என்ன?'' என்றான் அந்த ஆள்.

'என்னத்த சொல்றது? உங்க ஒட்டகம் மின்னல் செத்துக் கிடந்தபோது, இந்த போல்டி ஆசையை அடக்க முடியாமல் அளவுக்கு அதிகமாக ஒட்டக இறைச்சியைத் தின்றுவிட்டு, வயிற்றுக் கோளாறு வந்து மண்டையைப் போட்டு விட்டதே!''

''என்ன மின்னல் செத்துப்போச்சா?''

''என்ன செய்வது. ஒருநாள் மகமதின் அம்மாவின் சமாதியின் மேலே மின்னல் தடுக்கி விழுந்து ஒரு காலை ஒடித்துக் கொண்டது. அதை ரொம்ப நாள் யாரும் கவனிக்கவில்லை. இளைத்துத் துரும்பாகி கடைசியிலே செத்துப் போனது. அது பெரிய கதைங்க!''

''அட ஆண்டவனே மகமதின் அம்மா இறந்து போய்விட்டாளா? இதென்ன சோதனை?'' என்று சொல்லிவிட்டு அந்த ஆள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

''நண்பனே! மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். சொல்வதற்கே மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்வது? ஒரு தாய் தன் மகனைப்பறி கொடுத்து விட்டு எத்தனை காலம்தான் உயிரோடு இருப்பாள்?'' என்றான் கோகா வருத்தத்தோடு.

''ஐயோ என் மகனும் இறந்து விட்டானா?'' என்று அந்த ஆள் துள்ளி எழுந்தான். தலை முடியைப் பிய்த்துக் கொண்டான். மரத்தில் தலையை மோதியபடி அழ ஆரம்பித்தான்.

''என் மகன் எப்படி ஐயா இறந்து போனான்?'' என்றான் அவன் துக்கம் தாங்காமல்.

''தூங்கிக் கொண்டிருந்த பிள்ளையின் மேலே உனது வீடு இடிந்து விழுந்தால் தாங்க முடியுமா? பிள்ளை இறந்து விட்டான்!''

''என்ன என் வீடும் இடிந்து விட்டதா? அடக் கடவுளே ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாய்? இது நியாயமா?'' என்று புலம்பினான் அவன்.

சிறிது நேரத்தில் அவன் மனநிலை குழம்பி விட்டது. ஆடைகளைக் கிழித்துக் கொண்டு பைத்தியம் பிடித்தவன் போல ஊரை நோக்கி ஓடினான்.

இதை எதிர்பார்த்துக் காத்திருந்த கோகா அந்த ஆளின் தலை மறைந்ததும், அவன் விட்டுப் போய்விட்ட சாப்பாட்டின் முன் உட்கார்ந்தான். மளமளவென்று சாப்பிட ஆரம்பித்தான்.

'என்ன வேடிக்கை மனிதன் அப்பா இவன்? எல்லாரைப் பற்றியும் நல்ல வார்த்தைகளைச் சொன்னபோது ஒரு வாய் சாப்பிடக் கொடுக்காதவன், எல்லாரையும் சாக அடித்ததுமே என்னை சாப்பிடச் சொல்லி விட்டு ஓடி விட்டானே. இவனுக்கு வேறு எப்படி புத்தி கற்பிப்பது?'

'முள்ளை முள்ளால் எடுத்தபோது வேதனை தாங்க முடியாமல் துடி துடித்துப் போய் விட்டான். இந்த தண்டனை இவனுக்கு வேண்டியதுதான்' என்று சொல்லிக் கொண்டே தன்னால் முடிந்த அளவிற்கு சாப்பிட்டு விட்டு, மீதியை எலும்பும், தோலுமாக நின்ற நாயிடம் எறிந்து விட்டு தனது ஊரைப் பார்த்து நடையைக் கட்டினான் கோகா. ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us