PUBLISHED ON : நவ 11, 2023

சென்னை, சூளை, இந்து ஒற்றுமைக் கழக மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 6ம் வகுப்பு படித்தேன். ஆண்டு கல்விக் கட்டணமாக, 120 ரூபாய் செலுத்த வேண்டும் என, பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இது கேட்டு என் பாட்டி அதிர்ந்து விட்டார்.
அந்த காலத்தில் என் குடும்பத்துக்கு அது மிகப் பெரியத் தொகை. கட்டண சலுகை வழங்க, தலைமை ஆசிரியர் த.கிருட்டிணசாமியை சந்தித்து முறையிட்டார் பாட்டி. திட்டவட்டமாக மறுத்தவரிடம், 'பேரன் நன்றாக படிப்பான். அதற்காக கட்டணத்தை குறைக்க கூடாதா...' என பரிந்தார். பல்வேறு விளக்கம் அளித்து பார்த்தார்; அசையவில்லை பாட்டி.
வேறு வழியின்றி, 'தம்பி... 20 திருக்குறளை மனப்பாடமாக்கி ஒப்பித்து காட்டு. கட்டணத்தில், 20 ரூபாய் குறைக்க சொல்கிறேன்...' என்றார். சிறிதும் தாமதியாமல், 'கடகட' வென ஒப்புவித்தேன். மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து வெகுவாக பாராட்டி, 'கல்வி கட்டணம் முழுமையாக செலுத்த வேண்டாம்...' என சலுகை தந்து செயல்படுத்தினார். நல்ல ஆலோசனைகள் வழங்கினார்.
என் வயது, 45; கட்டட தொழில்நுட்பவியல் தொடர்பான பத்திரிகையில் முதன்மை ஆசிரியராக பணியாற்றுகிறேன். என் மொழி அறிவுக்கும், பலமொழி புலமைக்கும் அந்த பள்ளியே ஆதாரமாக அமைந்துள்ளது. என் திறனை அறிந்து ஊக்குவித்து உதவிய தலைமை ஆசிரியரை நன்றியுடன் வணங்குகிறேன்.
- பா.சுப்ரமண்யம், சென்னை.
தொடர்புக்கு: 86108 89799
